Sunday, April 26, 2020

Faith in God


Quote


Hare Rama Hare Krishna


சிரிப்பதே உன் வாடிக்கை


சிரிப்பதே உன் வாடிக்கை

இதிலொரு வேடிக்கை

ஆரும் சொல்வதோ நீயொரு உக்ரன்

காண்பதிங்கோ சௌம்யன்

இடையில் பிராட்டி

அவளோ சீமாட்டி

என்றோ நீ கிழித்தாய் இன்று ஊதிவிடு

எதுவுமே சாத்யமுனக்கு

சிரித்தே செய் நீ

சீக்கிரம் கருணி

ஒழியட்டுமே நுண்மி

போகட்டுமே பயம்

பரவட்டுமே அமைதி

பாடட்டுமே கவிகள்

பெறட்டுமே ஆனந்தம்!


சரணடையுங்கள்






மற்றுமோர் தெய்வ முண்டே? மதியிலா மானிடங்காள்!

உற்றபோதன்றி நீங்கள் ஒருவனென்று உணர மாட்டீர்

அற்றமே லொன்றறியீர் அவனல்லால் தெய்வமில்லை

கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் நீரே.

ஆபத்துக் காலங்களில் மட்டும் அவனை நம்புகிறீர்கள்!

மற்ற தருணங்களில் அவனை நினைப்பதில்லை!! மனிதர்களே!

கண்ணனைத் தவிர வேறு ஒரு தெய்வமுண்டோ?

வேதத்தின் சாரமே அவன்தான்! அவனன்றி தெய்வமில்லை!

ஆதலால் அவனது திருவடிகளில் சரணடையுங்கள்!!

பகவானிடம் பக்தி

பகவானிடம் பக்தி கொள்பவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில்லை.

பக்தி என்பது அவரவர் மனோபாவத்திற்கு ஏற்றதாக அமைகிறது. இப்படி பக்தியை ஒன்பது விதமாக வகைப்படுத்த முடியும்.

சிரவணம் - பகவானுடைய நாமங்களையும், அவனுடைய கல்யாண குணங்களையும் கேட்பது.

கீர்த்தனம் - பகவானின் பெருமைகளைப் பேசுவது.

ஸ்மரணம் - எப்பொழுதும் பகவானை நினைத்துக் கொண்டிருப்பது.

பாத சேவனம் - பகவான் கால்களில் விழுந்து வணங்குவது.

வந்தனம் - பகவானை வணங்குவது, அவனைப் போற்றுவது.

அர்ச்சனம் - பகவானுக்கு மலர்களையும், கனிகளையும் கொடுத்து மகிழ்வது.

தாஸ்யம் - பகவானின் வேலைக்காரனாக நடந்து கொள்வது.

ஸக்யம் - பகவானிடம் நட்பு கொள்வது.

ஆத்ம நிவேதனம் - பகவானுக்காகத் தன் உயிரையே தியாகம் செய்வது.

இராமாயணத்தில் இந்த ஒன்பது வகையான பக்திக்கும் சிலரை
உதாரணமாகக் கொள்ள முடியும்.

ச்ரவண பக்தி - அனுமார் - இராம நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தவர்.

கீர்த்தன பக்தி - வால்மீகி - இராமாயணம் இயற்றியவர்.

ஸ்மரண பக்தி - சீதை - அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதை இந்த பத்து மாதம் இராமனையே நினைத்திருந்தாள்..

பாதசேவன பக்தி - பரதன் - இராமனின் பாதுகையை இராமனாக நினைத்து வணங்கியவன்.

வந்தன பக்தி - வீபீஷணன் இராவணனின் தம்பியானவன்,
இராமனையே வணங்கி வந்தான்.

அர்ச்சன பக்தி - சபரி - இராமனுக்கு நல்ல பழங்களைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பழத்தையும் தானே கடித்துப்பார்த்து அளித்தவள்.

தாஸ்ய பக்தி - இலட்சுமணன் - இராமனுடனேயே இருந்து அவரதி
சொல்படி நடந்தவன்.

ஸக்ய பக்தி - சுக்ரீவன் - இராமனுடன் நட்பு கொண்டவன்.

ஆத்ம நிவேதனம் - ஜடாயு இராவணனிடமிருந்து சீதையைக்
காப்பாற்ற முயன்று தன் உயிரைக் கொடுத்தவர்.

இந்த ஒன்பது வகை பக்தியில் எது சிறந்ததாக கருதப் படுகிறது?

நமக்கு பார்க்க பிடிக்காத விஷயங்களை கண்ணை மூடிக்கொண்டு தவிர்க்கலாம்.

பேச பிடிக்கவில்லை என்றால், வாயை மூடிக் கொள்ளலாம்.

ஆனால் நல்ல விஷயங்களை எப்போதுமே கேட்கவேண்டும் என்பதற்க்காக தான் காது திறந்தே இருக்கிறது.

நடந்து கொண்டே இருந்தால், கால் வலிக்கும்.

பார்த்துக் கொண்டே இருந்தால் கண் வலிக்கும்.

பேசிக்கொண்டே இருந்தால் வாய் வலிக்கும்.

எழுதிக் கொன்டே இருந்தால் கை வலிக்கும்.

ஆனால் கேட்டுக்கொண்டே இருந்தால் காது வலிக்காது.

அதனால் எப்பொழுதும் நல்ல விஷயங்களை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்..


கிடப்பேன் உன்னிடம்


கிடப்பேன் உன்னிடம்
பேசுவேன் உன் புகழ்

உறைவேன் உன் பாதம்
உணர்வேன் உன் மகிமை

செய்வேன் பணிவிடை
சொல்வேன் உன் திருநாமம்

விடுவேன் அகங்காரம்
பெறுவேன் உன் கடாக்ஷம்

காத்திருப்பேன் காலடியில்

திருமாலிஞ்சோலை அழகன் துதி

திருமாலிஞ்சோலை அழகன் துதி

கோவிந்தா ஹரி கோவிந்தா!!!
கோவிந்தா ஹரி கோவிந்தா!!!
.
துணையுண்டு நீயடா கோவிந்தா - இனி
துயரங்கள் ஏதடா கோவிந்தா.
.
காசு பணம் வேண்டாமே கோவிந்தா - உந்தன்
காலடி போதுமே கோவிந்தா.
.
எண்ணமெல்லாம் நீயடா கோவிந்தா - என்
எல்லாமும் நீயடா கோவிந்தா.
.
கொஞ்சல் சிரிப்பாலே கோவிந்தா - நெஞ்சில்
தஞ்சம் புகுந்தோனே கோவிந்தா.
.
தடையேதும் இல்லையடா கோவிந்தா - உன்னை
தரிசனம் செய்தாலே கோவிந்தா.
.
மகிமைகள் செய்வோனே கோவிந்தா - உன்
மலையேறி வருவோமே கோவிந்தா.
.
திருநாமம் சூடினோம் கோவிந்தா - நிந்தன்
திருமேனி தரிசித்தோம் கோவிந்தா.
.
சொக்கிகிக் கிடப்போமே கோவிந்தா - இனி
சொர்க்கம் என வேண்டுமோ? கோவிந்தா.
.
வாழ்கை செழிக்கிதடா கோவிந்தா - உன்னை
வணங்கிப்போனாலே கோவிந்தா.
.
மறுபடியும் வருவோமே கோவிந்தா - வண்ண
மலர் பூத்த மாறோனே கோவிந்தா.
.
கோவிந்தா ஹரி கோவிந்தா!!!
கோவிந்தா ஹரி கோவிந்தா!!!


வரதா வரதா வரதா


முன்புறம் கேசவன் முற்றிலும் காக்க!

பின்புறம் நாரணன் பேணிக் காக்க !

மேற்புறம் மாதவன் மிடுக்குடன் காக்க!

மேற்கில் கோவிந்தன் மெலிவின்றிக் காக்க !

வடக்கில் விஷ்ணு வண்ணமாய் காக்க!

வடகிழக்கில் மதுசூதனன் காக்க !

தென்கிழக்கில் திருவிக்ரமன் காக்க !

தென்மேற்கில் வாமனன் தேசுறக் காக்க !

கிழக்கில் ஸ்ரீதரன் கேடின்றிக் காக்க !

எழிர்தெற்கில் ரிஷிகேசன் காக்க !

வடமேற்கில் பத்மநாபன் காக்க !

சடுதியில் அகந்தாமோதரன் காக்க !


ஸ்ரீரங்கம் ஏழின் (7) சிறப்பு...!!!


*ஸ்ரீரங்கம் ஏழின் (7) சிறப்பு...!!!*

01. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு ரகாரங்களுடன் ஏழு மதில்களை கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் கோவில்

02. ஏழு பெரிய பெருமை உடைய

1) பெரிய கோவில்.,
2) பெரிய பெருமாள்.,
3) பெரிய பிராட்டியார்.,
4) பெரிய கருடன்.,
5) பெரியவசரம்.,
6) பெரிய திருமதில்.,
7) பெரிய கோபுரம்.,

இப்படி அனைத்தும்*பெரிய* என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்

03. ஸ்ரீரங்கம் அரங்கனாதருக்கு ஏழு நாச்சிமார்கள்

1) ஸ்ரீதேவி.,
2) பூதேவி.,
3) துலுக்க நாச்சியார்.,
4) சேரகுலவல்லி நாச்சியார்.,
5) கமலவல்லி நாச்சியார்.,
6) கோதை நாச்சியார்.,
7) ரெங்க நாச்சியார் ஆகியோர்....

04. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாஹனத்தில் எழுந்தருளுவார்

1) விருப்பன் திருநாள்.,
2) வசந்த உற்சவம்.,
3) விஜயதசமி.,
4) வேடுபரி.,
5) பூபதி திருநாள்.,
6) பாரிவேட்டை.,
7) ஆதி பிரம்மோத்சவம்., ஆகியவை....

05.ஸ்ரீரங்கம் கோவிலில் வருஷத்திற்கு ஏழு முறை (மாதங்கள்) நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார்

1) சித்திரை.,
2) வைகாசி.,
3) ஆடி.,
4) புரட்டாசி.,
5) தை.,
6) மாசி.,
7) பங்குனி....

06.ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் ஏழாம் திருநாளன்று வருஷத்திற்கு ஏழு முறை (மாதங்கள்) நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுவார்..

1) சித்திரை.,
2) வைகாசி.,
3) ஆவணி.,
4) ஐப்பசி.,
5) தை.,
6) மாசி.,
7) பங்குனி....

07.* ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்திரி உற்சவத்தில்.

ஏழாம் திருநாளன்று ஸ்ரீரங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்

08. தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும்*
(30 நாட்களும்) தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.

09.* ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். *ராமாவதாரம் ஏழாவது* அவதாரமாகும்.

10.இராப்பத்து ஏழாம் திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.*

11.ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும்.

1) கோடை உற்சவம்.,
2) வசந்த உற்சவம்.,
3) ஜேஷ்டாபிஷேகம்., திருப்பாவாடை.,
4) நவராத்திரி.,
5) ஊஞ்சல் உற்சவம்.,
6) அத்யயநோத்சவம்.,
7) பங்குனி உத்திரம்....

