Sunday, March 29, 2020

ஓம் ஸ்ரீ பூதேவ்யை நம



ஓம் ஸ்ரீ பூதேவ்யை நம.

அடியேனுக்கு தாயருக்கும் தாயானவளே ஸ்ரீசீதம்மா ஸ்ரீ பூமி பிராட்டியே அடியேன் தண்டனிடுகிறேன் உமது குழந்தை.

ஒரு கவளம் சோறு (பிரசாதம்) எடுக்கும் போது உன் நினைவு எம்மை வாட்டுகிறது அன்னம் பரப்பிரம்மம் என்பது போல நீயே இந்த குழந்தைக்கு பரப்பிரம்மம் ஆக இருக்கிறாய் தாகம் தீர நீர் தந்தாய் நீரை அதிக விரயம் செய்ய மாட்டேன் உணவு தந்தாய் உணவை ஒரு துளிகூட விரயம் செய்ய மாட்டேன் இருக்க இடம் கொடுத்தாய்.நன்றி கடனாக தினமும் திருமண்ணை சாத்துகிறேன் அம்மா.

மனித வர்க்கத்திற்கு தேவையான அனைத்து பதார்த்தமாய் நீயே ஆகி எங்களை இரட்சிக்கிறாய்.

ஒருகவளம் பிரசாதம் எடுக்கும் போது உன் நினைவு அனைவருக்கும் வந்தால் அகில உலகத்தில் அனைத்து ஊயிர்களூம் பசியில்லாமல் சந்தோஷமாக இருக்கும் தாயே ஒரு அரிசி சோறும் வீணாகாது அம்மா

எத்தனை பிறவி எடுத்தாலும் உந்தன் நினைவில் வாடும் படி அடியேனுக்கு வரமளிப்பாய் தாயே. அனைத்து உயிர்களூம் உஜ்ஜீவனம் ஆகும் படி ஸ்ரீவராஹ சரம் ஸ்லோகம் எங்களுக்கு வாங்கி பிரசாதித்தாயே அம்மா இதனையே ஸ்ரீஆண்டாளாக அவதரித்து திருப்பாவையாக கொடுத்தாயே அம்மா.

ஒருத்தர் அடியேன் மீது எச்சில் துப்பினால் கூட எம்மால் பொறுக்க முடியவில்லை ஆனால் தாயே அனைத்தையும் தாங்கி அதனை செய்பவர்களையும் கோபம் கொள்ளாமல் தன் குழந்தை என்று சகித்து சீராட்டி வளர்க்கிறாயே உமது பொறுமைகடலில் ஒரு அணு பொறுமை இந்த அடியவனுக்கும் கொடு தாயே.

எங்களுக்கெல்லாம் புருஷாகாரியாய் நீயிருந்து ஸ்ரீமந் நாராயணன் அவரிடத்தே சேர்க்கின்றாய் அம்மா.ஆயிரம் திருநாவை உடைய ஸ்ரீஆதீஷேசனால் கூட உன்பெருமை சொல்ல இயலாது தாயே இந்த குழந்தை எம்மாத்திரம் அம்மா.

உன் வயிற்றிலே பிறந்தேன் உன் வயிற்றிலே சந்தோஷமாக மறைவேன் பிறவி மீண்டும் எடுத்தால் உன் பேரருளூக்கு இந்த குழந்தை இருக்கும்படி அருள் செய்தாலே போதுமானது தாயே.

ஜகந்மாமதா ஸ்ரீஆண்டாள் தாயாரே ஸ்ரீ பூமி பிராட்டி உந்தன் கருணைக்கு எத்தனை ஜென்மம் எடுத்து உமை நினைத்தாலும் ஈடு (அடியேனுக்கு)ஆகாது அம்மா..

ஓம் ஸ்ரீ பூதேவ்யை நம
ஓம் ஸ்ரீ பூதேவ்யை நம
ஓம் ஸ்ரீ பூதேவ்யை நம.

Poem on Sri Krishnan



க்ருஷ்ணன் இல்லை எனில், கடல் ஏது? வான் ஏது?

கண்ணன் இல்லை எனில், நாதம் ஏது?  நடனம் ஏது?

க்ருஷ்ணன் இல்லை எனில், காதல் இல்லை; கருணை இல்லை

கண்ணன் இல்லை எனில், நானுமில்லை; நீயுமில்லை

க்ருஷ்ணன் இல்லை எனில், கீதையுமில்லை; தர்மமும் இல்லை

கண்ணனே பார்வை; க்ருஷ்ணனே வார்த்தைகள்;

ஸர்வம் கண்ணனே! நானும் க்ருஷ்ணனுக்கே!

Saturday, March 28, 2020

இராமாயணம் படிப்பது எதற்காக?


இராமாயணம் படிப்பது எதற்காக?


'அறம் கடந்தவர் செயல் இது'
என்று, உலகு எலாம் ஆர்ப்ப,
நிறம் கரிந்திட, நிலம் விரல்
கிளைத்திட, நின்றான்--
இறங்கு கண்ணினன்,
எல் அழி முகத்தினன், தலையன்,
வெறுங் கை நாற்றினன்,
விழுதுடை ஆல் அன்ன மெய்யன்.
                          - கம்பராமாயணம்.

எவ்வளவோ தவறு செய்பவர்கள் எல்லாம் மிக மிக மகிழ்ச்சியாக தான் இருக்கிறார்கள். பணம், செல்வாக்கு, அரசியல் அதிகாரம் , புகழ் என்று திருப்தியாகத் தான் இருக்கிறார்கள். ஆனால் நல்ல வழியில் செல்பவர்கள்  துன்ப பட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதை எல்லாம் பார்க்கும் போது  நாம் மட்டும் ஏன் நல்ல வழியில் செல்ல வேண்டும்?

பேசாமல் நாமும் அறம் பிறழ்ந்து சென்று நாலு காசு பார்த்தால் என்ன என்றுதான் நல்லவர்கள் மனத்திலும் தோன்றும். இராவணனைப் போல் அதிகாரமும், செல்வாக்கும், புகழும், வீரமும் , செல்வமும் கொண்டவர் யார்?
இராவணன் காலத்தில் வாழ்ந்தவர்கள், இராவணனைப்பற்றி என்ன நினைத்திருப்பார்கள்?
இவனுக்கு அழிவே இல்லை. இவனை யார் எதிர்க்க முடியும் என்றுதான் நினைத்து இருப்பார்கள். ஆனால் இராவணன் ஒரே ஒரு தவறு செய்தான். மாற்றான் மனைவியை அபகரித்தான்.

அந்த ஒரு அறம் பிறழ்ந்த செய்கை அவனை எங்கு கொண்டு நிறுத்தியது என்பது இந்த உலகே அறியும். இராவணனின் முதல் நாள் போரில் அனைத்து ஆயுதங்களையும் இழந்து தனியாக நிற்கிறான். யுத்தத்தில் தோல்வி என்றால் என்ன என்று முதல் முதலில் அறிந்து கொள்கிறான். அப்படி நிற்கும் இராவணனின் நிலையை தான் கம்பன் மேற்கண்ட பாடலில் படம் பிடித்து காட்டுகிறான்.

தனிமையில் நிற்கிறான் இராவணன். ஆயுதம் எல்லாம் இழந்து, இருபது கைகளும் ஆல மரத்தின் விழுதுகள் போல தொங்குகின்றன. வெட்கத்தில் தலை குனிந்து நிற்கிறான். காலினால் தரையை கீறிக் கொண்டு நிற்கிறான். அறம் பிறழ்ந்து நடப்பவர்கள் கதி எல்லாம் இப்படிதான் ஆகும் என்று உலகே அவனைக் கண்டு நகைத்ததாம்.
ஆக இராமாயணம் படிப்பது கதைக்கோ,  கவி நயத்துக்கோ அல்ல. வாழ்கையை செம்மையாக  வாழ்வதற்கே.


ஸ்ரீ ராம ஜெயம்

ராவணனை வதம் செய்த பிறகு, போர்க்களத்தில் ராமன் ஓய்வாக தரையை நோக்கியபடி அமர்ந்திருந்தார். அப்போது ஒரு பெண்ணின் நிழல் தெரிந்தது. அந்த நிழலுக்குச் சொந்தக்காரியான பெண், அவரது திருப்பாதங்களைத் தொட முயற்சிப்பதை அவளது நிழலின் நடவடிக்கை மூலம் புரிந்து கொண்டார். உடனே தனது காலை உள்ளிழுத்துக் கொண்டார்.

“நீ யாரம்மா?” என்றார்.

