Friday, April 10, 2020

திருப்பதி #பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்படும் ஆகாச கங்கை தீர்த்தம் எப்படி உருவானது.......

#திருப்பதி #பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்படும் ஆகாச கங்கை தீர்த்தம் எப்படி உருவானது.......

128 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது என்ன ? - திருப்பதி கோயில் மூடப்பட்டது குறித்து ருசிகர தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது அதன் வரலாற்றிலேயே 2வது முறையாக பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 1892-ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி வியாழக் கிழமை, மற்றும் 6-ம் தேதி வெள்ளிக் கிழமை, ஆகிய இரண்டு நாட்கள் கோயில் அடைக்கப்பட்டது.

இதற்கான காரணங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் பதிவேட்டில் பதிவு செய்துள்ளது. அந்த காலகட்டத்தில் மகந்துக்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலை பராமரித்து வந்தனர். ஆகம சாஸ்திரங்கள்படி கோயில் பூஜைகள் நடைபெற்று வந்தது. இதற்காக பெரிய ஜீயர் மற்றும் சின்ன ஜீயர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் மகந்துக்களுக்கும், ஜீயர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்த இரு நாட்களும் கோயில் நடை அடைக்கப்பட்டது என பதிவேட்டில் உள்ளது. இதுகுறித்து கடந்த 1892 மே மாதம் 9-ம் தேதி ‘தி ஹிந்து' ஆங்கில நாளிதழ் நான்காம் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த கால கட்டங்களில் பக்தர்கள் அலிபிரி மற்றும் வாரி மெட்டு வழியாகவே ஏழுமலையானை பாதயாத்திரையாக சென்று தரிசித்து வந்தனர். மேலும் வாகன போக்குவரத்துகளும் இல்லாததால் முதியோர் டோலி மூலம் சுவாமியை தரிசித்து வந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து சுமார் 128 ஆண்டுகள் கழித்து தற்போது மக்கள் அலைமோதும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 2-வது முறையாக தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோயிலில் தரிசனம் நிறுத்தப்பட்டாலும் ஏழுமலையானுக்கு அதிகாலை சுப்ரபாத சேவை முதல் இரவு ஏகாந்த சேவை வரை அனைத்து சேவைகளும் ஏகாந்தமாக நடைபெற்று வருகிறது. மேலும் கோயிலுக்குள் மக்கள் நலனுக்காக பல்வேறு யாகங்களும் பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.

திருமலைக்கு ஒரு வசீகரம் உண்டு. ஒருமுறை சென்று அந்த வேங்கடவனை தரிசித்துவிட்டால், மீண்டும் மீண்டும் அவனைக் காணும் ஆசை கொள்வார்கள் பக்தர்கள். ஒரு சிலருக்குத் திருப்பதி வரும்போது கொண்டுவரும் பணம் பொருள் அனைத்தும் செலவு செய்யும்படி ஆகிவிடும். `ஊருக்குத் திரும்பக்கூடக் காசு இல்லாதபடி பெருமாள் வாங்கிட்டாரு' என்று புலம்பியபடி மலையிறங்கியவர்கள்கூட, `அடுத்து எப்போது மீண்டும் மலையேறி அவரை தரிசனம் செய்யலாம்' என்று எண்ண ஆரம்பித்துவிடுவார்கள்.

ஒரு சிலருக்கு அங்கேயே தங்கிவிடலாமா என்றுகூட இருக்கும். இன்று பெருமாளை தரிசிக்கக் கோடான கோடி பக்தர்கள் வந்துபோகிறார்கள். தரிசனமும் சில நொடிகள்தான். ஆனால், அந்தக் காலத்தில் ஏழுமலைகள் ஏறி வந்து இறைவனை தரிசிப்போர் எண்ணிக்கை மிகக்குறைவே. அப்படி ஒருமுறை அவனை தரிசித்துவிட்டால் அவனுக்குக் கைங்கர்யம் செய்துகொண்டு அங்கேயே இருந்துவிடத் தோன்றும். அப்படித்தான் திருமலைக்கு வந்து பெருமாளுக்குத் தீர்த்த கைங்கர்யம் செய்ய ராமாநுஜரால் பணிக்கப்பட்டவர் திருமலை நம்பிகள்.

அவர் பணி தினமும் பெருமாள் திருமஞ்சனத்துக்கு நீர் எடுத்து வருவது. அதுவும் கோயிலிலிருந்து சுமார் 7 கி. மீ தொலைவில் இருக்கும் பாபவிநாசத் தீர்த்தத்துக்கு தினமும் மலைப் பாதையில் நடந்து சென்று நீர் எடுத்துவரும் கைங்கர்யம். இளமை என்றாலும் பரவாயில்லை. திருமலை நம்பிகளுக்கு வயதும் அதிகமாகிவிட்டது. ஆனாலும் தன் முதுமையை நினைக்காமல், தினமும் நடந்து சென்று நீர் எடுத்துவந்தார்.