12.பன்னிரண்டு ஆழ்வார்களும் ஏழு சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள்

1) பொய்கையாழ்வா., பூதத்தாழ்வார்., பேயாழ்வார்.,
2) நம்மாழ்வார்., திருமங்கையாழ்வார்., மதுரகவியாழ்வார்.,
3) குலசேகராழ்வார்.,
4) திருப்பாணாழ்வார்.,
5) தொண்டரடிப் பொடியாழ்வார்.,
6) திருமழிசையாழ்வார்.,
7) பெரியாழ்வார்., ஸ்ரீஆண்டாள்....

13.இராப்பத்து ஏழாம் திருநாள் நம்மாழ்வார் பராங்குச நாயகி அலங்காரத்தில் வருவதால் அன்று மட்டும் ஸ்ரீஸ்தவம் மற்றும் ஸ்ரீகுணரத்ன கோசம் சேவிக்கப்படும்....

14.பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் ஏழு கோபுரங்கள் உள்ளன

1) நாழிகேட்டான் கோபுரம்.,
2) ஆர்யபடால் கோபுரம்.,
3) கார்த்திகை கோபுரம்.,
4) ரங்கா ரங்கா கோபுரம்.,
5) தெற்கு கட்டை கோபுரம் - I.,
6) தெற்கு கட்டை கோபுரம் - II.,
7) ராஜகோபுரம்....

15.ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார்.

1) வசந்த உற்சவம் ~ நீராழி மண்டபம்.,
2) சங்கராந்தி ~ சங்கராந்தி மண்டபம்.,
3) பாரிவேட்டை ~ கனு மண்டபம்.,
4) அத்யயநோற்சவம் ~ (தெரிந்தவர்கள் கூறுங்கள்)
5) பவித்ர உற்சவம் ~ பவித்ர உற்சவ மண்டபம்.,
6) ஊஞ்சல் உற்சவம் ~ ஊஞ்சல் உற்சவ மண்டபம்.,
7) கோடை உற்சவம் ~ நாலுகால் மண்டபம்....

16.ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும்..

1) பூச்சாண்டி சேவை.,
2) கற்பூர படியேற்ற சேவை.,
3) மோகினி அலங்காரம்., ரத்னங்கி சேவை.,
4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம்.,
5) உறையூர்., ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை.,
6) தாயார் திருவடி சேவை.,
7) ஜாலி சாலி அலங்காரம்....

17.திருக்கோயில் வளாகத்தில் உள்ள ஏழு மண்டபங்களில் நம்பெருமாள் ஒரு நாள் மட்டுமே எழுந்தருள்வார்...*

1) நவராத்ரி மண்டபம்.,
2) கருத்துரை மண்டபம்.,
3) சங்கராந்தி மண்டபம்.,
4) பாரிவேட்டை மண்டபம்.,
5) சேஷராயர் மண்டபம்.,
6) சேர்த்தி மண்டபம்.,
7) பண்டாரம் ஆஸ்தான மண்டபம்....

18.திருக்கோவிலில் உள்ள ஏழு பிரகாரங்களிலும் பெருமாளின் ஏழு திருவடிகள் உள்ளன.*

19.ஏழு பிரகாரங்களிலும் ஏழு திருமதில்கள் அமையப் பெற்றுள்ளன.*

20.திருக்கோயில் வளாகத்தில் ஏழு ஆச்சார்யர்களுக்கும் தனி சன்னதி உள்ளது...

1) ராமானுஜர்.,
2) பிள்ளை லோகாச்சாரியார்.,
3) திருக்கச்சி நம்பி.,
4) கூரத்தாழ்வான்.,
5) வேதாந்த தேசிகர்.,
6) நாதமுனி.,
7) பெரியவாச்சான் பிள்ளை....

21.சந்திர புஷ்கரிணியில் ஆறு முறையும்.,கொள்ளிடத்தில் ஒருமுறையும், இப்படியாக ஏழு முறைசின்ன பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்வார்..

1) விருப்பன் திருநாள்- சித்திரை மாதம்.,
2) வசந்த உற்சவம்- வைகாசி மாதம்.,
3) பவித்ரோத்சவம்- ஆவணி மாதம்.,
4) ஊஞ்சல் உற்சவம்- ஐப்பசி மாதம்.,
5) அத்யயன உற்சவம்- மார்கழி மாதம்.,
6) பூபதி திருநாள்- தை மாதம்.,
7) பிரம்மோத்சவம் - பங்குனி மாதம்....


22. நம்பெருமாள் மூன்று முறை எழுந்தருளும் ஏழு வாஹனங்கள்..

1) யானை வாஹனம்-சித்திரை., தை., மாசி.,
2) தங்க கருடன் வாஹனம்- சித்திரை., தை., பங்குனி.,
3) ஆளும் பல்லக்கு- சித்திரை., தை., பங்குனி.,
4) இரட்டை பிரபை- சித்திரை., மாசி., பங்குனி.,
5) சேஷ வாஹனம் - சித்திரை., தை., பங்குனி.,
6) ஹனுமந்த வாஹனம் - சித்திரை., தை., மாசி.,
7) ஹம்ச வாஹனம்- சித்திரை., தை., மாசி....

23. மாசி மாதம் நடைபெறும் திருப்பள்ளியோடம் திருவிழாவில் நம்பெருமாள்...

*ஏழு வாஹனங்களில் மட்டும்* உலா வருவார்.

24.

கற்பக விருட்சம்.,
ஹனுமந்த வாஹனம்.,
சேஷ வாஹனம்.,
சிம்ம வாஹனம்.,
ஒற்றை பிரபை ஆகிய இந்த ஐந்து வாஹனங்கள் தங்கத்திலும்...

யாளி வாஹனம்., இரட்டை பிரபை ஆகிய இந்த இரண்டு வாகனங்கள் வெள்ளியிலும்...

ஆகிய *ஏழு வாஹனங்களை தவிர* மற்ற அனைத்து வாகனங்கள் வெள்ளியிலோ அல்லது தங்கத்திலோ ஆனது.


25. மற்ற கோவில்களில் காண முடியாதவை..

1) தச மூர்த்தி.,
2) நெய் கிணறு.,
3) மூன்று தாயார்கள் ஒரே சன்னதியில்.,
4) 21 கோபுரங்கள்.,
5) நெற்களஞ்சியம்.,
6) தன்வந்தரி.,
7) நான்கு திசைகளிலும் ராமர் சன்னதி.

கொடுக்கப்பட்டுள்ள 25ல் இரண்டையும்., ஐந்தையும் கூட்டினால் வருவது ஏழு.*(2 + 5 = 7)*

பூலோக வைகுண்டத்தில் அரங்கனை நினைத்தாலே மோட்சம் கிட்டும் ‌


ராம நாம மகிமை (Rama nama mahimai

ராம நாம மகிமை (Rama nama mahimai) :

1. நமக்கு நன்மை வரவேண்டுமானால் 'ராம நாமத்தை' இடைவிடாமல் கூறவேண்டும். நமது ஒவ்வொரு மூச்சும் 'ராம் 'ராம்' என்றே உட்சென்றும் , வெளியேறுதலும் வேண்டும்.

2. நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே
மிகச்சிறந்த பிராயசித்தம். அறிந்தே செய்த தவறானால் அதற்கு வருந்துவதும் , தண்டனையை ஏற்பதுவும், பிராயசித்தமும் ராம நாமமே. காலால் நடக்கும் ஒவ்வொரு அடியும் 'ராம் ' என்றே நடக்கவேண்டும் .

3. எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் 'ராம நாம ஜெபமே.' கிழக்கு நோக்கி செல்ல செல்ல மேற்கிலிருந்து விலகிடுவோம். அதுபோல ராம நாமாவில் கரைய கரைய துக்கத்திலிருந்து விலகிசெல்கிறோம்.

4. ' ராம நாம' ஜெபத்திற்கு குரு கிடைக்கவேண்டும் என்று கால தாமதம் செய்தல் கூடாது. ஏனெனில் 'ராம நாமமே ' தன்னுள் குருவையும் கொண்டுள்ளது . நாமமே பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம்.

5. காலை படுக்கையில் விழிப்பு வந்தவுடனே சொல்லவேண்டியது 'ராம நாமம்.' எழுந்து கடமைகளை செய்யும்போதும் சொல்லவேண்டியதும் 'ராம நாமம்.' அந்த நாள் நமக்கு 'ராம நாம' நாளாக இருக்கவேண்டும்.

6. ' ராம நாம ' ஜெபத்தில் நாம் இருந்தால் , நமது கர்ம வினையின்படி ஏதேனும் துக்கமோ , அவமானமோ நிகழவேண்டியதாயின் அவைகள் தடுக்கப்படும் அல்லது நமக்கு அது பாதிப்பு இன்றி மாற்றி அமைக்கப்படும். பாதிப்பினை தாங்கும் வலிமையையும், அதுவும் பிரசாதமாக ஏற்கும் பக்குவமும் வரும்,

7. எந்த இடத்திலும், எந்த நிலையிலும் 'ராம நாமா' சொல்லலாம். எங்கும் உணவு உண்ணுமுன் 'ராம நாமா' சொல்லிசாப்பிடலாம். இறைவனும் அவனது நாமாவும் ஒன்றே!


8. 'ராம நாமா' எழுத மனம், உடம்பு, கைகள் ஒருமித்து செயல்படவேண்டும். ஆனால் 'ராம நாமா' சொல்ல மனம் மட்டும் போதும்.

இதைதான் "நா உண்டு, நாமா உண்டு" என்றனர் பெரியோர்கள் .

9. ஒரு வீட்டில் உள்ள பெண் 'ராம நாமா' சொன்னால் அந்த பெண்ணின் குடும்பம், கணவன் குடும்பம், குழந்தைகள், பெற்றோர்கள் அனைவரும் பிறப்பு, இறப்பு சக்கரத்திலிருந்து விடுபடுவார்கள். அந்த வீட்டினில் தெய்வீகம் நிறைந்துவிடும். அதுவே கோவிலாகும் .

10. எல்லாவித சாஸ்திர அறிவும் 'ராம நாமாவில் அடங்கும். எல்லாவித நோய்களுக்கும் 'ராம நாமா' சிறந்த மருந்து, துன்பங்களுக்கும் அதுவே முடிவு .

11. நமது இலட்சியம் அழியா ஆனந்தமே. அது 'ராம நாம ஜெபத்தால் பெற முடியும். 'ராம நாமாவினால் வினைகள் எரிந்து, எரிந்து நோய்கள் குறையும். சஞ்சிதம், ஆகாமியம் கருகி ப்ராரப்தம் சுகமாக அனுபவித்து ஜீரணிக்கபடும்.

12. நமது பயணத்தில் பஸ்சிலோ, காரிலோ , ரயிலிலோ, பைக்கிலோ செல்லும்போதும் 'ராம நாமா' சொல்லலாம். அதனால் விபத்துக்கள் தவிர்க்கப்படும்.

காசி விஸ்வநாதர் கோவிலில் மாலை வழிபாட்டின் போது ( சப்தரிஷி பூஜையின் போது )
ஒவ்வொரு நாளும், வில்வ தளங்களில் சந்தனத்தால் ராம நாமம் எழுதி, அவற்றை விஸ்வநாதருக்கு சமர்ப்பிக்கிறார்கள்.