“நான் ராவணனின் மனைவி மண்டோதரி. என் கணவரை யாராலும் வெல்ல முடியாது என இறுமாந்திருந்தேன். ஆனால் அவரையே ஒருவன் கொன்று விட்டான் என்றால், அவனிடம் ஏதோ உயர்ந்த குணம் இருக்க வேண்டும் என நினைத்தேன். மேலும். க்ஷத்திரிய குல தர்மப்படி, கணவனை இழந்த பெண்ணை வெற்றி பெற்றவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் நீ வரவில்லை. ஆச்சரியப்பட்டேன். இங்கே என் நிழல் உன் மீது படுவதைக் கூட நீ விரும்பவில்லை என்னும் போது, உன் சிறந்த குணத்தை என்னவென்பேன்!

என் கணவரிடம் கூட ரகு குலத்தில் உதித்த ராமன் மனிதன் அல்ல.
உலகைக் காக்கும் பரம்பொருள். விஸ்வரூபன். தன்னுடைய ஒவ்வொரு அங்கங்களிலும் உலகங்களையே தாங்கி நிற்கிறான். பாதாள லோகமே அவனது பாதங்கள். பிரம்மலோகமே அவன் சிரசு. கதிரவனே அவனது கண்கள். மேகமே அவனது கேசம். அவன் இமைப்பதே இரவு பகலாகிறது. திசைகளனைத்தும் அவனுக்கு செவிகள். அவனது திருநாமம் எல்லாப் பாவங்களையும் நொடிப்பொழுதில் போக்கவல்லது. அவன் வேதத்தின் சாரம். ராமன் சாட்சாத் தெய்வ வடிவம் என்பதில் சந்தேகம் இல்லை. அவனிடம் பகையை ஒழித்து சீதையை விட்டுவிடுங்கள்’ என்று மன்றாடினேன். அவர் கேட்கவில்லை.

உன் வெற்றிக்கு காரணம், என் கணவரிடம் இல்லாத ஒரு நற்குணம் உன்னிடம் இருந்தது தான். அதுதான் உன் ஏகபத்தினி விரதத்தன்மை. அதனால் தான் நீ வென்றாய்,” என்றாள். உடனே ராமன் தன் சுயவடிவான நாராயணனாக அவளுக்கு விஸ்வரூப தரிசனம் கொடுத்தார்.
ராமாயணத்தில் பாக்கியவதியாகத் திகழ்ந்தவள் மண்டோதரி. அனுமன் இலங்கை சென்று ராவணனின் அந்தப்புரம் சென்ற போது, மண்டோதரி ஒழுங்காக உடையணிந்திருந்ததைக் கண்டு, இவள் சீதையாக இருப்பாளோ’ என்று சந்தேகம் கொண்டான். அந்தளவுக்கு ஒழுக்கமுள்ளவளாக விளங்கியதால் தான், கெட்டவனுக்கு வாழ்க்கைப்பட்டும் அவளுக்கு நாராயண தரிசனம் கிடைத்தது.💐

ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்

காகாசுரனின்_சரணாகதி

ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் !

#காகாசுரனின்_சரணாகதி:

விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் எழுதிய பராசர பட்டர், மகாலக்ஷ்மியின் திருக்கல்யாண குணங்களை வர்ணிக்கக் கூடிய ஸ்தோத்திரம் இயற்றி இருக்கிறார். குணரத்ன கோசம் என்று அதற்குப் பெயர் அதில் சீதா பிராட்டியின் கோஷ்டி, ராமபிரானுடைய கோஷ்டி என்று இரண்டாகப் பிரித்து, சீதையினுடைய கோஷ்டியே உயர்ந்து நிற்கிறது என்று தீர்ப்புச் சொல்கிறார்.

பிராட்டியின் கோஷ்டி ஏன் உயர்ந்து நிற்கிறதாம்..?

சீதாபிராட்டியின் சரணாகத ரக்ஷணம் ராமனுடையதைக் காட்டிலும் உயர்ந்து நின்றது எப்படி...?

விபீஷணன், ராமனுடைய திருவடியைப் பிடித்துக் கொண்டபோது அவனை ரட்சித்து அருளினான் பரமாத்மா.

சீதாபிராட்டியோ ஒரு படி மேலே போனாள் !

இந்திர புத்திரனான காகாசுரன் பிராட்டியினிடத்திலே அபசாரமாக நடந்து கொண்டான். அவனைத் தண்டிப்பதற்காக பகவான் பிரும்மாஸ்திரத்தைப் பிரயோகம் பண்ணினான். அசுரன் அஸ்திரத்துக்கு பயந்து ஓடுகிறது..!

இந்திரனாலும் கைவிடப்பட்டு, திரி மூர்த்திகளாலும் கைவிடப்பட்டு ஊர் ஊராகப் போய் வீடு வீடாக அலைகிறது காக்கை! ஆனாலும் ராம பாணத்தில் இருந்து அதனால் தப்பித்துக் கொள்ள முடியவில்லை.

இந்தக் காகம் வீடு வீடாகப் போய் சரணாகதி பண்ணியதற்கு ஒரு கதையை உபமானம் சொல்லுவார்கள்.

ஒரு யானையை வைத்துக் கொண்டு ஜீவிதம் நடத்திக் கொண்டிருந்தான் ஒரு பாகன். ஒரு நாள் அந்த யானைக்கு மதம் பிடித்து, அடர்ந்த காட்டுக்குள் ஓடிப்போய்விட்டது. யானைப் பாகன் வந்து பார்த்தால், யானையைக் காணோம்..! எங்கெங்கோ தேடியும் அது கிடைக்கவில்லை. கடைசியில் ரொம்ப சிந்தாகிரஹனாய் விழுந்து கிடந்தான் அவன்!

வீட்டுக்குப் போய் உருண்டு கிடந்த பானைகளை எல்லாம் எடுத்து, ஒவ்வொரு பானையாக யானையைத் தேடினானாம்.

பெரிய பெரிய இடங்களெல்லாம் தேடிக் கிடைக்காத யானை, பானைக்குள்ளே கைவிட்டால் கிடைத்துவிடுமா! அதைப் போலதான் காகாசுரனும் பலம் படைத்தவர்கள் எல்லாம் கைவிட்ட பின்னர் ஒவ்வொரு வீடாய்ப் போய் - சாமானியர்கள் வீடாய்ப் போய் அபயம் கேட்டானாம்!

எந்த வீட்டிலும் அசுரனுக்கு உதவி கிட்டவில்லை. கடைசியில் ராமனிடத்திலே தான் வந்து சேர்ந்தான்.

சரணாகதி என்று அவன் திருவடியிலே வந்து இறக்கையைப் படியச் செய்தான். விழுந்தவனின் தலை, ராமனின் பாதங்களை நோக்காமல் எதிர் திசை நோக்கித் திரும்பியிருந்தது.

சீதாபிராட்டி பார்த்தாள் - குழந்தைக்கு சேவிக்கத் தெரியவில்லையே! என்று காகாசுரனின் தலையை ராமனின் திருவடி நோக்கித் திருப்பி வைத்தாள்!

எத்தகைய கொலைக் குற்றம் புரிந்திருக்கிறான் அவன்! அப்படிப்பட்டவனை என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் அல்லவா! ஆனால் பகவான் மகாலக்ஷ்மியினுடைய காருண்யத்தைப் பார்த்துத் தணிந்து போனான். காகாசுரனுடைய ஒரு கண்ணை மட்டும் போக்குவதோடு நிக்ரஹத்தை நிறுத்திக் கொண்டான்.

அதனால் தான் இன்றைக்கும் காக்கைகளுக்கு ஒரு கண் பார்வை இல்லாமல் இருக்கிறது. தலையைத் திருப்பித் திருப்பி, சாய்த்துத்தான் அதனால் பார்க்க முடியும்.

காகசுரனின் தலையைத் திருப்பி வைத்து அவனுக்கு அனுக்ரஹம் பெற்றுத் தந்ததை காகாஷி நியாயம் என்று சொல்வார்கள்!

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !

ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்

ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் !

ஒரு மனிதன் துஷ்ட தேவதைகளை வழிபட்டான். எதற்காக? தனக்கு வேண்டிய எல்லாவற்றையும் முடித்துக் கொடுக்க ஒரு பூதம் தேவை என்பதற்காக. அவன் செய்த தவம் பலித்தது. பூதமும் அவன் முன்னால் தோன்றியது.

