ராமரை, கோசலாதேவி மிகுந்த அன்புடன் வளர்த்து வருகிறாள். ராமர் தளர் நடையிட்டு, நடக்க ஆரம்பித்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி.
கோசலை, ஒரு நாள் ராமரை பால் குடிக்க அழைத்தாள். அன்று என்னவாயிற்றோ... ராமர் பால் குடிக்க மறுத்தார். கோசலை கெஞ்சினாள். ராமர் சற்றுத் தள்ளிப் போய் நின்று, அங்கிருந்தபடி கோசலையைப் பார்த்தார். இந்தக் கட்டத்தை அருணகிரி நாதர் வர்ணிக்கும் அழகைப் பாருங்கள்!
எந்தை வருக ரகுநாயக வருக
மைந்த வருக மகனே இனி வருக
என்கண் வருக எனதாருயிர்வருக அபிராம
இங்கு வருக அரசேவருக முலை
உண்க வருக மலர் சூடிட வருக
என்று பரிவி னொடுகோசலை புகல வருமாயன்
- (தொந்தி சரிய) திருப்புகழ்
பால் குடிக்க கோசலை, ராமரை அழைக்கும் இந்த வர்ணனையில் பலவிதக் கருத்துகள் அடங்கியுள்ளன. இதிலுள்ள ஆன்மிகமும் அருந்தமிழின் பெருமையும் அருணகிரிநாதரின் தமிழ் வன்மையும் ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டியவை.
இந்தப் பாடலில் ‘வருக’ எனும் வார்த்தை பத்து முறை வருகிறது. ‘பிள்ளைத் தமிழ்’ நூல்களில் உள்ள பத்துப் பருவங்களில் ‘வருகைப் பருவம்’ ஒன்று. ஒவ்வொரு பருவத்திலும் பத்துப் பாடல்கள் வீதம் உண்டு. அதில் ஒவ்வொரு பாடலும், ‘வருக வருகவே’ என முடியும். அதன்படி ‘வருக’ என்பதைப் பத்து முறை அமைத்த அருணகிரிநாதரின் இந்தப் பாடல், ஒரு வருகைப் பருவமாகவும் அமைந்திருக்கிறது. சில, பிள்ளைத் தமிழ் நூல்களில் பருவத்துக்கு ஒரு பாடலாக, பத்துப் பாடல்களுடன் முடித்திருப்பார்கள். அதன்படி பார்த்தால் இது ‘பிள்ளைத் தமிழ்’ பாடலாகவும் கருதப்படும்.
‘வருக’ என்பதைப் பத்து முறை அவர் பயன்படுத்தியதில், மற்றொரு கருத்தும் உண்டு. மஹாவிஷ்ணுவின் அவதாரங்களைச் சொல்லும்போது தச (பத்து) அவதாரங்கள் என்போம். நமக்காகப் பத்து முறை இறங்கி வந்த ஸ்வாமியை, அதனால்தான் அருணகிரிநாதரும் பத்து முறை ‘வருக’ என அழைக்கிறார். ராம அவதாரம், தசாவதாரத்தில் ஒன்று தானே!
இந்தப் பாடலின் முடிவில் ‘வருமாயன்’ என அவர் முடித்திருப்பதிலும் வேறொரு பொருள் உண்டு. ‘வருமாயன்’ என்பதை ‘வரும்+ஆயன்’ என்று பிரித்தால், ராமர் அடுத்த அவதாரத்தில் ஆயர் குல தீபமாக- கண்ணனாக வரப் போகிறார் என்ற விளக்கமும் கிடைக்கும்.
No comments:
Post a Comment