13. பெண்களின் மாதாந்திர நாட்களிலும் 'ராம நாமா' சொல்லுவதன் மூலம் அந்த பிரபஞ்ச சக்தியிடமே அடைக்கலமாகிறோம்.'ராம நாமா' சொல்ல எந்த ஒரு விதியும் இல்லை. மனமிருந்தால் மார்க்கமுண்டு.

பெண்கள் சமைக்கும்பொழுது ராம நாமம் சொல்லி சமைத்தால், அந்த உணவே ராம பிரசாதமாகி ......அதை உண்பவருக்கு தூய குணங்களையும் , நோயற்ற தன்மையையும் அவர்களது உடல் ஆரோக்கியத்தையும் பெறும். நோய்கள் இருப்பின் குணமாகும்.

14. வேதங்களின் படி ஒருவன் புண்ணிய நதிகளில் நீராடி பின்பு வேதம் கற்று, பூஜைகளை நியதிப்படி செய்தவனாய், யோகியாய் முந்தய ஜன்மங்களில் வாழ்ந்தவனாக இருந்தால், சுமார் 40,00,000 பிறவிகளை கடந்தவனாக இருந்தால் மட்டுமே அவனால் 'ராம நாமா' வை ஒரு முறை சொல்லமுடியும்.

15. 'ராம நாமாவை உரக்க சொல்லுங்கள். காற்றில்
ராம நாம அதிர்வு பரவி, உங்களை சுற்றிலும் காற்றில் ஒரு தூய்மையை ஏற்படுத்தும். கேட்கும் மற்றவருக்குள்ளும் அந்த தூய அதிர்வு ஊடுருவி தூய்மை மற்றும் அமைதியை கேட்பவருக்கும் தரும்.

சுற்றியுள்ள மரம், செடி கொடிகள் , பறவைகள், விலங்குகள் எல்லாம் 'ராம நாமா' கேட்டு கேட்டு ..... அவைகளும் மிக உயர்ந்த பிறவிகளை பெறலாம். இதுவும் சேவையே! ..... யார் அறிவர்? நமது முந்தய பிறவிகளில் நாமும் 'ராம நாமா' கேட்டு கேட்டு இப்போதைய பிறவியினை பெற ஏதேனும் ஒரு பக்தரின் வீட்டருகில் மரமாய், ..செடியாய் ...பறவையாய் ....விலங்காய் இருந்தோமோ ! என்னவோ ........ அப்புண்ணிய பலனை ..... ராமனே அறிவான்.

'ராம நாமா' சொல்லும்பொழுது ஏற்படும் தூய அதிர்வானது காற்றில்
பதிந்துள்ள மனிதர்களின் தீய எண்ணங்களால் ஏற்பட்ட தீய அதிர்வுகளை ,தீய சக்திகளை....... .....நோய்க்கிருமிகளை அழித்துவிடும்.



'ராம நாமா அதிர்வு நமது ரத்தத்தில் உள்ள DNA மற்றும் gene coding...இல் உள்ள குணங்களுக்கு காரணமான ........கோபம் , வெறுப்பு, பொய், பொறாமை , சூது, போன்ற தீய குணங்களின் தன்மைகளுக்கு காரணமான....gene coding யை அழித்து .........ராம நாம அதிர்வு ..........சாந்தம் , பொறுமை , பணிவு , உண்மை........ தூய்மைக்கு காரணமான ராமரின் குணங்களை ஏற்படுத்தும்.('யத் பாவோ தத் பவதி'--எதை நினைக்கிறாயோ அதுவே ஆகிறாய்!)

'ராம நாமா' சொல்ல சொல்ல .........பரப்ரம்மமே ஆகிவிடுகிறோம் .

அகில உலகையும் வியாபித்து காக்கும் விந்தை மிக்கதோர் நுண்ணிய சக்தியே " ராம் ".

அதுவே உருவம் கொண்டபோது , தசரத ராமனாக , சீதாராமானாக, ரகுராமனாக , கோதண்ட ராமனாக பெயருடன் ( நாம ரூபமாக ) வந்தது.

உண்மையில் சத்தியமாம் ஒரே உண்மை ராம் ஒருவனே. ராம் அனைத்திலும் உள்ளான், அனைத்தும் ராமில் உள்ளன. ராம் ஒருவனே உண்மையான , பேரன்பே வடிவான உணர்வுமய வஸ்து .........பிரம்மம் என்பதும் அவனே !

எண்ணம் , மனம் ,செயல் , உள்ளம் , உயிர் அனைத்தும் ராமில் ஒடுங்கவேண்டும்.

இடைவிடாது ராம நாமத்தை ஜெபித்து வந்தால் அழியா இன்பத்தை ராம் அருள்வான் என ஸ்வாமி பப்பா ராமதாஸ் தமது தந்தையிடம் உபதேசமும் பெற்று ராம நாமத்தில் கரைந்து ராம ரசமாய், அதன் மயமாய் தானே ஆனார்.

16. நமது ஒரே அடைக்கலம் 'ராம நாமா'. அதுவே நம்மை சம்சார சாகரத்தில் இருந்து
கரையேற்றும். பிறவித்தளையை அறுக்கும் .



17. மற்ற எல்லா தர்மங்களும் ஒன்று பாவத்தை நீக்கும் . மற்ற ஒன்று புண்ணியத்தை தரும். ஆனால் 'ராம நாமா' ஒன்றே பாவத்தை அறுத்து, புண்ணியமும் அர்ப்பணமாகி பாவ, புண்ணியமற்று ( நிச்சலதத்வம் .......ஜீவன்முக்தி ) முக்தி தரும்.

18. 'ராம நாமா' மட்டுமே நன்மையே கொண்டு வந்து தரும் . மருந்தின் தன்மை தெரியாமல் சாப்பிட்டாலும் அது நோயினை குணப்படுத்திவிடும். அது போல 'ராம நாமா' வும் சொல்ல சொல்ல பிறவி நோயை, துக்க நோயை ,
ஆசை என்ற சம்சார நோயை அழித்துவிடும்.

19. நமது கைகளால் எது கொடுத்தாலும், அது நமது தலைவனாகிய ஸ்ரீ ராமனுக்கே ( எதிரில் உள்ள மனித வடிவில் உள்ள எஜமான் ஸ்ரீ ராமனுக்கே ) கொடுக்கிறோம். எது , எதனை எவரிடம் இருந்து பெற்றாலும் நமது அன்னையாகிய ஸ்ரீ ராமனே ( எதிரில் உள்ள மனித வடிவில் ) கருணையுடனும், அன்புடனும் நமது நன்மைக்காக தருகிறான். இந்த உணர்வு பெருக, பெருக ஸ்ரீ ராமனே தந்து , வாங்குகிறான். ( எதிரில் உள்ள மனிதரை கவனிக்காமல் அவரின் ....அந்தராத்மவுடனே பேசுகிறோம்.......ராம்! அன்னையே இந்த உடலுள் இருந்து நீயே பேசி, இயங்கி, செயல்படுகிறாய் ......என வணங்க, நமஸ்கரிக்க ) .....கொடுப்பவன் ஸ்ரீ ராமன் ..........வாங்குபவன் ஸ்ரீ ராமன்.


20. 'ராம நாமா' சொல்ல , சொல்ல நிகழும் எல்லா செயல்களும் , நிகழ்ச்சிகளுக்கும் ' அந்த ஒன்றே !' காரணமாகிறது என்பதும் ...... எல்லாம் அந்த பிரம்மத்தின் விளையாட்டே !.......என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனியாய் உணரப்படும் .

21.'ராம நாமா' சொல்லச்சொல்ல ..........சொல்லுவதன் மூலம் ..... பார்ப்பது ராம் , பார்வை ராம், பார்க்கப்படுவது ராம், கேட்பது ராம், கேள்வி ராம், கேட்கபடுவது ராம், புலன்கள் ராம், உணர்வது ராம், உணரபடுவது ராம், உணர்வு ராம், இந்த பிரபஞ்சம் ராம், இந்த மனம் ராம் , புத்தி ராம், உடலும் ராம், ஆன்மா ராம், 24 தத்துவங்கள் ராம் , ..... .........நன்மை, தீமை , இன்பம் துன்பம் , எல்லாம் ராம் , எல்லாம் ராம் , எல்லாம் ராம்.

இத்தகைய .'ராம நாமா' வில் பைத்தியமாவதே ....அனைத்தும் .... ராமனாக .........ஆன்மாவாக ........
( ஏகாக்கிரக சித்தமாக ) அனைத்தும் ஒன்றாக அறிவதே உண்மையான அறிவு. அனைத்தும் ஒன்றாக ......ராமனாக ( ஆத்மா ராமனாக ) பார்ப்பதுவே ......... எல்லா எண்ணங்கள் ....... எல்லா செயல்கள் ........எல்லா உணர்ச்சிகளிலும் ...........இறை உணர்வை உணர்வதுவே ............இந்த பிறவியின் பயனாகும்.

Friday, April 10, 2020

திருப்பதி #பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்படும் ஆகாச கங்கை தீர்த்தம் எப்படி உருவானது.......

#திருப்பதி #பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்படும் ஆகாச கங்கை தீர்த்தம் எப்படி உருவானது.......

128 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது என்ன ? - திருப்பதி கோயில் மூடப்பட்டது குறித்து ருசிகர தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது அதன் வரலாற்றிலேயே 2வது முறையாக பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 1892-ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி வியாழக் கிழமை, மற்றும் 6-ம் தேதி வெள்ளிக் கிழமை, ஆகிய இரண்டு நாட்கள் கோயில் அடைக்கப்பட்டது.

இதற்கான காரணங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் பதிவேட்டில் பதிவு செய்துள்ளது. அந்த காலகட்டத்தில் மகந்துக்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலை பராமரித்து வந்தனர். ஆகம சாஸ்திரங்கள்படி கோயில் பூஜைகள் நடைபெற்று வந்தது. இதற்காக பெரிய ஜீயர் மற்றும் சின்ன ஜீயர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் மகந்துக்களுக்கும், ஜீயர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்த இரு நாட்களும் கோயில் நடை அடைக்கப்பட்டது என பதிவேட்டில் உள்ளது. இதுகுறித்து கடந்த 1892 மே மாதம் 9-ம் தேதி ‘தி ஹிந்து' ஆங்கில நாளிதழ் நான்காம் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த கால கட்டங்களில் பக்தர்கள் அலிபிரி மற்றும் வாரி மெட்டு வழியாகவே ஏழுமலையானை பாதயாத்திரையாக சென்று தரிசித்து வந்தனர். மேலும் வாகன போக்குவரத்துகளும் இல்லாததால் முதியோர் டோலி மூலம் சுவாமியை தரிசித்து வந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து சுமார் 128 ஆண்டுகள் கழித்து தற்போது மக்கள் அலைமோதும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 2-வது முறையாக தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோயிலில் தரிசனம் நிறுத்தப்பட்டாலும் ஏழுமலையானுக்கு அதிகாலை சுப்ரபாத சேவை முதல் இரவு ஏகாந்த சேவை வரை அனைத்து சேவைகளும் ஏகாந்தமாக நடைபெற்று வருகிறது. மேலும் கோயிலுக்குள் மக்கள் நலனுக்காக பல்வேறு யாகங்களும் பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.