பூதம் சொன்னது, “தலைவனே கட்டளை இடு. கண் மூடித் திறப்பதற்குள் காரியத்தை முடித்து விடுவேன். ஆனால்………… ஒரே ஒரு நிபந்தனை………………. என்னால் சும்மா மட்டும் இருக்க முடியாது. நீ வேலை எதுவும் கொடுக்காவிடில் உன்னையே விழுங்கி விடுவேன்”. இதைக் கேட்ட அந்த மனிதனுக்கு ஒரே சந்தோஷம். வேலை கொடுப்பதா கஷ்டம்? நிறைய வேலைகளைக் கொடுப்போம் என்று எண்ணினான்.

எனக்கு ஒரு மாளிகையைக் கட்டிக் கொடு என்றான். அடுத்த பத்து நிமிடத்தில் பிரம்மாண்டமான அரண்மனை அங்கே வந்துவிட்டது! இதைச் சுற்றி ஒரு சாலை போடு என்றான். அதையும் பூதம் நொடிப் பொழுதில் நிறை வேற்றி விட்டது! இதற்கு என்ன வேலை கொடுப்பது என்று அந்த மனிதன் திகைக்கத் துவங்கினான். உடனே பெரிய நகரத்தை உருவாக்கு என்றான். அதையும் பத்து நிமிடத்தில் முடித்துவிட்டு அடுத்த வேலை என்ன என்று கேட்டது.

அந்த மனிதனுக்கு பயம் வந்துவிட்டது. வேலை கொடுக்காவிடில் பூதம் விழுங்கி விடுமே என்று மரண பயம் தொற்றிக் கொண்டது. அருகில் ஒரு சந்யாசி இருந்தார். ஓடிப் போய் அவர் காலில் விழுந்தான். ஏதேனும் ஒரு வழி சொல்லி என்னைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சினான்.

அவர் ஒரு நல்ல யோசனை கொடுத்தார். அதோ இருக்கிறது பார்! ஒரு பெரிய மூங்கில் கம்பு. அதை பூமியில் நடச் சொல் மேலும் கீழும் ஏறி இறங்கி வரச் சொல் நான் ‘நிறுத்து’ என்று சொல்லும் வரை இப்படிச் செய்து கொண்டே இரு என்று பூதத்துக்கு உத்தரவிடு என்றார் அந்த சந்யாசி.

அந்த மனிதனும் பூதத்துக்கு அவ்வாறே உத்தரவிட்டான். அது கம்பத்தை நட்டு மேலும் கீழும் ஏறி இறங்கி வந்து அலுத்துச் சலித்து விட்டது. நாளடைவில் ஒரு நாள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று எண்ணிக் கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போய்விட்டது!

உங்களுக்கு ராம நாமம் தான் அந்த மூங்கில் கம்பம். உங்களை வாட்டி வதைக்கும் அஹம்காரம்தான்—- ( யான் எனது என்னும் செருக்கு=வள்ளுவன் குறள்) ——அந்த பூதம். அதை ராம நாமம் என்னும் கம்பத்தின் மீது ஏறி இறங்க உத்தரவிடுங்கள். உங்கள் அஹம்காரத்தை அழிக்க வந்த மகத்தான சக்தி ராம நாமம் தான். அதை உச்சரித்தால் யான் எனது என்னும் செருக்கு தானாக ஓடிப் போய்விடும்.
மேலேயுள்ள கதை சுவாமி ராம்தாஸ் ஆங்கிலத்தில் சொன்னது.

வள்ளுவனும் இதை அழகாகக் கூறுகிறான். வள்ளுவன் ஒரு பெரிய சம்ஸ்கிருத அறிஞன். வடமொழியில் உள்ள பகவத் கீதையிலும், மனு தர்ம சாஸ்திரத்திலும், மஹா பாரதத்திலும், தர்ம சாஸ்திரங்களிலும் உள்ள விஷயங்களை பல குறள்களில் சொல் பிசகாமல், வரி பிறழாமல் மொழி பெயர்க்கிறான்!

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் (குறள் 346, அதிகாரம் துறவு) — என்பது வள்ளுவன் வாய்மொழி.

பொருள்: அஹம்காரம், மமகாரம் இரண்டையும் அழிப்பவர்களுக்கு – அகந்தையைக் கைவிட்டவர்களுக்கு — தேவலோகத்துக்கும் மேலான மோக்ஷம் கிடைக்கும். அதாவது வீடு பேறு அடைய சுருக்குவழிப் பாதை!
நாமும் ராமன் புகழ் பாடுவோம்.

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !

ஆராவமுதன்

ஆராவமுதன்.....

அடடா. என்ன சுவையான திருப்பெயர். நாராயண வாசுதேவ விஷ்ணு போன்ற திருநாமங்கள் எல்லாம் வேதங்களிலும் வேதாந்தங்களிலும் பரக்கப் பேசப்பட்டிருக்க அந்த நாமங்களில் இல்லாத சுவையைக் காட்டும் இந்த திருநாமம்......

ஒரு குடத்தில் இருக்கும் அமுதத்தை பத்து பேர் உண்ணலாம். பெரிய குடம் என்றால் இன்னும் சிலர் கூட உண்ணலாம். இப்பிரபஞ்சத்தில் இருப்பவர்கள் எல்லோரும் சேர்ந்து காலம் காலமாய் அனுபவித்தாலும் தீராத அமுதம் போல் இருப்பவனன்றோ எம்பெருமான்! அதனால் அவனுக்கு ஆராவமுதன் என்ற திருப்பெயர் ஆயிற்று!

சௌசீல்யம்

சௌசீல்யம்

ஸ்ரீராமனுக்குச் சளைத்தவளா சீதாப்பிராட்டி ?

அயோத்தி அரண்மனையில் ஸ்ரீராம பட்டாபிஷேகம் நடக்கிறது. அப்போது ‘அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த…‘ என்று கம்பர் வர்ணித்தபடி அனைவரும் ஆவலுடன் தொண்டாற்றினர். அனுமன் சிங்காதனத்திலிருந்து சற்றுத் தொலைவில் இருந்தார். அவர் தனக்குச் செய்த பேருதவியை நினைத்த சீதை அவருக்கு இந்த சமயத்தில் ஏதாவது பரிசளிக்க வேண்டும் என்ற உறுதி கொண்டு, இந்திரன் தனக்கு அனுப்பியிருந்த முத்து மாலையைக் கைகளில் ஏந்திக் கொண்டு தன் அரியாசனத்திலிருந்து எழுந்து பல அடிகள் நடந்து வந்து அனுமனை அணுகி, ராமனிடம் கண் ஜாடையால் அனுமதி பெற்று, அனைவரும் வியக்க அனுமனுக்குப் பரிசாக அளித்தாள். ஒரு ராணி தன் தொண்டன் இருக்குமிடம் சென்று பரிசளித்து தான் சௌசீல்யம்

யாருக்கும் மதிப்பளித்துப் பழகுவதே சௌசீல்யம்.

விஷ்ணு சஹஸ்ரநாமம் மஹிமை

🌺விஷ்ணு சஹஸ்ரநாமம் மஹிமை

🌷விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதால் ஏற்படும் நன்மைகள் !!

🌷மகாபாரதத்தின் இறுதிக்கட்டம். பீஷ்மர் அம்புப் படுக்கையில் மரணத்தை எதிர்நோக்கிப் படுத்திருக்கிறார். கர்ணனும் வஞ்சனையால் கொல்லப்படுகிறான். குந்திதேவி கர்ணனை மகனே என்றழைத்து துக்கம் அனுஷ்டிக்கிறாள். கர்ணனுடைய மனைவியும் அவன் உடல்மேல் விழுந்து கதறுகிறாள். இவர்களோடு இன்னொரு பெண்மணியும் கர்ணனுக்காக அழுதாள். அதைக் கண்ட தருமபுத்திரர் கிருஷ்ணனைப் பார்த்து, ""இவள் யார்? இவள் ஏன் அழுகிறாள்?'' என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணர், ""இவள் தர்ம தேவதை. இனி உலகில் தர்மமே இருக்கப் போவதில்லை.

🌷தர்மம் செய்வதற்கென்றே பிறந் தவன் கர்ணன். அவனே போய்விட்ட பிறகு பூமியில் எனக்கென்ன வேலை என்று உலகை விட்டுப்போகிறாள் அவள்'' என்றார். தர்மபுத்திரரைப்பயம் சூழ்ந்து கொண்டது.

🌷காரணம்- பாண்டவர்களுடைய பேரனான ஜெனமேஜெயன் ஆளும்போது இந்த நாட்டில் தர்மம் இருக்காதாஎன்கிற பயம்தான் அது. ""தர்மம் மீண்டும் செழிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?'' என்று பரந்தாமனை தர்மர் கேட்க, பரந்தாமனோ ""அம்புப் படுக்கையில் படுத்திருக்கும்பீஷ்மரைக் கேள்; அவர் சொல்வார்'' என்றார்.