பக்தர்கள் சிரமத்தை அந்தப் பரமன் அறியமாட்டானா என்ன... தள்ளாட்டமும் மூச்சிரைப்புமாக நீரெடுத்துக்கொண்டு வரும் திருமலை நம்பிகள் முன்பாக ஒரு வேடுவ இளைஞனாக தரிசனம் கொடுத்தார் பெருமாள். திருமலை நம்பிகளின் வழியை மறித்து, ``தாத்தா குடிக்கக் கொஞ்சம் தண்ணி கொடு" என்று கேட்டார். நீர் கேட்பவர்களுக்குக் கொடுக்க வேண்டும். `இல்லை' என்று சொல்வது பாவம். ஆனால், வேடனுக்கு நீர் கொடுத்தால் மீண்டும் போய் நீர் எடுத்து வரவேண்டும்.

``தம்பி, உனக்கு நீர் தருகிறேன். நீ ஒரு உதவி செய். பெருமாளுக்கு அபிஷேகம் செய்ய நீர் வேண்டும். எனக்கோ வயதாகிவிட்டது. அதனால், குடித்து முடித்ததும் மீண்டும் தீர்த்தக் கரைக்குப் போய் நீயே நீரெடுத்துவந்து கொடு " என்றார் திருமலை நம்பிகள்.

ஆனால், வேடனின் ரூபத்தில் நின்ற பெருமாளோ புன்னகைத்து, அவரோடு விளையாடத் திருவுளம் கொண்டார்.

``தாத்தா, நான் ஒன்றும் தாகத்தில் கேட்கவில்லை. நீங்கள் நீர் தரவேண்டாம்" என்று சொல்லிவிட்டார்.
சரி என்று திருமலை நம்பிகள் சில அடி நடந்ததும் வேடன் அம்பு ஒன்றை நம்பிகள் சுமந்து செல்லும் குடத்தில் எய்தான். குடம் உடைந்து நீர் கொட்டியது.

கிருஷ்ணாவதாரத்தில் கோபியரின் தயிர்க்குடங்களை உடைத்துப்பின் சென்று அருந்தியதுபோல, திருமலை நம்பிகளின் உடைந்த குடத்திலிருந்து ஒழுகிய நீரை வேட ரூபத்தில் பெருமாள் குடித்தார். இதைக் கண்ட திருமலை நம்பிகள் அயர்ந்துபோனார்.

``தம்பி, நான் உனக்கு நீர் தருகிறேன் என்றுதானே சொன்னேன்... ஏன் இப்படிச் செய்தாய்... இனி எப்படி நான் நீர் எடுத்துச் செல்வேன்... அதுவும் நீண்டதூரம் போக வேண்டுமே... பானையை வேறு உடைத்துவிட்டாயே" என்று புலம்பினார்.
உடனே வேடன், தன் வில்லை எடுத்து மீண்டுமொரு அம்பை அங்கிருந்த பாறை ஒன்றில் எய்தார். அவ்வளவுதான் அங்கே ஒரு சிறு ஊற்று அருவியெனக் கொட்டியது.

``தாத்தா, இதுவும் புண்ணிய தீர்த்தம்தான். ஆகாயத்திலிருந்தே கொட்டுகிறது பார் கங்கை'' என்று சொல்லிச் சிரித்தார். திருமலை

நம்பிகளுக்கு வந்திருப்பது யார் என்பது புரிந்தது. சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். பெருமாள் அவருக்கு தரிசனம் கொடுத்தார்.

நம்பிகளை ஆசீர்வதித்து, ``நீர் இனி இங்கேயே நீர் எடுத்துக்கொள்ளும். அதுவும் முடியாத நாள்களில், என் ஆலயத்துக்குள்ளேயே இருக்கும் பங்காருபாவியில் நீர் எடுத்து அபிஷேகம் செய்யலாம்" என்று சொன்னார். பெருமாளே உரிமையோடு தாத்தா என்று அழைத்ததால் அவருக்குத் `தாத்தாச்சாரி' என்ற பெயர் உண்டாயிற்று. கோயிலில் பெருமாளை தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் வேளையில், `பங்காருபாவி' உள்ளதைக் காணலாம். இன்றும் பெருமாளுக்கு ஆகாச கங்கை தீர்த்தத்தில் ஏலக்காய், லவங்கம், பச்சைக் கற்பூரம் ஆகியன கலந்து திருமஞ்சனம் செய்கிறார்கள்.

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கும் திருப்பதி வேங்கடவனை தரிசிப்பதில் எத்தனை சிரமங்கள் இருந்தாலும் அவையெல்லாம், அவனைக் கண்ட மாத்திரத்தில் மறைந்து மனம் புத்துணர்வு கொள்ளும். நாம் சொல்லாமலே நம் பிரச்னைகளை அறிந்து அதைத் தீர்த்து அருளுவார் வேங்கடவன். அதனால்தான் நாள்தோறும் எண்ணற்ற பக்தர்கள் அவனை நாடி ஓடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...