திருமலைக்கு ஒரு வசீகரம் உண்டு. ஒருமுறை சென்று அந்த வேங்கடவனை தரிசித்துவிட்டால், மீண்டும் மீண்டும் அவனைக் காணும் ஆசை கொள்வார்கள் பக்தர்கள். ஒரு சிலருக்குத் திருப்பதி வரும்போது கொண்டுவரும் பணம் பொருள் அனைத்தும் செலவு செய்யும்படி ஆகிவிடும். `ஊருக்குத் திரும்பக்கூடக் காசு இல்லாதபடி பெருமாள் வாங்கிட்டாரு' என்று புலம்பியபடி மலையிறங்கியவர்கள்கூட, `அடுத்து எப்போது மீண்டும் மலையேறி அவரை தரிசனம் செய்யலாம்' என்று எண்ண ஆரம்பித்துவிடுவார்கள்.

ஒரு சிலருக்கு அங்கேயே தங்கிவிடலாமா என்றுகூட இருக்கும். இன்று பெருமாளை தரிசிக்கக் கோடான கோடி பக்தர்கள் வந்துபோகிறார்கள். தரிசனமும் சில நொடிகள்தான். ஆனால், அந்தக் காலத்தில் ஏழுமலைகள் ஏறி வந்து இறைவனை தரிசிப்போர் எண்ணிக்கை மிகக்குறைவே. அப்படி ஒருமுறை அவனை தரிசித்துவிட்டால் அவனுக்குக் கைங்கர்யம் செய்துகொண்டு அங்கேயே இருந்துவிடத் தோன்றும். அப்படித்தான் திருமலைக்கு வந்து பெருமாளுக்குத் தீர்த்த கைங்கர்யம் செய்ய ராமாநுஜரால் பணிக்கப்பட்டவர் திருமலை நம்பிகள்.

அவர் பணி தினமும் பெருமாள் திருமஞ்சனத்துக்கு நீர் எடுத்து வருவது. அதுவும் கோயிலிலிருந்து சுமார் 7 கி. மீ தொலைவில் இருக்கும் பாபவிநாசத் தீர்த்தத்துக்கு தினமும் மலைப் பாதையில் நடந்து சென்று நீர் எடுத்துவரும் கைங்கர்யம். இளமை என்றாலும் பரவாயில்லை. திருமலை நம்பிகளுக்கு வயதும் அதிகமாகிவிட்டது. ஆனாலும் தன் முதுமையை நினைக்காமல், தினமும் நடந்து சென்று நீர் எடுத்துவந்தார்.

பக்தர்கள் சிரமத்தை அந்தப் பரமன் அறியமாட்டானா என்ன... தள்ளாட்டமும் மூச்சிரைப்புமாக நீரெடுத்துக்கொண்டு வரும் திருமலை நம்பிகள் முன்பாக ஒரு வேடுவ இளைஞனாக தரிசனம் கொடுத்தார் பெருமாள். திருமலை நம்பிகளின் வழியை மறித்து, ``தாத்தா குடிக்கக் கொஞ்சம் தண்ணி கொடு" என்று கேட்டார். நீர் கேட்பவர்களுக்குக் கொடுக்க வேண்டும். `இல்லை' என்று சொல்வது பாவம். ஆனால், வேடனுக்கு நீர் கொடுத்தால் மீண்டும் போய் நீர் எடுத்து வரவேண்டும்.

``தம்பி, உனக்கு நீர் தருகிறேன். நீ ஒரு உதவி செய். பெருமாளுக்கு அபிஷேகம் செய்ய நீர் வேண்டும். எனக்கோ வயதாகிவிட்டது. அதனால், குடித்து முடித்ததும் மீண்டும் தீர்த்தக் கரைக்குப் போய் நீயே நீரெடுத்துவந்து கொடு " என்றார் திருமலை நம்பிகள்.

ஆனால், வேடனின் ரூபத்தில் நின்ற பெருமாளோ புன்னகைத்து, அவரோடு விளையாடத் திருவுளம் கொண்டார்.

``தாத்தா, நான் ஒன்றும் தாகத்தில் கேட்கவில்லை. நீங்கள் நீர் தரவேண்டாம்" என்று சொல்லிவிட்டார்.
சரி என்று திருமலை நம்பிகள் சில அடி நடந்ததும் வேடன் அம்பு ஒன்றை நம்பிகள் சுமந்து செல்லும் குடத்தில் எய்தான். குடம் உடைந்து நீர் கொட்டியது.

கிருஷ்ணாவதாரத்தில் கோபியரின் தயிர்க்குடங்களை உடைத்துப்பின் சென்று அருந்தியதுபோல, திருமலை நம்பிகளின் உடைந்த குடத்திலிருந்து ஒழுகிய நீரை வேட ரூபத்தில் பெருமாள் குடித்தார். இதைக் கண்ட திருமலை நம்பிகள் அயர்ந்துபோனார்.

``தம்பி, நான் உனக்கு நீர் தருகிறேன் என்றுதானே சொன்னேன்... ஏன் இப்படிச் செய்தாய்... இனி எப்படி நான் நீர் எடுத்துச் செல்வேன்... அதுவும் நீண்டதூரம் போக வேண்டுமே... பானையை வேறு உடைத்துவிட்டாயே" என்று புலம்பினார்.
உடனே வேடன், தன் வில்லை எடுத்து மீண்டுமொரு அம்பை அங்கிருந்த பாறை ஒன்றில் எய்தார். அவ்வளவுதான் அங்கே ஒரு சிறு ஊற்று அருவியெனக் கொட்டியது.

``தாத்தா, இதுவும் புண்ணிய தீர்த்தம்தான். ஆகாயத்திலிருந்தே கொட்டுகிறது பார் கங்கை'' என்று சொல்லிச் சிரித்தார். திருமலை

நம்பிகளுக்கு வந்திருப்பது யார் என்பது புரிந்தது. சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். பெருமாள் அவருக்கு தரிசனம் கொடுத்தார்.

நம்பிகளை ஆசீர்வதித்து, ``நீர் இனி இங்கேயே நீர் எடுத்துக்கொள்ளும். அதுவும் முடியாத நாள்களில், என் ஆலயத்துக்குள்ளேயே இருக்கும் பங்காருபாவியில் நீர் எடுத்து அபிஷேகம் செய்யலாம்" என்று சொன்னார். பெருமாளே உரிமையோடு தாத்தா என்று அழைத்ததால் அவருக்குத் `தாத்தாச்சாரி' என்ற பெயர் உண்டாயிற்று. கோயிலில் பெருமாளை தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் வேளையில், `பங்காருபாவி' உள்ளதைக் காணலாம். இன்றும் பெருமாளுக்கு ஆகாச கங்கை தீர்த்தத்தில் ஏலக்காய், லவங்கம், பச்சைக் கற்பூரம் ஆகியன கலந்து திருமஞ்சனம் செய்கிறார்கள்.

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கும் திருப்பதி வேங்கடவனை தரிசிப்பதில் எத்தனை சிரமங்கள் இருந்தாலும் அவையெல்லாம், அவனைக் கண்ட மாத்திரத்தில் மறைந்து மனம் புத்துணர்வு கொள்ளும். நாம் சொல்லாமலே நம் பிரச்னைகளை அறிந்து அதைத் தீர்த்து அருளுவார் வேங்கடவன். அதனால்தான் நாள்தோறும் எண்ணற்ற பக்தர்கள் அவனை நாடி ஓடி வருகின்றனர்.

எளிய முறையில் சரணாகதி விளக்கம்



எளிய முறையில் சரணாகதி விளக்கம்

மாட்டு வண்டிக்கு உயிர் இல்லை

ஆனால் மாட்டுக்கு  உயிர், அறிவு இரண்டும் உண்டு

உயிரில்லாத வண்டியை அறிவுள்ள மாட்டுடன் பூட்டி.
எந்த இடம் செல்ல வேண்டும் என்பதை தீர்மானித்து
வண்டியை செலுத்துவான் வண்டிக்காரன்

எவ்வளவு தூரம்  எவ்வளவு நேரம் எவ்வளவு பாரம்
அனைத்தையும் தீர்மானிப்பவன் வண்டிக்காரன் மட்டுமே

அறிவிருந்தும் சுமப்பது தானாக இருந்தாலும் மாட்டால்
ஒன்றும் செய்ய இயலாது

அது போல உடம்பு என்ற ஜட வண்டியை ஆத்மா உயிர் என்ற மாட்டுடன் பூட்டி இறைவன் பரந்தாமன் என்ற வண்டிக்காரன்
ஓட்டுகிறான்

அவனே தீர்மானிப்பவன் அவன் இயக்குபவன் மனிதன் இயங்குபவன்

எவ்வளவு காலம் எவ்வளவு நேரம் எவ்வளவு பாரம் தீர்மானிப்பது இறைவனே

இதுதான் நமக்காக இறைவன் போட்டிருக்கும் டிசைன்

இதுதான் பகவான் நமக்கு தந்திருக்கும் அசைன்மென்ட்

இதை உணர்ந்தவனுக்கு துயரம் இல்லை

இதை உணராதவனுக்கு அமைதி இல்லை

இருக்கும் காலங்களில் இனியது செய்வோம்

பரந்தாமன் கோவிந்தன் பாதம் பற்றுவோம்

பாஞ்சாலியின் பாத அணிகளை கண்ணன் சுமந்தது ஏன்?

பாஞ்சாலியின் பாத அணிகளை கண்ணன் சுமந்தது ஏன்?

குருக்ஷேத்திரத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் ஒன்பது நாள்கள் முடிந்துவிட்டன. `ஒன்பது நாள்கள் கடந்தும் பாண்டவர்களை வீழ்த்த முடியவில்லையே!' என்று நினைத்த துரியோதனன், மகாரதராக இருந்த பீஷ்மரிடம் தான் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டான். `தாத்தா பீஷ்மர், பாண்டவர்களை ஒழிக்க வேண்டும் என்ற உறுதியுடன் போரிடவில்லை' என்றே நினைத்தான். தன் எண்ணத்தை மிகக் கோபத்துடன் பீஷ்மரிடமும் தெரிவித்தான். துரியோதனின் கடுமையைக் கண்ட பீஷ்மரும், அதே கடுமையுடன் மறுநாள் போரில் பாண்டவர்களை அடியோடு வீழ்த்துவதாக சபதம் செய்தார். ஆனால், துரியோதனனோ, '`பாண்டவர்களை வீழ்த்துவேன் என்று சொல்லாதீர்கள். `அவர்களைப் போரில் கொல்வேன்'' என்று சொல்லுங்கள்' என்றான். செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்க வேண்டுமே என்பதற்காக பீஷ்மரும், ``அப்படியே ஆகட்டும்'' என்று கூறிவிட்டார். அதே தருணத்தில் பாண்டவர்களின் பாசறையில் இருந்த கண்ணன் லேசாகச் சிரித்தான். அவனுடைய சிரிப்பின் காரணம் அங்கிருந்த பாண்டவர்களுக்குப் புரியவில்லை.

சற்றைக்கெல்லாம், பீஷ்மர் செய்த சபதம் பாண்டவர்களுக்குத் தெரியவந்தது. அர்ஜுனன் உட்பட அனைவருக்கும் கலக்கம் ஏற்பட்டுவிட்டது. `பிதாமகர் பீஷ்மர் எவராலும் வெற்றி கொள்ள முடியாதவர் ஆயிற்றே. நன்றிக் கடனுக்காக அவர் துரியோதனன் பக்கம் இருந்தாலும், தர்மம் வெல்லும்' என்று நமக்கு ஆசி கூறியவர் ஆயிற்றே. அவரே இப்போது நம்மை ஒழிப்பதாக சபதம் செய்திருப்பதால், நிலைமை நமக்கு பாதகமாகத்தானே இருக்கும்'என்று நடுங்கினார்கள்.