🌷பீஷ்மரும் தர்மதேவதை உலகை விட்டுச் சென்றதால் ஏற்படப் போகும் அவலங்களைச் சொல்கிறார்:""இனி உலகம் செழிப்புற்று விளங்காது. தேசங் கள் ஒவ்வொன்றும் அநியாயமாகச் சண்டையிட்டு அழியும். அரசர்கள் நீதிமான்களாக இருக்க மாட்டார்கள். அவர்களிடம் பணிபுரியும் அமைச்சர்கள் முதல் பணியாட்கள் வரை ஊழல் செய்து, மக்களை வாட்டி தவறான வழியில் தனம் சேர்ப்பார்கள். அரசனிடம் நல்ல வற்றிற்கு நீதி கிடைக் காது. குருமார்கள் தங்கள் சீடர்களுக்கு ஒழுங்காகப் பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள்; சீடர் களும் ஒழுங்காகப் படிக்க மாட்டார்கள். படித்தவன் சூதும் வாதும் செய்வான். மழை பொழியாது; நிலங்கள் விளைச்சலைக் கொடுக்காது; பஞ்சமும் பட்டினி யும் தலைவிரித்தாடும். கணவன்மார்கள் தங்கள் மனைவியைச் சரிவர காப்பாற்ற மாட்டார்கள்; மனைவிமார்களும் பதிவிரதையாக இருக்க மாட்டார்கள். அவர்களின் குழந்தைகள் தவறான வழியில் நடக்கும்...

🌷''இப்படி பீஷ்மர் சொல்லச் சொல்ல பாண்டவர்கள் பயந்தார்கள். இதிலிருந்து தங்கள் சந்ததியினர் தப்பிப்பது எப்படி என்று கேட்டார் கள். ""அதை ஸ்ரீ கிருஷ்ணனே சொல்லுவார்'' என்று பீஷ்மர் கை காட்ட, கிருஷ்ணனோ, ""நீங்கள் பிதாமகர். நான் சொல்லுவதைவிட உங்கள் நாவிலிருந்தே நல்ல வார்த்தைகள் புறப் படட்டும்''
என்று சொன்னார்.

🌷அப்போது புறப் பட்டவைதான் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமம். அதாவது, எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனை ஆயிரம் பெயர் சொல்லி அர்ச்சித்து அவன் மனம் குளிர வேண்டினால் தர்மம் மீண்டும் தழைக்கும் என்பதுதான் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் மகிமை.பகவானுக்கு ஆயிரம் பெயர்கள் உண்டா என்று நாம் வியப்படையலாம்.

🌷சாதாரண மனிதனாகிய நமக்கே பாலசுப்பிரமணியன் என்று பெயர் வைத்தால், பாலா, பாலு,சுப்பிரமணி, சுப்பி, மணி, மணியன் என்று பல பெயர்களால்அழைக்கும்போது, பகவானுக்கு ஆயிரம் பெயர் கள் இருக்காதா என்ன? இந்த ஆயிரம் பெயர் களைச் சொல்லி, பகவானை வேண்டினால் கொஞ்சமாவது தர்மம் பிழைக்கும் என்பது பீஷ்மர் வாக்கு.

🌷உடனே பார்வதிதேவிக்குச் சந்தேகம் வந்து விட்டது. அவள் சர்வேஸ்வரனான தன் கணவனைப் பார்த்து, ""சுவாமி, இது எப்படி சாத்தியமாகும்? ஆயிரம் நாமங்கள் சொல்லி அதனால் தர்மம் தழைக்கும் என்றால், அந்த நாமங்களை பண்டி தர்களால் சொல்ல முடியலாம்; படித்தவர்களால் சொல்ல முடியலாம். ஆனால் படிக்காத ஒருவன் தர்மம் தழைக்க வேண்டும் என்பதற்காக ஆயிரம் பெயர்களை நினைவில் வைத்துக் கொண்டு சொல்ல முடியுமா?'' என்று கேட்டாள்.ஈஸ்வரன் புன்னகைத்தார்.""தேவி... நீ சொல்வது சரிதான். ஏதுமறியாத ஒருவன் ஆயிரம் பெயர் சொல்லி திருமாலை வேண்டுவது நடக்காத காரியம்தான். ஆனால் அதற்கும் ஓர் வழி உண்டு.

🌷"ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமேஸஹஸ்த்ர நாம தந்துல்யம் ராம நாம வரானனே'-இப்படி மூன்று முறை சொன்னால் போதும். சஹஸ்ர நாமம் சொன்ன பலனை அடையலாம்'' என்று பார்வதிதேவியின்சந்தேகத்தை நிவர்த்தி செய்தார் ஈஸ்வரன்.சரி;
இப்படிச் சொல்வதால் நமக்கு என்ன பலன் கிடைக்கும்? என்று கேட்கலாம். மரா... மரா... மரா... என்று சொல்லியே ராமநாமத்தை உச்சரித்த வேடனும் திருடனுமாக இருந்தவனே வால்மீகி மகரிஷியாக உயரவில்லையா? அது தான் ஸ்ரீராம நாம மகிமை.

🌷மேலும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும், அனைத்து இனத்தைச் சேர்ந்தவர்களும் சொல்லலாம். முழு மனதோடு பகவானைச் சரணாகதி அடைந்தால்பலன்களை அவன் தருவான். பேய், பிசாசுகள் அண்டாது. வியாதிகள் அணுகாது. வைத்தியர்கள் கைவிட்ட தீராத நோயும் தீரும். சுகப்பிரசவம் சரியாக நேரும். நோயாளிகளின் காதருகே அவர்கள் மனம் கேட்கும்படியாக சஹஸ்ர நாமப் பாராயணம் செய்வது மிக மிக உத்தமம். மேலும் தர்மங்களும் தழைக்கும்.

🌷ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதர், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீதேசிகன், ஸ்ரீமத்வாச்சாரியார், ஸ்ரீராகவேந்திரசுவாமிகள் போன்ற மகான்கள் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமத்திற்கு மிக அருமையான பாஷ்யங் கள் (பதவுரை- பொழிப்புரை) எழுதியிருக்கிறார் கள். இதிலிருந்தே இதனுடைய பெருமையை அறியலாம்.


🌷"பரித்ராணாய ஸாதுநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் !!தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே !!

🌷 அனைவரும் தினமும் விஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம்செய்து விஷ்ணுவின் அருளை பெறுவோமாக . ஆரோக்கியமாக வாழ்வோம்.

#ஓம்_நமோ_நாராயணா

Saturday, March 21, 2020

கோபத்தை குறைப்பவனே ஞானி

கோபத்தை குறைப்பவனே ஞானி


ஒரு சமயம் கிருஷ்ணர், பலராமர், அர்ஜுனன் மூவரும் அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தனர். இரவாகி விட்டது. மூவரும் ஓரிடத்தில் தங்கி விடிந்ததும் செல்லலாம் என்று எண்ணினார். வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒருசேரத் தூங்கக்கூடாது என்றும், ஜாமத்துக்கு ஒருவராகக் காவல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன்படி கிருஷ்ணரும், பலராமரும் தூங்கச் செல்ல அர்ஜுனன் காவல் இருந்தான். அப்போது திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது. அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது. அகன்ற நாசியும், தூக்கிய பற்களும், முட்டைக் கண்களுமாக இருந்தது அவ்வுருவம். மரத்தடியில் இருவர் தூங்குவதையும், ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது. அதைக்கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அதைத் தடுத்தான். அப்போது அந்த உருவம் அவ்விருவரையும் தான் கொல்லப்போவதாகவும் அதற்கு அர்ஜுனன் துணை செய்யவேண்டும் என்றும் கேட்டது. அதைக் கேட்ட அர்ஜுனன், கோபம் கொண்டு அவ்வுருவத்தைத் தாக்கினான்.

அர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக, அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெருகியது. அர்ஜுனன் ஆக்ரோஷத்தோடு அதனுடன் போரிட, அது பூதாகாரமாய் விளங்கியது. இறுதியில் அர்ஜுனனைப் பலமாகத் தாக்கிவிட்டு மறைந்தது. இரண்டாம் ஜாமம் தொடங்க, பலராமரை எழுப்பிவிட்டு அர்ஜுனன் தூங்கச் சென்றான். பலராமர் காவல் இருந்தார். அப்போது, மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி, அர்ஜுனனிடம் கூறியது போல பலராமரிடமும் கூறியது. அதைக்கேட்டு கோபம் கொண்ட பலராமரும் அதனுடன் சண்டையிட்டார். அவ்வுருவம் அடிபணிவதாய் இல்லை. பலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக, அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது. பின் பலராமரையும் பலமாகத் தாக்கிவிட்டு அவ்வுருவம் மறைந்து விட்டது. மூன்றாம் ஜாமம் தொடங்க, பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பிவிட்டு தூங்கச் சென்றார். அப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது. அதைப் பார்த்த கிருஷ்ணர், கடகடவெனச் சிரித்தார்.

