Friday, April 10, 2020

ராமானுஜர் கண்டெடுத்தத் திருமண் மேடு

ராமானுஜர் கண்டெடுத்தத் திருமண் மேடு

அடுத்த தெருவில் இருந்த ஒரு வைணவப் பெரியவரை காணச் சென்றிருந்தேன். அவர் முகத்தில் சோகத்தின் குறியினைப் பார்த்து 'ஸ்வாமி! திரு மேனிக்கு ஏதாவது சங்கடமோ?' என்று விசாரித்தேன்.

'தேஹம் கிடக்கட்டும்! திரு நாராயணபுரத்திலிருந்து மருமான் வாங்கி அனுப்பிய திருமண் கட்டிகள் முழுவதும் தீர்ந்து விட்டன. அவனோடு உடனடி தொடர்பு கொள்ளும் ப்ரமேயம் இப்போது இல்லை. அவனோடு எப்பொழுது பேசி, சுத்த திருமண் திரும்பி எப்ப கிடைச்சுத் தரிக்கப் போறேனோன்னு மனசு சங்கடமா இருக்கு' என்றார்.

நித்யம் தரிக்கும் ஊர்த்வ புண்டரத்துக்குக் (திருமண் ஸ்ரீ சுவர்ண காப்பு) கூட திடீர்னு ஏன் எனக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதோ? ' என்று நொந்து கொண்டார்.

குரலைக் கனைத்துக் கொண்டு 'மாமா தப்பா எடுத்துக்கப் படாது. இது உமக்கு மட்டும் ஏற்பட்டதல்ல. சாக்ஷத் உடையவருக்கே ஒரு நாள் திருமண் கிடைக்கப் பெறாமல் அவர் வருந்திய சம்பவத்தினை சொல்ல அனுமதிக்கணும்னு' ஆரம்பித்தேன்.

கூரத்தாழ்வாருக்கும் மற்றைய வைணவ பெரியார்களுக்கும் சோழ மன்னன் இழைத்த கொடுமைகளால், நிலை குலைந்து போன ராமானுஜர், ஸ்ரீ ரெங்கத்து கோயிலின் நிர்வாஹப் பொறுப்பிலிருந்துத் தம்மை விடுவித்துக் கொண்டு, மைசூர் பிராந்தியத்தில் இருந்த தொண்டனூருக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அப்போது உடையவரின் வயது கிட்டத் திட்ட 90. அச்சமயம், மைசூரை ஆண்ட ஜைன மத மன்னன் விடல தேவனுக்கு வைணவத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்து, அவன் பெயரை விஷ்ணு வர்த்தன் என்று மாற்றி தம்முடைய சிஷ்யக் கூட்டத்தில் இணைத்துக் கொண்டார்.

ஒருநாள் காலை நித்ய ஸ்நானாதிகளை முடித்துக் கொண்டு திருமண் காப்பென்னும் ஊர்த்வ புண்டரம் தரிக்க முற்பட்ட போது எங்கு தேடியும் திருமண் கட்டி கிடைக்கவில்லை. அரை குறை மனதோடு ஸ்ரீ சுவர்ணம் மட்டுமே முழுதுமாகத் தரித்துக் கொண்டு நித்யானுஷ்டானங்களைப் பூர்த்தி செய்தார்.

இருந்தும் மனம், திருமண் தரிக்காமல் இருந்தது ஏதோ தன்னுடைய கைங்கர்ய நேர்த்தியில் எம்பெருமானுக்கு குறை ஏற்படுத்தியதாகத் தோன்றவும், இரவு வரையில் வருந்திய வண்ணமே கண் துயின்றார்.

கருணா சாஹர நாராயணின் திருவிளையாடல் தான் இது என்னும் வகையாய், ஸ்ரீமன் நாராயணன்,

எம்பெருமானாரின் கனவில் தோன்றி, மேல் கோட்டைக்கருகில், அபரிமிதமான திருமண் மேடு புதைந்து கிடக்கும் இடத்தையும், அருகினிலேயே தன் அர்ச்சாவதார விக்ரஹம் புதைந்து கிடக்கும் இடத்தையும்,

டில்லி அருகே தன்னுடைய உற்சவ விக்ரஹமான 'ராமப் பிரியர்' ஒரு துருக்கிய மன்னனின் அரண் மனையில் அகப்பட்டுக் கொண்டதையும் கூறினான்.

எம்பெருமானின் கட்டளையாகக் கொண்டு அர்ச்சாவதார மூர்த்தியை ,மண்ணிலிருந்துத் தோன்றி எடுத்தும், திருமண் மேடுகளைத் தோண்டி அறிந்ததும் அல்லாமல்,

டில்லி புறப்பட்டு, கனோஜ் (Kanauj) நகரில் கனவில் எம்பெருமான் சொன்ன மன்னனான துருக்கியனின் அரண்மனைக்குத் துணிவுடன் சென்று,

அவனை சம்மதிக்க வைத்து, 'ராமப் பிரியர்' என்னும் எம்பெருமானின் உற்சவ மூர்த்தியைப் பெற்று திருநாராயண புரத்தில் எழுந்தருள வைத்து கிரமமான பிரதிஷ்டை செய்தார்.

இன்றும் உண்மையான திருமண் மேடுகள் மேல் கோட்டை மலைகள் இடையில் தான் இருக்கின்றது என்பது பூகோளக் குறிப்பு.

சில விதண்டா வாதிகள், இந்தச் சம்பவம் நடந்த 1100 ம் ஆண்டு சமீபத்தில், டில்லியை எந்த ஒரு துருக்கிய மன்னனும் ஆள வில்லை என்று ஆக்ஷேபம் செய்தனர்.

1097ம் ஆண்டு முதலாக 1100 ம் ஆண்டுக்குள், துருக்கிய சாம்ராஜ்ஜியம், பெரும்பாலான பிராந்தியங்களை ஆக்கிரமித்து டில்லிக்கு அருகினில் உள்ள கனோஜ் (Kanauj) நகரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டதற்கான உண்மையினை, நுணுக்கமான சரித்திரச் சான்றுகள், பேசுகின்றன.

மூலக் கரு: திவ்ய மஹாநுபாவர் அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமிகள் உபந்யாசக் குறிப்புகள்.

No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...