பாண்டவர்களின் இந்தச் சோர்வையும் கலக்கத்தையும் கண்ட பாஞ்சாலி, மிகவும் கவலை கொண்டாள். `இனி தன்னுடைய சபதம் என்னாவது? போரின் திசையே மாறிவிடும் போலிருக்கிறதே. இந்தக் கண்ணன் என்ன ஆனார்... அவருக்கு இதெல்லாம் தெரியுமா?' இப்படியெல்லாம் பாஞ்சாலி நினைத்துக்கொண்டிருந்தபோதே, கண்ணன் அங்கே வந்து சேர்ந்தான்.

பாஞ்சாலியைப் பார்த்து, ``சத்தம் செய்யாமல் என் பின்னால் வா’’ என்று மிக மெல்லிய குரலில் கூறி, அந்த நள்ளிரவில் அவளை எங்கேயோ அழைத்துச் சென்றான். போர்க்களத்தினூடே கண்ணன் நடந்து சென்றுகொண்டிந்தான். ரணகளமாக மாறியிருந்த யுத்தபூமியில் மரண அவஸ்தையில் வீரர்கள் எழுப்பிய அவலக் குரல்களின் ஒலி, அந்தப் பிரதேசத்தையே அமானுஷ்யமாக மாற்றியிருந்தது. ஆனாலும், கண்ணன் உடனிருக்கிறான் என்ற தைரியத்தில் பாஞ்சாலிக்குச் சிறிதும் அச்சம் ஏற்படவில்லை. எதையும் பொருட்படுத்தாமல் கண்ணனின் பின்னால் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தாள்.

யுத்தகளத்தைவிட்டுச் சற்று விலகியதும் மற்றொரு சத்தம் கேட்டது. அரசகுலத்தில் பிறந்தவள் ஆதலால், பாஞ்சாலி அணிந்திருந்த விலையுயர்ந்த காலணிகள் எழுப்பிய ஓசைதான் அது. திடீரென்று ஓரிடத்தில் நின்ற கண்ணன், பாஞ்சாலியைப் பார்த்து, ``சகோதரி, உன் காலணிகள் மிகவும் சத்தமெழுப்புகின்றன. அவற்றைக் கழற்றிப் போடு’’ என்று கூறினான். பாஞ்சாலியும் அப்படியே காலணிகளைக் கழற்றி வீசினாள்.

பின்னர், தொலைவிலிருந்த ஒரு கூடாரத்தைச் சுட்டிக் காட்டிய கண்ணன், ``பாஞ்சாலி, நீ எவரும் அறியாமல் அந்தக் கூடாரத்துக்குச் செல். உள்ளே குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருக்கும் மனிதரின் காலில் விழு. மற்றபடி ஏன், எதற்கு என்றெல்லாம் கேட்காதே’’ என்றான்.
பாஞ்சாலியும் கண்ணன் சொன்னபடியே கூடாரத்துக்குள் சத்தம் செய்யாமல் நுழைந்தாள். அங்கே ஒரு மனிதர் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார். அவர் திரும்பிப் பார்ப்பதற்குள் அவருடைய காலில் விழவேண்டும் என்ற வேகத்துடன் அவருடைய கால்களில் விழுந்தாள் பாஞ்சாலி. யாரோ ஒரு பெண் தன் காலில் விழுவதைக் கண்ட பீஷ்மர், ``தீர்க்கசுமங்கலியாக இரு பெண்ணே’’ என்று வாழ்த்தினார். பின்னர் அவளை எழுந்திருக்கச் சொன்னதுடன், அவள் யாரென்றும் கேட்டார்.

பாஞ்சாலி எழுந்தாள். அவளைப் பார்த்ததுமே பீஷ்மர் திடுக்கிட்டார். `போயும் போயும் இவளையா வாழ்த்தினோம்?' என்று தனக்குள் மருகினார். நாளைய போரில் யாரை ஒழித்துக்கட்டப்போவதாக துரியோதனனுக்கு வாக்களித்திருந்தாரோ, அந்தப் பாண்டவர்களின் பத்தினியை, `தீர்க்கச் சுமங்கலியாக இரு' என்றல்லவா வாழ்த்திவிட்டார். தெய்வம் தன்னை மிகவும் சோதிப்பதாக எண்ணி வருந்தினார் பீஷ்மர்.

பாஞ்சாலியைப் பார்த்த பீஷ்மர், ``அம்மா பாஞ்சாலி, பிணங்கள் குவிந்திருக்கும் இந்த யுத்தக் களத்தினூடே நீ தனித்தா வந்தாய்? உன்னை யார் இங்கே அழைத்து வந்தார்கள்?’’ என்று கேட்டார். அப்போது கூடாரத்தின் வாயிலில் ஏதோ நிழல் அசைவதுபோல் தெரிந்தது. அங்கே கண்ணன் நின்றுகொண்டிருந்தான். பீஷ்மருக்கு என்ன நடந்திருக்கும் என்பது புரிந்துவிட்டது.

``வா கண்ணா, வா. இது உன் வேலையாகத்தான் இருக்கும் என்று நான் நினைத்தேன். இது என்ன கையில் ஏதோ துணிமுடிச்சு?’’ என்று கேட்டார்.

``ஓ, இதுவா? பாஞ்சாலியின் பாதணிகள்தாம் இவை. அதிக ஓசை எழுப்பவே கழற்றச் சொன்னேன். அதைத்தான் என் உத்தரியத்தில் முடிந்துவைத்திருக்கிறேன்’’ என்றான்.

கண்ணன் சொன்னதுதான் தாமதம்... திரௌபதி பாய்ந்து சென்று அதைப் பிடுங்கினாள். ``கண்ணா! இது என்ன சோதனை... என் காலணிகளை நீ சுமப்பதா?என்னை மகாபாவியாக்க வேண்டுமென்பதுதான் உன் எண்ணமா?’’ - அவள் கண்கள் கண்ணீரை உகுத்தன.

``தங்கையின் செருப்பை அண்ணன் தூக்குவது தவறல்ல. பேசாதிரு. பெரியவர் பீஷ்மரிடம் உன் கோரிக்கையைச் சொன்னாயல்லவா..." என்றான் கண்ணன். பீஷ்மர் குறுக்கிட்டு, ``மாயவனே! அவள் ஏதும் என்னிடம் சொல்லவில்லை. ஆனால், நான் என்ன சொல்ல வேண்டுமென்று நீ தீர்மானித்திருக்கிறாயோ அதை நான் அந்தப் பெண்ணுக்கு ஆசிமொழியாகச் சொல்லிவிட்டேன். நீ பொல்லாதவன். உன்னை அபயம் என்றெண்ணியிருப்போரைக் காக்க, அவர்களின் பாதணிகளைக்கூட தாங்கிக்கொண்டிருப்பாய். பாண்டவர்களுக்கு உன் அருள் இருக்கும்போது இந்த பீஷ்மனால் அவர்களை என்ன செய்துவிட முடியும்? கோபாலா, நீ யார் என்பதை நன்றாக அறிந்தவன் நான், ஏதோ உணர்ச்சிவசத்தில் என்னால் எல்லாம் ஆகுமென்று நினைத்துவிட்டேன். அந்தத் தவற்றைச் சுட்டிக்காட்ட, பக்தர்களை ரட்சிக்கும் பக்தவத்சலனாக இப்படி பாஞ்சாலியின் பாதணிகளைச் சுமந்து வந்து நிற்க வேண்டுமா?’’என்று வினவினார். பிதாமகரின் கண்களிலும் நீரருவிகள் கொப்பளித்தன. மறுநாள் போரில் அந்தப் பழுத்த பழம் அம்புப் படுக்கையில் விழுந்ததைத்தான் பாரதம் சொல்லுமே..?

நீங்கள் கண்ணனை நீங்காது நினைத்திருங்கள், மற்றவை அவன் கடமை.
ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்...

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !

ராமானுஜர் கண்டெடுத்தத் திருமண் மேடு

ராமானுஜர் கண்டெடுத்தத் திருமண் மேடு

அடுத்த தெருவில் இருந்த ஒரு வைணவப் பெரியவரை காணச் சென்றிருந்தேன். அவர் முகத்தில் சோகத்தின் குறியினைப் பார்த்து 'ஸ்வாமி! திரு மேனிக்கு ஏதாவது சங்கடமோ?' என்று விசாரித்தேன்.

'தேஹம் கிடக்கட்டும்! திரு நாராயணபுரத்திலிருந்து மருமான் வாங்கி அனுப்பிய திருமண் கட்டிகள் முழுவதும் தீர்ந்து விட்டன. அவனோடு உடனடி தொடர்பு கொள்ளும் ப்ரமேயம் இப்போது இல்லை. அவனோடு எப்பொழுது பேசி, சுத்த திருமண் திரும்பி எப்ப கிடைச்சுத் தரிக்கப் போறேனோன்னு மனசு சங்கடமா இருக்கு' என்றார்.

நித்யம் தரிக்கும் ஊர்த்வ புண்டரத்துக்குக் (திருமண் ஸ்ரீ சுவர்ண காப்பு) கூட திடீர்னு ஏன் எனக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதோ? ' என்று நொந்து கொண்டார்.

குரலைக் கனைத்துக் கொண்டு 'மாமா தப்பா எடுத்துக்கப் படாது. இது உமக்கு மட்டும் ஏற்பட்டதல்ல. சாக்ஷத் உடையவருக்கே ஒரு நாள் திருமண் கிடைக்கப் பெறாமல் அவர் வருந்திய சம்பவத்தினை சொல்ல அனுமதிக்கணும்னு' ஆரம்பித்தேன்.

கூரத்தாழ்வாருக்கும் மற்றைய வைணவ பெரியார்களுக்கும் சோழ மன்னன் இழைத்த கொடுமைகளால், நிலை குலைந்து போன ராமானுஜர், ஸ்ரீ ரெங்கத்து கோயிலின் நிர்வாஹப் பொறுப்பிலிருந்துத் தம்மை விடுவித்துக் கொண்டு, மைசூர் பிராந்தியத்தில் இருந்த தொண்டனூருக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அப்போது உடையவரின் வயது கிட்டத் திட்ட 90. அச்சமயம், மைசூரை ஆண்ட ஜைன மத மன்னன் விடல தேவனுக்கு வைணவத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்து, அவன் பெயரை விஷ்ணு வர்த்தன் என்று மாற்றி தம்முடைய சிஷ்யக் கூட்டத்தில் இணைத்துக் கொண்டார்.

ஒருநாள் காலை நித்ய ஸ்நானாதிகளை முடித்துக் கொண்டு திருமண் காப்பென்னும் ஊர்த்வ புண்டரம் தரிக்க முற்பட்ட போது எங்கு தேடியும் திருமண் கட்டி கிடைக்கவில்லை. அரை குறை மனதோடு ஸ்ரீ சுவர்ணம் மட்டுமே முழுதுமாகத் தரித்துக் கொண்டு நித்யானுஷ்டானங்களைப் பூர்த்தி செய்தார்.