ஏன் சிரிக்கிறாய்? என்றது அவ்வுருவம். உனது தூக்கிய பற்களையும், அழகான முட்டைக்கண்களையும் கண்டுதான் என்றார் கிருஷ்ணர், சிரிப்பை அடக்க முடியாமல். அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அது சண்டை போட்டது. கிருஷ்ணரோ புன்னகையை மாற்றாமலே, சண்டை போட்டார். கிருஷ்ணர் சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்துகொண்டே வந்தது. கடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது. கிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார். பொழுது விடிந்தது. பலராமரும், அர்ஜுனனும் எழுந்தனர். இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும், அவர்களைத் தாக்கியதும் அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பெரிதாகியது பற்றியும் பேசினர். அப்போது கிருஷ்ணர், துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி, நீங்கள் இருவரும் சண்டை போட்ட உருவம் இதுதான். நீங்கள் அதனுடன் சண்டை போடும்போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள். உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது. நான் சிரித்துக் கொண்டே சண்டை போட்டதால் இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டே வந்து புழுவாக மாறி விட்டது. வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு விட்டு புன்னகையோடு வெளியேறி விட்டால், அவன் புழுவுக்குச் சமமாகி விடுவான். கோபத்தையும் குறைப்பவனே ஞானி என்றார் கிருஷ்ணர்.

சர்வம் விஷ்ணு மயம் !   ஓம் நம சிவாய !

ராம, ராம, ராம ராம...





அரை நிமிடம்ந்தான் தான் ஆகும் படிக்க, இதைப் படியுங்கள். அழகான வர்ணனை


"ராம ராம " இதை ஜபித்தால் அனுமன் வருவார்,

உடனே அவர் எஜமான் ராமர் வருவார்,

கூடவே இணை பிரியா லட்சுமணன் வருவார்,

ராமன் இருக்கும் இடம் என்று சீதா தேவி வருவாள்,

சிவபக்தனாகிய அனுமன் வந்தால் சிவனும் வருவார்,

சிவன் வந்தால்,

சிவன் பார்யை பார்வதியும் வருவாள்.

பார்வதி வந்தால், அவள் குழந்தைகள் விநாயகர், முருகன் வருவார்கள்,

இதை காண பூலோக சஞ்சாரி நாரதர் வருவார்,

நாரதர் வந்தால் ப்ரும்மா வருவார்,

ப்ரும்மாவை தொடர்ந்து சரஸ்வதி வருவாள்.

இதை கண்டு மகிழ தேவாதி தேவர்களும் வருவார்கள்.

தேவாதி தேவர்கள் வந்தால் அவர்கள் ப்ருந்தாவனத்தில் நிதம் பூஜிக்கும் க்ருஷ்ணன் வருவான்,

கூடவே பலராமன் வருவான்,

க்ருஷ்ணர் நிழலாக ருக்மணியும் வருவாள்,

எல்லோரும் வந்த பின்,

வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயணன் தனியாக இருக்க பிடிக்காமல் அவரும் வருவார்.

கூடவே பூஜிக்கும் லக்ஷ்மியும் வருவாள்

பார்த்தீர்களா, இதுதான் ராம நாமத்தின் மகிமை,
ஆகையால் ஜபிப்போம்

" ராம, ராம, ராம ராம "


பெரியவா பாதம் சரணம்

பெரியவா பாதம் சரணம்



அனாத ரட்சகா!

ஆபத் பாந்தவா!

அரண் அடைந்தோம்

அச்சம் நீக்கி

அபயம் அளிப்பாய்.

காஞ்சி வாஸா!

கருணா ஸாகரா!

காலடி வணங்கினோம்

கஷ்டம் நீக்கி காத்தருள்வாய்.

சத்குரு நாதா!

சங்கரா!

சரண் புகுந்தோம்

சங்கடம் நீக்கி

சாந்தம் அளிப்பாய்.

தர்ம ரக்ஷகா!

தீன சரண்யா!

தாள் பணிந்தோம்

துயரம் நீக்கி தயை புரிவாய்.

பக்த வத்ஸலா!

பரம தயாளா!

பாதம் பற்றினோம்

பாதகங்கள் நீக்கி

பரிவுடன் காப்பாய்.

பெரியவா பாதம் சரணம்

பெரியவா பாதம் சரணம்



அனுஷத்தில் அவதரித்த குரு

ஆன்மீகம் வளர்த்த குரு

இன்னருள் புரியும் குரு

ஈஸ்வர தத்துவம் உணர்த்திய குரு

உய்ய வழிகாட்டும் குரு

ஊழ்வினைகள் நீக்கும் குரு

எளிமையாக வாழ்ந்த குரு

ஏழைகளுக்கு இரங்கும் குரு

ஐயம் அகற்றும் குரு

ஒப்புயர்வற்ற குரு

ஓங்குபுகழ் காஞ்சி குரு

ஔஷதமான குரு

காமகோடி ஜகத் குரு

சங்கர மடத்தின் குரு

தர்ம ரக்ஷக குரு

பக்த ஜன மித்ர குரு

மஹாபெரியவா என்ற குரு.

மகாபெரியவா சரணம்

பல்லாண்டு பல்லாண்டு





பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வி திருக்காப்பு.

அடியோமோடு்ம் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு படைபோர்புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் #பல்லாண்டே.

திருப்பல்லாண்டு -  பெரியாழ்வார்

Thiruindaloor Andal...

Beautiful Andal sculpture on a pillar in Thiruindaloor Parimala Ranganatha Divya Desam temple.


ஆரோக்யம் தேஹி






ௐ நமோ பகவன் வாஸுதேவ தந்வந்தரே, மஹா விஷ்ணோ நாராயண வைகுண்டா, ஜன்மாந்த்ர க்ருத பாபம் ,வ்யாதி ஜன் மோசய மோசய , ஆயுர் வா்தய வா்தய, ஆரோக்யம் தேஹி தேஹி, ஶ்ரீ மூா்தயே நம :

நல்லதை நினைப்போம், நல்லதை செய்வோம்




*நல்லதை நினைப்போம்; நல்லதை செய்வோம்*

துவாரகையை ஆட்சிபுரிந்த கண்ணன் தெய்வமாக இருந்தாலும், பூலோகத்தில் மானிடராக அவதரித்ததால் முக்தி (மரணம்)என்பது தவிர்க்க முடியாதது. தன் இறுதிக் காலம் நிறைவுறப் போகிறது என்பதை அறிந்த பகவான் ஒருநாள் ஹிரண்ய நதிக்கரையினையொட்டி அடர்ந்த புதர்கள் நிறைந்த குரா மரத்தடியில் கால்களை நீட்டி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது *"ஜரா"* என்ற வேடன் ஒரு காட்டு முயலைத் துரத்திக் கொண்டு வந்தான். அது புதர்ப் பகுதியில் ஓடி மறைந்தது. அந்த வேளையில் கிருஷ்ணரின் கால்களில் ஒன்று வேடன் கண்களுக்கு முயல்போல் தெரிய, மறைந்திருந்து அம்பு எய்தான். அந்த அம்பு பகவானின் வலது குதிங்காலில் பலமாகத் தைத்ததும், "ஆ' என்ற அலறல் சத்தம் கேட்டு பதறினான் வேடன்; ஓடோடி வந்தான். அங்கே பகவான் *கிருஷ்ணர்* காலில் அம்பு தைக்கப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்ட வேடன், "பகவானே! உங்கள் பாதம் எனக்கு முயல் போல் தெரிந்ததால் மறைந்திருந்து அம்பு எய்தேன். என்னை மன்னித்து விடுங்கள்'' என்று கதறினான்.

வேடனே, வருந்தாதே. நாம் செய்த பாவங்கள் நம்மைப் பின் தொடர்ந்து வரும். தெரியாமல் செய்த பாவங்களை இப்பிறவியிலேயே பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி செய்திடலாம். ஆனால் தெரிந்து செய்த பாவங்களை எந்த வழிபாடுகளாலும் நிவர்த்தி செய்ய முடியாது.

அதற்கு நானே உதாரணம்.
திரேதாயுகத்தில் நான் *ராமனாக* அவதரித்தபோது, *வாலியை* மறைந் திருந்து அம்பு எய்து கொன்றேன். அப்போது *வாலி, "ராமா,* எனக்கும் உனக்கும் என்ன பகை? எங்கள் விலங்கினத்தில் ஒரு பெண்ணை கடத்திச் செல்வது சகஜம். ஆனால், நீ என்னைத் தவறாகப் புரிந்துகொண்டாய். என்னிடம் நேருக்கு நேர் போர்புரிய முடியாது என்பதை அறிந்து, மறைந்திருந்து என்னை வீழ்த்தினாய். இதே நிலைமை உனக்கு என்னால் ஏற்படும்.

தர்மம் என்று ஒன்றிருந்தால், எத்தனை காலமானாலும் உன்னை மறைந்திருந்து வீழ்த்துவேன்' என்று வேதனையுடன் சாபமிட்டான். அந்த சாபம் தான் இன்று பலித்தது.

தெய்வமாக இருந்தாலும் சிறிதளவு நெறி தவறினால் துன்பத்தை அனுபவித்தே தீரவேண்டும் என்பது பொது விதியாகும்.

இதற்கு எந்தவிதமான பரிகாரங்களும்,
யாகங்களும்
தான - தர்மங்களும், வழிபாடுகளும்
கைகொடுக்காது

அதைத்தான் நான் இப்போது அனுபவிக்கிறேன். வேடனே, நீதான் அந்த *வாலி* உன் சாபத்தினை நிறைவேற்றிவிட்டாய். முன்ஜென்ம நிகழ்வுகள் எதுவும் பூலோகத்தில் பிறந்தவர்களுக்கு நினைவுக்கு வராது. அதனால் உனக்கு இது தெரியவில்லை. என் அவதாரம்
இன்றுடன் முடிந்தது.

நீ நீடூழி வாழ்வாயாக'' என்று வாழ்த்திவிட்டு முக்தியடைந்தார் பகவான் கிருஷ்ணர்.

ஒருவருக்கு நாம் செய்யும் தீமை, மீண்டும் நமக்கே வந்துசேரும் என்னும் பேருண்மையை பகவான் தன் இரு அவதாரங்கள் மூலம் மனித குலத்துக்கு உணர்த்தியுள்ளார்.

எனவே, நல்லதையே நினைப்போம்; நல்லதையே செய்வோம். இறைவன் அருளால் எல்லாம்
நலமாகவே நடக்கும்.

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !

ஸ்ரீ ரங்கநாதர் காயத்ரி ஸ்ரீ ரங்கநாதர் ஸ்துதி :




#ஶ்ரீ_ரங்கம்

ஸ்ரீ ரங்கநாதர் காயத்ரி
ஸ்ரீ ரங்கநாதர் ஸ்துதி :

#ஸ்ரீ_ரங்கநாதர்_காயத்ரி :

ௐ வேதமூலாய வித்மஹே
வேதஸ் ஷ்ருங்காய தீமஹி
தன்னோ ரங்கப் ப்ரஜோதயாத் II

#ஸ்ரீ_ரங்கநாதர்_ஸ்துதி :

ஸப்தப்ராகார மத்யே ஸரஸிஜ
முகுலோத்பாஸமாநே விமாநே

காவேரீ மத்யதேசே பணிபதிசயநே
சேஷபர்யங்க பாகே

நித்ராமுத்ராபிராமம் கடிநிகடசிர:
பார்ச்வ விந்யஸ்த ஹஸ்தம்

பத்மாதாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கநாதம்பஜேஹம்

Tuesday, March 10, 2020

திருப்பாவை . வாழி திருநாமம்

திருப்பாவை
.
வாழி திருநாமம்

கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர்
நீதியால் நல்ல பக்தர் வாழும் ஊர்
நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.

திருவாடிப் பூரத்தில் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே
உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே!

kodhai piRandha oor govindhan vaazhumoor
sodhi maNi maadam thonRum oor
needhiyaal nalla paththar vaazhum oor naanmaRaigaL odhumoor
villipuththoor vEdhak konoor
paadhagangaL theerkkum paraman adi kaattum
vEdham anaiththukkum viththaagum kodhai thamizh
aiyaindhum aindhum aRiyaadha maanidarai
vaiyam sumappadhu vambu.

thiruvaadip pooraththu jagatthudhiththaaL vaazhiyE
thiruppaavai muppadhum cheppinaaL vaazhiyE
periyaazhvaar petreduththa peN piLLai vaazhiyE
perumpudhoor maamunikkup pinnaanaaL vaazhiyE
oru nootru naaRpaththu moonRuraiththaaL vaazhiyE
uyararangaRkE kaNNiyugandharuLithaaL vaazhiyE
maruvaarum thirumalli vaLa naadi vaazhiyE
vaNpudhuvai nagark kodhai malarp padhangaL vaazhiyE

AndaaL thiruvadigaLE charaNam

இவ்வாழி திருநாமத்தின் விளக்கம்,

ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமை!

கோதை பிறந்த ஊராகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவிந்தனாகிய பெருமாள் வாழுகின்றான்; அவ்வாறு பெருமை வாய்ந்த அவ்வூரிலே உள்ள க்ருஹங்களில் உள்ள மணிமாடங்களில் ப்ரகாசமான விளக்குகள் ஏற்றி வைக்கப் பட்டுள்ளன; நீதியைக் கடைபிடித்தல் என்பது வைணவ சம்ப்ரதாயத்தில் ஒன்று; அவ்வாறு சிறந்த நீதியை கடை பிடிக்கும் சிறந்த பக்தர்கள் வாழும் ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்; நான்கு மறைகள் எனப்படும் ரிக், யஜுர், சாம, அதர்வ வேதங்கள் தினமும் ஓதப்படும் ஊர். வில்லிபுத்தூரில் வேதாத்யயனம் பண்ணிய பல பண்டிதர்கள் உள்ளனர். அம்மண்ணை மிதித்தாலே நம் இதற்க்கு முன் செய்த பாபங்கள், செய்துக் கொண்டிருக்கும் பாபங்கள், செய்யப் போகும் பாபங்கள் ஆகிய அனைத்தும் ஒழிந்து, பரமனாகிய நாராயணனின் திருவடியினை நாம் அடையலாம். கோதை கூறிய முப்பது திருப்பாவையையும் அறியாத மானிடரை பூதேவி சுமக்க மாட்டாள். அவ்வாறு சுமப்பது வம்பு. (ஐயைந்தும் =5×5=25 ஐந்தும் 25+5=30)

ஆண்டாளின் பெருமை!
திருவாடிப்பூர நன்னாளிலே பிறந்த கோதை வாழ்க!
திருப்பாவை முப்பதினை உலககிற்கு அளித்தவள் வாழ்க!
பெரியாழ்வார் என்னும் விஷ்ணுசித்தர் கண்டெடுத்த பெண்பிள்ளை வாழ்க!
ஸ்ரீபெரும்புதூர் மாமுனி எனப்படும் உடையவரின் தங்கையாகிய ஆண்டாள் வாழ்க!
நூற்றி நாற்பத்தி மூன்று பாசுரங்கள் சொன்னவள் வாழ்க!
அரங்கனை தமக்குரியவனாக ஆக்கிக்கொண்டவலள் வாழ்க!
மல்லி என்னும் ஸ்ரீவில்லிபுத்தூர் வளம் பெற்று வாழ்க!
வன்மை பொருந்திய என்றைக்கும் இளமைத் தங்கிய நகரமாகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் உதித்த மங்கையின் தாமரைத் திருவடிகள் என்றென்றும் வாழ்க!


Sunday, March 8, 2020

🤺🤺மகாபாரத போர்🤺🤺

🤺🤺மகாபாரத போர்🤺🤺

தன் மகன் அபிமன்யு தன் கண் முன்னே இறப்பதை பார்த்து கேவி கேவி கண்ணீர் விட்டு அழுதான் அர்ஜுனன்

அதை பார்த்து சாரதியாக இருந்த கண்ணனும் கேவி கேவி கண்ணீர் விட்டு அழுதான்

கண்ணன் அழுவதை பார்த்த அர்ஜுனன் ,கண்ணனை இறுக பற்றி கொண்டு

கண்ணா!! அபிமன்யு உனக்கு மருமகன் அல்லவா அதனால் தான் நீயும் துக்கம் தாளமுடியாமல் அழுகிறாயோ ? என்று கேட்டான் .

கண்ணன் , இல்லை அர்ஜுனா நான் துக்கம் தாளாமல் அழவில்லை. உனக்குப் போய் கீதையை உபதேசம் பண்ணினனே அதை நினைத்து வெட்கம் தாளாமல் அழுகிறேன் என்றான் கண்ணன் .