இருந்தும் மனம், திருமண் தரிக்காமல் இருந்தது ஏதோ தன்னுடைய கைங்கர்ய நேர்த்தியில் எம்பெருமானுக்கு குறை ஏற்படுத்தியதாகத் தோன்றவும், இரவு வரையில் வருந்திய வண்ணமே கண் துயின்றார்.

கருணா சாஹர நாராயணின் திருவிளையாடல் தான் இது என்னும் வகையாய், ஸ்ரீமன் நாராயணன்,

எம்பெருமானாரின் கனவில் தோன்றி, மேல் கோட்டைக்கருகில், அபரிமிதமான திருமண் மேடு புதைந்து கிடக்கும் இடத்தையும், அருகினிலேயே தன் அர்ச்சாவதார விக்ரஹம் புதைந்து கிடக்கும் இடத்தையும்,

டில்லி அருகே தன்னுடைய உற்சவ விக்ரஹமான 'ராமப் பிரியர்' ஒரு துருக்கிய மன்னனின் அரண் மனையில் அகப்பட்டுக் கொண்டதையும் கூறினான்.

எம்பெருமானின் கட்டளையாகக் கொண்டு அர்ச்சாவதார மூர்த்தியை ,மண்ணிலிருந்துத் தோன்றி எடுத்தும், திருமண் மேடுகளைத் தோண்டி அறிந்ததும் அல்லாமல்,

டில்லி புறப்பட்டு, கனோஜ் (Kanauj) நகரில் கனவில் எம்பெருமான் சொன்ன மன்னனான துருக்கியனின் அரண்மனைக்குத் துணிவுடன் சென்று,

அவனை சம்மதிக்க வைத்து, 'ராமப் பிரியர்' என்னும் எம்பெருமானின் உற்சவ மூர்த்தியைப் பெற்று திருநாராயண புரத்தில் எழுந்தருள வைத்து கிரமமான பிரதிஷ்டை செய்தார்.

இன்றும் உண்மையான திருமண் மேடுகள் மேல் கோட்டை மலைகள் இடையில் தான் இருக்கின்றது என்பது பூகோளக் குறிப்பு.

சில விதண்டா வாதிகள், இந்தச் சம்பவம் நடந்த 1100 ம் ஆண்டு சமீபத்தில், டில்லியை எந்த ஒரு துருக்கிய மன்னனும் ஆள வில்லை என்று ஆக்ஷேபம் செய்தனர்.

1097ம் ஆண்டு முதலாக 1100 ம் ஆண்டுக்குள், துருக்கிய சாம்ராஜ்ஜியம், பெரும்பாலான பிராந்தியங்களை ஆக்கிரமித்து டில்லிக்கு அருகினில் உள்ள கனோஜ் (Kanauj) நகரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டதற்கான உண்மையினை, நுணுக்கமான சரித்திரச் சான்றுகள், பேசுகின்றன.

மூலக் கரு: திவ்ய மஹாநுபாவர் அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமிகள் உபந்யாசக் குறிப்புகள்.

நட்பின் இலக்கணம்

நட்பின் இலக்கணம்.

கங்கைக் கரையில் குகன் வழக்கம்போல படகைத் தொட்டுக் கும்பிட்டு, ஆற்று நீரில் காலை அலம்பிக்கொண்டு படகில் ஏறினான். ராமன், சீதை, லட்சுமணனை சுமந்து சென்ற, புனிதப் படகல்லவா அது!

படகில் அன்றைய தினம் நாலைந்து புதிய நபர்கள் வந்தார்கள். அவர்களில் ஓர் இளைஞன், குகனிடம் பேச்சுக் கொடுத்தான்.

‘‘அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகக் கொண்டாட்டங்கள் அமர்க்களப்பட்டு கொண்டிருக்கின்றன. நீ என்னவென்றால் இங்கே படகில் துடுப்பு இழுத்துக் கொண்டிருக்கிறாயே! ஏன்... உன்னை ராமர் அழைக்கவில்லையா? நீ அந்த வைபவத்தில் கலந்துகொள்ளத் தகுதியில்லாதவனா?’’ என்றான்.

குகன் அமைதியாகச் சொன்னான். ‘‘ஐயா! ராமபிரானுக்கு என் நினைவு வராதிருக்குமா? ‘உன்னோடு சேர்த்து ஐவரானோம்’ என்று என்னைத் தன்னுடைய நான்காவது தம்பியாக பாவித்தாரே… அவருக்கா என்னை மறக்கும்?’’ நெகிழ்ச்சியுடன் சொன்னான்.

‘‘அப்படியென்றால் ஏன் உனக்கு அழைப்பு விடுக்கவில்லை?’’

‘‘பொதுவாக ஒரு திருமணம், ஒரு விசேஷம் என்றால் நெருங்கினவர்களுக்கெல்லாம் ஒரு சில பொறுப்புகளைக் கொடுத்து நிறைவேற்றச் சொல்வார்கள் இல்லையா.., அதுபோல எனக்கும் ராமர் பட்டாபிஷேகத்துக்கு வரும் மக்களை
அக்கரையில் இருந்து படகில் அழைத்துவரும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. திருமணத்தின்போது இதுபோன்ற பொறுப்பை நிர்வகிக்கும் ஒருவரால் மணமேடைக்குச் சென்று திருமணத்தைப் பார்க்க முடியாத நிலைமை ஏற்படும். அதுபோலத்தான் எனக்கும். நான் மானசீகமாக ராமர் பட்டாபிஷேகத்தைப் பார்க்கிறேன். என் ராமர் என்னைப் பார்க்கிறார். நட்புடன் புன்னகைக்கிறார். ‘சாப்பிட்டு விட்டு வெகு மதிகளை வாங்கிச் செல்’ என்று பாசத்துடன் சைகை செய்கிறார். அந்த நிறைவை நான் இங்கேயே பெற்றுவிடுகிறேன். வேறு என்ன
வேண்டும் எனக்கு?’’

அந்த இளைஞன் மட்டுமின்றி, பயணித்த அனைவருக்குமே குகனுடைய பதிலால்
கண்களில் நீர் திரண்டது.

ஸ்ரீ ராம சீதா ஜெயம் !

நரசிங்கா

ஆடிஆடி அகம் கரைந்து இசை

பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி எங்கும்

நாடிநாடி, நரசிங்கா என்று

வாடி வாடும் இவ் வாள்நுதலே. '

அன்று ஸ்ரீரங்கம் அரங்கன் கோயிலில் ஒரே ஆரவாரம்!

‘ஆதிகவியான வால்மீகியின் இராமாயண காவியத்தை தமிழில் செய்து அரங்கேற்றத் துணிந்த இந்தக் கம்பன் என்பவன் யாராம்?” என்று ஒருவருக்கொருவர் வியப்பும் திகைப்புமாகக் கேட்டுக்கொண்டனர்.

திருவரங்க நகரம் அந்த நாளில் தமிழிலும் வடமொழியிலும் தேர்ந்த பண்டிதர்களைக்கொண்டிருந்தது. அங்கே தங்களது புலமைக்குப்பாராட்டு கிடைப்பதை விரும்பாத புலவர்களே இல்லை.

இங்கு தனது இராமாயணக்காதை அரங்கேறுவதே தனக்குச்சிறப்பு என்று கம்பன் நினைத்தான்.
.
கம்பனின் கதையைக்கேட்டுத்தான் பார்க்கலாமே என்று சிலர் ஆர்வமுடன் முன்வந்தனர். அவர்களின் முயற்சியில்

அரங்கன் கோயிலில் பிராட்டியாரின் சந்நிதி முன்பாக இருக்கும் நாலுகால் கல்மண்டபத்தில் அரங்கேற்ற ஏற்பாடுகள் ஆயத்தமாயின.

வால்மீகியான தெய்வ மாக்கவி மாட்சி தரிக்கவே இதை நான் புனைந்தேன் என்றான். கம்பன்.

பிறகு இராமாயணக்காதையை தான் இயற்றிய பாடல்களுடன் கூற ஆரம்பிக்கிறான்.

. பல புலவர்களும், கதை கேட்பவர்களும், அமர்ந்திருக்கும் அந்த இடத்தில் அப்போது, யுத்த காண்டம் அரங்கேற்றம் ஆரம்பிக்கின்றது.

”விபீஷணன் ராவணனுக்கு எவ்வளவோ அறிவுரைகள் கூறினான் காமத்தில் மதி இழந்த இராவணன் அவைகளைப்பொருட்படுத்தாமல் விபீஷணனை இகழத்தொடங்கினான்.

“விபீஷணா! மானுடர் வலியர் என்றாய்! ஏன்...? அச்சமோ? அவர்பால் அன்புமோ உனக்கு? கூனியின் சூழ்ச்சியால் அரசிழந்து வனம் புகுந்து என் சூழ்ச்சியால் தன் மனைவியை இழந்தும் கழிந்துபோகா உயிரைச் சுமந்து கொண்டிருக்கும் மனிதர்களின் வலிமையை உன்னைத்தவிர யார் மதிப்பர்? அவனோ என்னை வெல்லுவன்?’ என்று கத்தினான் .

“மனம் வருந்திய விபீஷணன்,”அண்ணா!! நீர் இராமன் என்னும் நாராயணனைக் கேவலமாய் நினைக்கவேண்டாம். ஒப்புயர்வில்லாத வீரர்கள் அந்த நாராயணனைப் பகைத்து அழிந்து போயிருக்கின்றனர் அத்தகையவர்களில் ஒருவன் தான் இரணியன் என்பவன்.” என்று சொல்லி இரணியனின் வரலாற்றையும் கூறினான்.

இப்படி கம்பன் கூறும்போது, சில பண்டிதர்கள் திகைத்தனர்.

”உமக்கு நரசிம்மாவதாரம் எழுத ஆசையிருந்தால், தனியாக எழுதிவிடலாமே! இங்கு எதற்கு இதைச் சேர்க்க வேண்டும்?” என்று சீறினார் ஒருவர்.

மற்றவர்.” ஆமாம்! இதை ஒப்புக் கொள்ள முடியாது! அனைத்தும் தவறு “ என்று பொங்கி எழுந்தார்.

”: புலவர்களே! அமைதி! கம்பர் என்ன சொல்கிறார் என்று முதலில் கேட்கலாம்! கம்பரின் ராமாயணம் முடிவதற்குள் இறைவனின் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால், இந்த ராமாயணம் காப்பியமாக அனுமதிக்கப் படாது. அதுவரையில் நாம் பொறுமை காக்க வேண்டியது அவசியம். கம்பரே! நீர் தொடரும்!” என்று அவைத்தலைவர் அனுமதி அளித்தார்.

பெருமூச்சுடன், கம்பர் தொடர்ந்தார்

நசை திறந்து இலங்கப் பொங்கி, 'நன்று நன்று' என்ன நக்கு;
விசை திறந்து உருமு வீழ்ந்தது என்னவே, தூணின் வென்றி
இசை திறந்து, உயர்ந்த கையால் எற்றினான்; என்றலொடும்;
திசை திறந்து, அண்டம் கீறிச் சிரித்தது செங்கட் சீயம்!

அவ்வளவுதான்.......

ஒரு புலவர் (வேகமாக எழுந்து,” புலவரே! பாடலை மீண்டும் படியுங்கள்!” என்றார்

கம்பர் படிக்க, புலவர் பொருள் கேட்க, கம்பர் பாடலை விளக்கினார்.

”'சிரித்தது செங்கட் சீயம்' என்கிறீரே! எங்காவது சிங்கம் சிரிக்குமா? நீர் கேட்டதுண்டா? அவையில் யாராவது இதைப் பார்த்ததுண்டா?”

அவையில் சிரிப்பு!;

கம்பர், இந்தச் சிரிப்பையும் கிண்டல் பார்வைகளையும் பொருட்படுத்தாமல் அடுத்த பாடலை ஆரம்பித்தார்.

அவைத் தலைவர் இப்போது,”புலவரே! அவர் கேள்விக்கு விளக்கமளித்து விட்டு, அடுத்த பாடலுக்குச் செல்லுங்கள்!” என்றார் உத்தரவிடும் குரலில்.

கம்பர் திகைத்தார்.தன்னிலை மறந்து காவியம் எழுதும் போது கடவுளின் ஆணையாக வந்த சொற்களை கடவுளே அறிவார்! .அபிராமி பட்டருக்கும் இதே நிலைதானே ஏற்பட்டது?

அவையில் பலத்த சிரிப்பொலி ...

“மாட்டிக்கொண்டான் கம்பன் ...அவன் ராமாயணக்கதை முற்றிலும் அரங்கேற்ற சாத்தியமே இல்லை இனி! “

முணுமுணுத்து மகிழ்ந்தது ஒருகூட்டம்.

திடீரென்று அவர்களின் பலத்த சிரிப்பையும் மீறி, ஒரு சிரிப்பு! அனைவரையும் நடுங்க வைக்கும் சிரிப்பு! எல்லோரும், சிரிப்பு வந்த திசையை நோக்குகின்றனர்)

கம்ப மண்டபத்தின் மிக அருகில் கல்படிக்கட்டுகள் கொண்ட மேட்டுப் புறத்திலே உள்ள சந்நிதி கோபுரத்திலிருந்து ஒரு அதிர்வு உண்டானது. பூகம்பமோ என மக்கள் நிமிர்ந்து அச்சத்துடன் பார்த்தனர்.

ஆ !என்ன இது கோபுரத்தில் பதிக்கப்பெற்றிருந்த நரசிம்மனின் சிலை.. இல்லை இல்லை இது சிலையில்லையே ?நரசிம்மர் உயிரோடு அல்லவா இருக்கிறார்! கோலாகலமாய் சிரிக்கிறாரே!

ஒருக்கணம்தான் எல்லாம்!

திகைப்பும் பயமுமாய் கண்டவர்களுக்குக் காட்சி தந்து மறைகிறார் நரசிம்மப்பெருமான்.

“கம்பனே! உன் கவிதையை யாம் ஏற்றுக்கொண்டோம்! வால்மீகியின் கவிதையைப்போல நின் கவிதையும் என்றும் மக்கள் மனத்தில் நிலைத்து வாழட்டும்” என்பதாகக்கையை உயர்த்தி ஆசி கூறி வாழ்த்தினார். அடுத்த கணம் உயிர்பெற்ற சிலை மறுபடி சிலையானது.ஆனால் தூக்கிய திருக்கரம் தூக்கியபடியே இருந்தது.

அனைவரும் மெய்சிலிர்த்தனர் . கம்பனைப்போற்றி வணங்கினர்.

கண்ணனுக்கே அம்மான்னா சும்மாவா ?

கண்ணனுக்கே அம்மான்னா சும்மாவா ?

#ஒரு நாள்... யசோதை தயிர் கடைந்து கொண்டிருந்தாள். ‘விரைவில் நமக்கு வெண்ணெய் கிடைக்கும்!’ என்ற எண்ணத்தோடு யசோதையின் அருகிலேயே படுத்திருந்தார் ஸ்வாமி.

#அவள் கடைந்து முடிப்பதாகத் தெரியவில்லை. மெள்ள எழுந்த கண்ணன், தயிர்ப் பானையை எட்டிப் பார்த்தான். திரண்டு வந்த வெண்ணெய் மேலாகச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. ‘‘எனக்குத் தா!’’ என்று வாயைத் திறந்து கேட்கவும் கூச்சம். சாதுரியமாகப் பேச்சைத் தொடங்கினான் கண்ணன்.

‘‘#அம்மா! இந்தத் தயிர்ப்பானை நடுவில், ‘கும்கும்’ என்று ஏதோ வெள்ளையாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறதே! அது என்ன?’’ என்றான்.

#யசோதை சிரித்தாள். ‘தயிர் கடைந்தால் வருவது வெண்ணெய் என்று தெரியாதவன் போல் கேட்கிறானே கண்ணன்!’ என்று நினைத்த அவள், ‘‘கிருஷ்ணா! இது ஒரு மாதிரி பூதம். சில நேரம் தயிர்ப்பானையிலும் தோன்றும். கண்ணா. நீ இங்கே பக்கத்தில் நிற்காதே. தள்ளி தூரமாகப் போய்விடு!’’ என பதில் சொன்னாள்.

#கண்ணனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ‘நாம் சாதுரிய மாகக் கேட்கிறோம் என்றால், இவள் அதற்கும் மேலாக பதில் சொல்கிறாளே!’ என்று எண்ணிய ஸ்வாமி மேலும் தொடர்ந்தார்.

‘‘#அம்மா! அது பூதம் என்றால் ஆளை விழுங்கி விடாதா? நீ மட்டும் அதன் பக்கத்தில் இருக்கலாமா? அது உன்னை விழுங்கி விட்டால், நான் என்ன செய்வேன்? அந்த பூதம் நம்மை விழுங்குவதற்குள் அதை எடுத்து என் கையில் கொடுத்து விடு. நான் விழுங்கி விடுகிறேன். நாம் இருவருமே தப்பிக்கலாம்!’’ என்றான் கண்ணன்.

‘#இத்தனூண்டு வெண்ணெய்க் காக இப்படிக் கெஞ்சுகிறானே குழந்தை!’ என்று கொஞ்சம்கூட இரக்கம் இல்லை யசோதைக்கு. ஒரு நிபந்தனை போட்டாள்.

‘‘#இதோ பார் கண்ணா, நான் தயிர் கடைந்து முடிக்கிற வரையில் நீ ஆடினால் வெண்ணெய் தருவேன். நான் இடக் கையால் மத்துக் கயிற்றை இழுக்கும்போது, நீ இடக்காலைத் தூக்க வேண்டும். நான் வலக் கையால் இழுக்கும் போது, உன் வலக் கால் மேலே இருக்க வேண்டும். மாற்றி மாற்றி இப்படித் தாளம் தப்பாமல் ஆடி னால் வெண்ணெய் தருவேன்!’’ என்றாள் யசோதை.

#அகில உலகங்களையும் ஆட்டி வைக்கும் ஸ்வாமி, யசோதை போட்ட நிபந்தனைப்படியே ஆடினான். ‘குழந்தைக்குக் கால் நோகுமே’ என்ற எண்ணம் இல்லாதவளைப் போல, யசோதை தன் போக்கில் வேகவேகமாகக் கடைந்து கொண்டிருந்தாள்.

#அந்த வேகத்துக்கும் ஈடு கொடுத்து ஆடினான் கண்ணன். அவன் கால்களை மாற்றுவது கண்ணுக்குத் தெரியவில்லை. எப்போதும் ஒரு கால் உயரத் தூக்கியபடியே தெரிந்தது. வியர்க்க, விறுவிறுக்கக் கண்ணன் ஆடிய அந்த நாட்டியத்துக்கு அபூர்வமான ஒரு பெயரைச் சூட்டினார்கள் மகான்கள்.

#கண்ணன் ஆடியது பரத நாட்டியமோ, கதகளியோ, குச்சுப்புடியோ, மணிபுரியோ அல்ல. அண்ட சராசரங்களை ஆட்டிப் படைக்கும் ஸ்வாமி, ஒரு கை வெண்ணெய்க்காக ஆடியதை ‘நவநீத நாட்டியம்’ என்கிறார்கள்.

#யசோதை கடைந்து முடித்தாள். ஸ்வாமியும் ஆட்டத்தை நிறுத்தி விட்டு, கோயிலில் பிரசாதத்தை எதிர்நோக்கும் பக்தனைப் போல, யசோதையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். ‘ஒரு யானைத் தலை அளவுக்கு வெண்ணெய் தருவாள் அம்மா!’ என்ற எதிர்பார்ப்பு.

#யசோதையோ ஒரு கடுக்காய் அளவுக்குச் சிறிய வெண்ணெய் உருண்டையுடன் கண்ணனை நெருங்கினாள்.

#அதற்குள் ஸ்வாமி ஒரு தந்திரம் செய்தார். ‘அதை, குறைந்த பட்சம் இரண்டு கடுக்காய் அளவுக்காவது ஆக்கிவிடலாம்!’ என்ற எண்ணத்தில் ஒரு தூணின் பக்கத்தில் போய் நின்றார். அந்தத் தூண் அவ்வப்போது வெண்ணெய்க் கையைத் தடவித் தடவி, கண்ணாடி போலப் பளபளத்தது. அதில் தெரிந்த வடிவத்தையும் சேர்த்து, இரண்டு கண்ணன் நிற்பதைப் போல இருந்தது. ‘இரண்டு கண்ணனுக்கு இரண்டு வெண்ணெய் உருண்டை களைக் கொடுப்பாள் யசோதை!’ என்பது ஸ்வாமியின் எண்ணம்.

#ஸ்வாமிக்கு இவ்வளவு இருந்தால், ஸ்வாமியை வளர்த்து அவன் லீலைகளையெல்லாம் அனுபவிக்கும் பாக்கியம் பெற்ற யசோதைக்கு எவ்வளவு இருக்கும்?

#ஸ்வாமியின் லீலையில் தன்னை மறந்தாள் யசோதை. ‘நமக்கு இரண்டு கண்ணன்கள் போலிருக்கிறது. இந்த இருவருக்குமே வெண்ணெய் தர வேண்டும்’ என நினைத்தாள்.

‘#ஆஹா! நமக்குத்தான் வெற்றி!’ என சந்தோஷப்பட்ட ஸ்வாமி ஆசை யாகக் கை நீட்டி னார்.

#எதிர்பாராத ஒரு காரியம் செய்தாள் யசோதை. தன் கையில் வைத்திருந்த கடுக்காய் அளவு வெண்ணெயை இரண்டு பங்காக்கி, அதை இருவருக்கும் கொடுத்தாளாம்.