அர்ஜுனன் -- கண்ணா! நீ இறைவன். உனக்கு உறவு பற்று பாசம் பந்தம் எதுவும் கிடையாது. ஆனால் என்னால் அப்படி இருக்க முடியாது.

கண்ணன் ---உறவு பற்று பாசம் எல்லாம் உடலில் உயிர் இருக்கும் வரைதான். அர்ஜுனா .

அர்ஜுனன் -- அப்படி சொல்லாதே கண்ணா - மானிடர்கள் மறைந்தாலும் பாச -பந்தம் அவர்களை விட்டுப் போகாது .

கண்ணன் -- அப்படியா இப்பொழுதே வா என்னோடு சொர்க்கலோகம் செல்லலாம். அங்கேதான் இறந்த உன் மகன் அபிமன்யுவின் ஆன்மா அலைந்து கொண்டிருக்கிறது என்று கூறி அர்ஜுனனை சொர்க்கலோகம் அழைத்து சென்றான் கண்ணன்.

ஒளிப்பிழம்பு வடிவுடன் சொர்க்க லோகத்தில் இருந்தான் அபிமன்யு. அவனை அடையாளம் கண்டுகொண்ட அர்ஜுனன் , என் மகனே அபிமன்யு ! என்று பாசத்தோடு கட்டி அணைக்கப் போனான் .

அணைக்கப் போன அர்ஜுனனைத் தடுத்த அபிமன்யுவின் ஆன்மா -- அய்யா யார் நீங்கள் --என் போன்ற ஆன்மாவுக்கு உறவு ஏதும் கிடையாது . தயவு கூர்ந்து என்னை விட்டு விலகி செல்லுங்கள் என்றது அபிமன்யுவின் ஆன்மா .

அதை கேட்டு அதிர்ச்சியாக நின்ற அர்ஜுனனிடம் கண்ணன், பார்த்தாயா பார்த்திபா! உறவு பாசம் பந்தம் உணர்வு கோபம் அன்பு காமம் யாவும் உடலில் உயிர் இருக்கும் வரைதான்; உடலை விட்டு உயிர் போய்விட்டால் ஏதும் அற்ற உடலுக்கும் உணர்வு இல்லை ; அதை விட்டு போன ஆன்மாவுக்கும் உணர்வில்லை

நீ அழவேண்டும் என்றால் அதோ பூவுலகில் போர்க்களத்தில் உன் மகன் அபிமன்யுவின் உடல் கட்டை இருக்கிறதே அதை கட்டி பிடித்து அழு. உன் உணர்ச்சியெல்லாம் அதில் கொட்டி அழு ஒரு உயிர் பிறப்பிற்கும் நீ காரணம் அல்ல பிறந்த உயிர் இறப்பிற்கும் நீ காரணம் அல்ல என்பதை நன்கு உணர்ந்துகொள்.

படைத்தவன் எவனோ அவனே தான் படைத்ததை ஒரு நாள் அழிக்கிறான் . நடக்கும் யாவிற்கும் நீ ஒரு கருவியே. செயல் யாவும் படைத்தவன் செயலே என்பதை உணர்ந்து செயல்படு.
அதுவே வாழ்வின் அர்த்தமாகும் என்று கூறி கண்ணன் புன்னகைத்தான் .

ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ

தரிசனம் எப்படி அமைய வேண்டும்.!!!

தரிசனம் எப்படி அமைய வேண்டும்.!!!

கோயிலில் உள்ள மூலவரைக்கண்டவுடன் ஒரு நொடி கூட வீணாக்காமல் மூலவரை வைத்தகண் அகற்றாமல் பார்த்து தரிசனம் செய்யுங்கள்.

இறைவனின் அழகில் உங்கள் மனதை பறிகொடுங்கள்.

இறைவனின் ஆடை அணிகலனை ரசியுங்கள்.

அவர் அருள்பாலிக்கும் கோலத்தை நினைத்து வியப்படையுங்கள்.

ஏனென்றால்,

நீங்கள் மூலவர் முன் செல்லும் போது சில சமயம் திடீரென அபிஷேகத்திற்காக திரை போட்டு விடலாம்.

அல்லது

அர்ச்சகர் மூலவரை மறைத்து விடலாம்.

எனவே கோயிலுக்குள் நுழைந்தவுடனேயே இறைவா! உனது தரிசனத்தை சிறப்பான முறையில் எனக்கு கிடைக்க அருள்புரிவாய்.

நான் உன்னை தரிசிக்க முடியாவிட்டாலும் கூட நீ என்னை பார்த்து கொண்டு தான் இருக்கிறாய்.

உனது கடைக்கண்பார்வை என்மீது விழட்டும் என மனதார பிரார்த்தனை செய்து கொண்டே இறைவனை காண செல்லுங்கள்.

இறைவனிடம் வேண்டுவதற்கு ஒன்றுமில்லை.

நம்மைப்படைத்த இறைவனுக்கு நமக்கு எது தேவை என்பதும் தெரியும்.

எனவே இறைவனிடம் கண் மூடி வேண்டுவதை விட்டு விட்டு, கண்திறந்து_பார்த்து_தரிசியுங்கள்.

அழகில் மயங்குங்கள்.

அத்துடன் இறைவா!

என்னை நீ தான் வாழ வைத்துக்கொண்டிருக்கிறாய்.

எனக்கு எது தேவையோ அதைக்கொடு.

எது தேவையில்லையோ அதை நீக்கிவிடு என்று மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.

மேலும் இறைவா!

நீ என் உள்ளத்திலும் இல்லத்திலும் நிறைந்திருந்து அருள் ஆட்சி செய்வாய் என வேண்டி இறைவனை இல்லத்தில் எழுந்தருள செய்யுங்கள்.

ராமரின் முன்னோர்களை தெரிந்து கொள்ளலாமா

#ராமரின் முன்னோர்களை தெரிந்து கொள்ளலாமா

1. பிரம்மாவின் மகன் -மரீசீ
2. மரீசீயின் மகன்- கஷ்யபர்
3. கஷ்யபரின் மகன் -விவஸ்வான்
4. விவஸ்வானின் மகன்- மனு
5. மனுவின் மகன் -இஷ்வாகு
6. இஷ்வாகுவின் மகன் -விகுக்ஷி
7. விகுக்ஷியின் மகன்- புரண்ஜயா
8. புரண்ஜயாவின் மகன் அணரன்யா
9. அணரன்யாவின் மகன் -ப்ருது
10. ப்ருதுவின் மகன்- விஷ்வாகஷா
11. விஷ்வாகஷாவின் மகன் -ஆர்தரா
12. ஆர்தராவின் மகன் யுவான்ஷ்வா-1
13. யுவான்ஷ்வாவின் மகன் ஷ்ரவஷ்ட்
14. ஷ்ரவஷ்டின் மகன் -வ்ரதஷ்வா
15. வ்ரதஷ்வாவின் மகன் -குவலஷ்வா
16. குவலஷ்வாவின் மகன் - த்ருதஷ்வா
17. த்ருதஷ்வாவின் மகன் -ப்ரோமத்
18. ப்ரோமத்தின் மகன்- ஹர்யஷ்வா
19. ஹர்யஷ்வாவின் மகன் -நிகும்ப்
20. நிகும்பின் மகன் -சன்டஷ்வா
21. சன்டஷ்வாவின் மகன் க்ருஷஸ்வா
22. க்ருஷஸ்வாவின் மகன் ப்ரஸன்ஜீத்
23. ப்ரஸன்ஜீத்தின் மகன் யுவான்ஷ்வா-2
24. யுவான்ஷ்வாவின் மகன் மன்தாத்தா
25. மன்தாத்தாவின் மகன் அம்பரீஷா
26. அம்பரீஷாவின் மகன் ஹரிதா
27. ஹரிதாவின் மகன் த்ரதஸ்யு
28. த்ரதஸ்யுவின் மகன் -ஷம்பூத்
29. ஷம்பூத்தின் மகன்- அனரண்யா-2
30. அனரண்யாவின் மகன் - த்ரஷஸ்தஸ்வா
31. த்ரஷஸ்தஸ்வாவின் மகன் ஹர்யஷ்வா 2
32. ஹர்யஷ்வாவின் மகன் -வஸுமான்
33. வஸுமாவின் மகன்- த்ரிதன்வா
34. த்ரிதன்வாவின் மகன் த்ரிஅருணா
35. த்ரிஅருணாவின் மகன் -திரிசங்கு
36. திரிசங்கு வின் மகன் ஹரிசந்திரன்
37. ஹரிசந்திரநநின் மகன் ரோஹிதாஷ்வா
38. ரோஹிதாஷ்வாவின் மகன் ஹரித்
39. ஹரித்தின் மகன் -சன்சு
40. சன்சுவின் மகன் -விஜய்
41. விஜயின் மகன் -ருருக்
42. ருருக்கின் மகன் -வ்ருகா
43. வ்ருகாவின் மகன் -பாஹு
44. பாஹுவின் மகன்- சாஹாரா
45. சாஹாராவின் மகன் -அசமஞ்சன்
46. அசமஞ்சனின் மகன் -அன்ஷுமன்
47. அன்ஷுமனின் மகன் -திலீபன்
48. திலீபனின் மகன்- பகீரதன்
49. பகீரதனின் மகன் -ஷ்ருத்
50. ஷ்ருத்தின் மகன் -நபக்
51. நபக்கின் மகன்- அம்பரீஷ்
52. அம்பரீஷனின் மகன் -சிந்து த்வீப்
53. சிந்து த்வீப்பின் மகன்- ப்ரதயு
54. ப்ரதயுவின் மகன் -ஸ்ருது பர்ணா
55. ஸ்ருது பர்ணாவின் மகன் சர்வகாமா
56. சர்வகாமாவின் மகன்- ஸுதஸ்
57. ஸூதஸின் மகன் -மித்ரஷா
58. மித்ராஷாவின் மகன்- சர்வகாமா 2
59. சர்வகாமாவின் மகன் அனன்ரண்யா3
60. அனன்ரண்யாவின் மகன் -நிக்னா
61. நிக்னாவின் மகன்- ரகு
62. ரகுவின் மகன் -துலிது
63. துலிதுவின் மகன் - கட்வாங் திலீபன்
64. கட்வாங் திலீபனின் மகன் - ரகு2
65. ரகுவின் மகன் - அஜன்
66. அஜனின் மகன் - தசரதன்
67. தசரதனின் மகன்
68. **ஸ்ரீ ரகு ராமன்**

இப்படி 68 பரம்பரை கொண்டது.

ராமாரின் குல வம்சத்தை பற்றி அறிவதே பெரும் புண்ணியம்!!! #ஜெய்ஶ்ரீராம்

நமக்கெல்லாம் 3 தலைமுறை தெரிந்தாலே பெரிசு.

சீதை சொன்ன நீதி....!!!

சீதை சொன்ன நீதி....!!!

மனிதர்களை துன்பம் ஏன் துரத்துகிறது?

நமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும்போது, நாம் அவர்களிடம் கோபம் கொள்கிறோம். பழிக்குப் பழி வாங்கத் துடிக்கிறோம். ஆனால், அது தவறான செயல். நமக்கு ஒரு துன்பம் ஏற்படுகிறது என்றால், அதற்குக் காரணம், நாம் முன் செய்த வினைப்பயன்தான். எனவே, நமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும் போது, நாம் அவரிடம் கோபம் கொள்ளாமலும், பழிக்குப் பழி வாங்க நினைக்காமலும், பொறுத்துக் கொள்ளவேண்டும்.

அசோகவனத்தில் சீதை இருந்தபோது, அவளை அரக்கியர்கள் பலர் துன்பப்படுத்தினர். அதற்காக சீதை அவர்களிடம் கோபம் கொள்ளவில்லை. மிகுந்த பொறுமையுடன் சகித்துக்கொண்டாள். தனக்கு நேரிடும் துன்பங்கள் எல்லாம், தன் வினைப்பயன் காரணமாகவே ஏற்படுகின்றன என்று உறுதியாக நம்பினாள்.

ராவண சம்ஹாரம் முடிந்த பிறகு, அசோகவனத்தில் இருந்த சீதாபிராட்டியாரிடம் விவரம் சொல்ல வந்த அனுமன், பிராட்டியை வணங்கி, ''தாயே, ஶ்ரீராமபிரான் வெற்றி வாகை சூடிவிட்டார். ராவணன் மாண்டான்'' என்று கூறினார்.

அனுமன் கூறியதைக் கேட்டு மகிழ்ந்த சீதை, ''அனுமனே, நான் முன்பொரு முறை உயிர் துறக்க நினைத்த நேரத்தில், நீ வந்து எனக்கு ஆறுதல் கூறி காப்பாற்றினாய். இப்போதும் ராமபிரான் பெற்ற வெற்றிச் செய்தியை நீயே வந்து எனக்குத் தெரிவித்தாய். ஏற்கெனவே உனக்கு நான் சிரஞ்சீவியாக இருக்கும் வரத்தைத் தந்துவிட்டேன். முன்பை விடவும் அதிகம் சந்தோஷம் தரும் செய்தியை இப்போது கொண்டு வந்திருக்கிறாய். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்'' என்றார்.

அதற்கு அனுமன், ''தாயே, எனக்கு ஒரு வரமும் வேண்டியதில்லை. நான் விரும்புவது ஒன்றேதான். கடந்த பல மாதங்களாக உங்களைப் பாடாகப் படுத்திய இந்த அரக்கிகளை, நான் தீயில் இட்டுக் கொளுத்தவேண்டும். அதற்கு தாங்கள் அனுமதிக்கவேண்டும்'' என்று அனுமன் கேட்டுக்கொண்டார்.

ஆனால், அனுமனின் கோரிக்கையில் சீதைக்கு உடன்பாடு இல்லை. எனவே அனுமனைப் பார்த்து, ''அனுமனே, நீ நினைப்பதுபோல் இந்த அரக்கியர் என்னைத் துன்புறுத்தி இருந்தாலும், அதற்காக இவர்களை தண்டிப்பதில் எனக்கு சம்மதம் இல்லை. நான் இப்படி துன்பம் அனுபவிப்பதற்குக் காரணம், நான் முன்பு செய்த செயலின் விளைவுதான். பொன்மானாக வந்த மாயமானுக்கு ஆசைப்பட்டு, அதைப் பிடித்து வர என் கணவரை அனுப்பியதும், சென்ற கணவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராமலும், 'லட்சுமணா, லட்சுமணா' என்று அபயக் குரல் எழுப்பியதாலும், பயந்து போன நான், எனக்குக் காவலாக இருந்த லட்சுமணனை அனுப்பிப் பார்க்கச் சொன்னேன். அவர் என் கணவருக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டிருக்காது என்று மறுத்துக் கூறியும், நான் ஏற்றுக்கொள்ளாமல் சுடுசொற்களால் லட்சுமணனைக் கண்டித்துப் பேசினேன். ஒரு பாவமும் அறியாமல், இரவும் பகலுமாக எங்களைக் கண்ணிமைபோல் காவல் காத்த லட்சுமணனின் மனம் நோகும்படி நான் பேசியதுதான், இங்கே நான் அனுபவித்த துன்பத்துக்குக் காரணம்.

எனவே, நீ அரக்கியர்களை ஒன்றும் செய்துவிடாதே. அவர்கள் அரக்கியர்கள் என்றாலும் பெண்கள். அவர்களுக்குத் தீங்கு செய்து நீ பெரும் பாவத்தைத் தேடிக்கொள்ளாதே'' என்று கூறினார். அனுமன் உண்மையைப் புரிந்துக்கொண்டார்.

நமக்கு மற்றவர்கள் துன்பம் விளைவிக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் நாம் முன் செய்த தீவினைப் பயன்தான் காரணம்.

இதைத்தான் மகாபாரதத்தில் வரும் ஆணிமாண்டவ்யரின் வாழ்க்கையும் நமக்கு உணர்த்துகிறது. சிறுவயதில் அவர் தும்பியின் வாலில் கூரிய முனை கொண்ட தர்ப்பைப் புல்லைச் செருகியதால், பிற்காலத்தில் மன்னன் ஒருவனால் கழுவில் ஏற்றப்பட்டார். மகரிஷியான தனக்கு ஏன் இப்படி ஒரு துன்பம் ஏற்பட்டது என்று ஆணிமாண்டவ்யர் தர்மதேவதையிடம் கேட்டபோது, சிறுவயதில் அவர் தும்பியைத் துன்புறுத்தியதுதான் காரணம் என்று கூறியது.

இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை, 'பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் பிற்பகல் தமக்கின்னா தாமே வரும்' என்று நமக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.

எனவே, நமக்கு ஒருவர் துன்பம் விளைவித்தாலும், நம்மை ஒருவர் பழித்துப் பேசினாலும், அதற்குக் காரணம் நாம் செய்த வினைப்பயன்தான் என்பதை உணர்ந்து, நாம் பதிலுக்கு அவரைப் பழிதீர்க்க நினைக்கக்கூடாது.

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...