மகாபாரதப் போர் நடந்து கொண்டிருந்த நேரம்

🏹🏹🏹🏹🏹🏹🙏🙏🙏🏹🏹🏹🏹🏹🏹🏹

மகாபாரதப் போர் நடந்து கொண்டிருந்த நேரம். ஸ்ரீகிருஷ்ணரே தனக்கு தேரோட்டியாக வந்தது பற்றி அர்ஜுனனுக்கு கர்வம் ஏற்பட்டு விட்டது! யுத்தம் முடிந்து தேரில் பாசறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர் கிருஷ்ணனும் அர்ஜுனனும்.
"நீ தேரிலிருந்து இறங்கி என் கையைப் பிடித்துக் கீழே என்னை இறக்கி விடுவாய் கிருஷ்ணா!'' என்றான் அர்ஜுனன்.
➖➖➖🏹
"முடியாது!...நீ தானே இறங்குவாயாக!''
"தேரோட்டி எஜமானனின் வார்த்தைகளைத் தட்டலாமா? நான் இறங்குவதற்கு கை கொடுப்பாய்!''
➖➖➖🏹
"நீ என்ன தள்ளாத கிழவனா? இறங்கு!'' கடிந்து கொண்டான் கிருஷ்ணன் தேரிலிருந்து இறங்காமல்!
பெருமூச்சு விட்டுக் கொண்டே இறங்கினான் அர்ஜுனன்.
➖➖➖🏹
கிருஷ்ணன் தேரை விட்டுக் கீழே இறங்கினான்.
தேர் முழுவதும் ஒரே வினாடியில் தீப்பற்றி எரிந்தது!
அர்ஜுனன் திகைத்து விட்டான்!
"என்ன திகைத்து விட்டாயா
➖➖➖🏹
அர்ஜுனா!...நினைவிருக்கிறதா?...கர்ணன் நாகாஸ்திரம் உபயோகித்தானே....அப்போது நான் தேர்த்தட்டை அழுத்தியதால் உன் தலை தப்பியது! ஆனால் அந்த அஸ்திரத்தின் சக்தி முழுவதையும் உன் தேரில் கொடியாக அமர்ந்தானே அனுமன்!....
➖➖➖🏹
இத்தனை நேரம் எனக்காகத் தாங்கிக் கொண்டிருந்தான். இப்போது நான் இறங்கினேன் அனுமனும் விடை பெற்றான்! அதனால் தேர் எரிந்து சாம்பலாயிற்று! இப்போது நினைத்துப் பார்! நான் மட்டும் கீழே இறங்கி உனக்குக் கை கொடுத்திருந்தால் நீயும் சேர்ந்து எரிந்திருப்பாய்! புரிகிறதா?....கர்வப்படாதே!''
➖➖➖🏹
"கிருஷ்ணா!...என்னை மன்னித்து விடு!....ஒரு வினாடி கர்வம்கூட ஒரு வம்சத்தையே அழிக்கும் ஆயுதம் என்பதை இப்போது புரிந்து கொண்டேன்!'' என்றான் அர்ஜுனன்!

➖➖➖🏹➖➖🙏🏹🙏➖➖🏹➖➖➖

Saturday, April 4, 2020

ஸ்ரீராமஜெயம்





எமக்கு இது சாது பிறர்க்கு இது தீது என்பது அற்றது ஸ்ரீராமஜெயம்

ஏதுமற்று ஏங்கி நிற்போர் தமக்கு ஏற்றம் தருவது ஸ்ரீராமஜெயம்

ஏனஉருகொண்ட வனியை ஏந்தி இருக்கையில் வைத்தது ஸ்ரீராமஜெயம்

ஐம்பூதங்களை அடிமையாய்க் கொண்ட அனுமன் உரைத்தது ஸ்ரீ ராமஜெயம்

ஐம்முகத்தவனும் பங்கயத்தவனும் அமரரும் உரைப்பது ஸ்ரீ ராமஜெயம்

ஒருவழி நில்லாது அலையுறு மனத்தை ஒருவழிப்படுத்தும் ஸ்ரீ ராமஜெயம்

ஒருவனும் யான் எனநினை என்று உண்மை உணர்த்தும் ஸ்ரீ ராமஜெயம்

ஓங்காரப் பொருளே உண்மையின் வடிவாய் ஓர்வாம் என்பது ஸ்ரீ ராமஜெயம்

ஓவியம்தனிலும் காவியம் தனிலும் ஊக்கமளிப்பது ஸ்ரீ ராமஜெயம்

ஒளவையைப்போன்று அருணகிரிக்கும் அறத்தை உரைப்பது ஸ்ரீ ராமஜெயம்

ஒளடதம் போன்று படிபோர் தமக்கு அனைத்தும் அளிப்பது ஸ்ரீ ராமஜெயம்.

ஸ்ரீ ராம ஜெயம்.


கோசலை ராமர்



ராமரை, கோசலாதேவி மிகுந்த அன்புடன் வளர்த்து வருகிறாள். ராமர் தளர் நடையிட்டு, நடக்க ஆரம்பித்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி.
கோசலை, ஒரு நாள் ராமரை பால் குடிக்க அழைத்தாள். அன்று என்னவாயிற்றோ... ராமர் பால் குடிக்க மறுத்தார். கோசலை கெஞ்சினாள். ராமர் சற்றுத் தள்ளிப் போய் நின்று, அங்கிருந்தபடி கோசலையைப் பார்த்தார். இந்தக் கட்டத்தை அருணகிரி நாதர் வர்ணிக்கும் அழகைப் பாருங்கள்!

எந்தை வருக ரகுநாயக வருக
மைந்த வருக மகனே இனி வருக
என்கண் வருக எனதாருயிர்வருக அபிராம
இங்கு வருக அரசேவருக முலை
உண்க வருக மலர் சூடிட வருக
என்று பரிவி னொடுகோசலை புகல வருமாயன்
- (தொந்தி சரிய) திருப்புகழ்

பால் குடிக்க கோசலை, ராமரை அழைக்கும் இந்த வர்ணனையில் பலவிதக் கருத்துகள் அடங்கியுள்ளன. இதிலுள்ள ஆன்மிகமும் அருந்தமிழின் பெருமையும் அருணகிரிநாதரின் தமிழ் வன்மையும் ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டியவை.

இந்தப் பாடலில் ‘வருக’ எனும் வார்த்தை பத்து முறை வருகிறது. ‘பிள்ளைத் தமிழ்’ நூல்களில் உள்ள பத்துப் பருவங்களில் ‘வருகைப் பருவம்’ ஒன்று. ஒவ்வொரு பருவத்திலும் பத்துப் பாடல்கள் வீதம் உண்டு. அதில் ஒவ்வொரு பாடலும், ‘வருக வருகவே’ என முடியும். அதன்படி ‘வருக’ என்பதைப் பத்து முறை அமைத்த அருணகிரிநாதரின் இந்தப் பாடல், ஒரு வருகைப் பருவமாகவும் அமைந்திருக்கிறது. சில, பிள்ளைத் தமிழ் நூல்களில் பருவத்துக்கு ஒரு பாடலாக, பத்துப் பாடல்களுடன் முடித்திருப்பார்கள். அதன்படி பார்த்தால் இது ‘பிள்ளைத் தமிழ்’ பாடலாகவும் கருதப்படும்.
‘வருக’ என்பதைப் பத்து முறை அவர் பயன்படுத்தியதில், மற்றொரு கருத்தும் உண்டு. மஹாவிஷ்ணுவின் அவதாரங்களைச் சொல்லும்போது தச (பத்து) அவதாரங்கள் என்போம். நமக்காகப் பத்து முறை இறங்கி வந்த ஸ்வாமியை, அதனால்தான் அருணகிரிநாதரும் பத்து முறை ‘வருக’ என அழைக்கிறார். ராம அவதாரம், தசாவதாரத்தில் ஒன்று தானே!
இந்தப் பாடலின் முடிவில் ‘வருமாயன்’ என அவர் முடித்திருப்பதிலும் வேறொரு பொருள் உண்டு. ‘வருமாயன்’ என்பதை ‘வரும்+ஆயன்’ என்று பிரித்தால், ராமர் அடுத்த அவதாரத்தில் ஆயர் குல தீபமாக- கண்ணனாக வரப் போகிறார் என்ற விளக்கமும் கிடைக்கும்.

அரவ சயனா நாராயணா








அரவ சயனா நாராயணா!
அற்புத லீலா நாராயணா!
ஆபத் சகாயா நாராயணா!
ஆலிலை கிருஷ்ணா நாராயணா!

உலகினை அளந்தாய் நாராயணா!
உலகெலாம் காப்பாய் நாராயணா!
எங்கும் நிறைந்தாய் நாராயணா!
ஏழைப் பங்களா நாராயணா!

சிங்கார மூர்த்தி நாராயணா!
சிக்கலை அறுப்பாய் நாராயணா!
பத்மநாபனே நாராயணா!
பரகதி அருள்வாய் நாராயணா!

திருமகள் மணாளா நாராயணா!
திருமலைக் கொழுந்தே நாராயணா!
நந்த கோபாலா நாராயணா!
நரசிம்ம தேவே நாராயணா!

தசாவதாரா நாராயணா!
தவக்கோலம் பூண்டாய் நாராயணா!
கனிவுடன் காப்பாய் நாராயணா!
நாராயணா நமோ நாராயணா!

ஓம்_நமோ_நாராயணா

நாராயணா

*"4,000 பாசுரங்களை பிழிந்தெடுத்த மாதிரி, ஏதாவது ஒரு பாடல் இருக்கிறதா..."*

காஞ்சி பரமாச்சாரியாரை தரிசிக்க வந்த ஒரு வைணவர், கோரிக்கை ஒன்றை வைத்தார்.

‘‘சுவாமி... தினமும் ஆழ்வார்களின் ‘திவ்ய பிரபந்த’ பாடல்களை பாராயணம் செய்ய விரும்புகிறேன். ஆனால், நேரமின்மையால் தவிக்கிறேன். 4,000 பாசுரங்களை பிழிந்தெடுத்த மாதிரி, ஏதாவது ஒரு பாடல் இருக்கிறதா... அதை சொன்னால் நன்றாக இருக்குமே...’’ என்றார்.

கலகலவென சிரித்த சுவாமிகள், ''பார்வதிதேவி ஒரு முறை சிவனிடம், எந்த ஒரு நாமத்தை சொன்னால் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களையும் சொன்ன பலன் கிடைக்கும் எனக் கேட்டாள். 'ராம' நாமத்தை சொன்னாலே போதும் என சிவனும் பதிலளித்தார். 'ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே சகஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே' என்ற சகஸ்ரநாம ஸ்தோத்திரம் தான் சிவன் சொன்ன பதில். நீ கேட்ட கேள்வியும் அது மாதிரி இருக்கு'' என்றார்.

சுவாமிகள் அடுத்து என்ன சொல்ல போகிறார் என அனைவரும் காத்திருந்தனர்.

''ஆழ்வார்களில் நிறைய பாடல்கள் பாடியவர் திருமங்கையாழ்வார். அவர் பாடாத விஷ்ணு கோயில் என்றாலே, அது சமீபத்தில் கட்டப்பட்டதாக இருக்கும். அவருடைய பாசுரம் ஒன்றில் *'நாராயணா'* என்ற திருநாமத்தின் பெருமையை சொல்கிறது.

*"குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயர் ஆயின எல்லாம்*

*நிலந்தரம் செய்யும் நீள்விசும்பு அருளும் அருளொடு பெருநிலம் அளிக்கும் வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்*

*நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்.''*

*'நாராயணா'* என்ற ஒரு சொல்லை கண்டு கொண்டால் போதும். அதன் மூலம் எல்லா நலன்களும் வாழ்வில் உண்டாகும்' என்கிறார் ஆழ்வார். நேரமில்லாத போது இந்த ஒரு பாசுரம் போதும். நேரமிருந்தால் மற்ற பாசுரங்களையும் பாராயணம் செய். ஆனால், ஒருபோதும் 'நாராயண' மந்திரத்தை மறக்காதே என்று கூறி ஆசியளித்தார்.

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...