1. திருவாடிப்பூரம்🙏🙏🙏🙏🙏🙏
ஆடிப் பூர தினத்தில் தான் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாகிய தமிழை ஆண்ட கோதை ஆண்டாள் இந்த ஜகத்தில் துளசிச் செடியின் கீழ் ஒளி வீசும் முகத்துடன், அழகே உருவாக, திருத்துழாய் எனும் துளசிச்செடியின் கீழ் பூமா தேவியின் வடிவாக அவதரித்தாள்.
ஆடிப்பூரம் என்றாலே ஆண்டாளின் நினைவு வராமல் போகாது. அவள் அருளிச்செய்த திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும் நினைவுக்கு நிச்சயம் வரும்.
அவருடைய அவதாரத் தலமான ஸ்ரீவில்லிபுத்தூர் என்கின்ற ஊர் நினைவுக்கு வராமல் போகாது. அங்கு ஆடி மாதம் பூர நட்சத்திரத்தை ஒட்டி நடக்கும் மிகப்பெரிய ஆண்டாள் உற்சவமும் நினைவுக்குள் வந்துவிடும். ஆண்டாளின் பெருமைகளையும், அவள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரின் சிறப்புக்களையும், அங்கு நடைபெறும் ஆடிப்பூர உற்சவ சிறப்புகளையும், 30 முத்துக்களாகக் காண்போம்.
1) ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீ வில்லிபுத்தூர் பூமிப் பிராட்டியாகிய கோதை பிறந்த ஊர், அவளை அடைய வேண்டும் என்பதற்காக பகவான் ஸ்ரீமன் நாராயணனான கோவிந்தன் வாழும் ஊர், சோதி மணி மாடம் தோன்றும் ஊர், நீதியால் நல்ல பக்தர்கள் வாழும் ஊர், நான் மறைகள் சர்வ காலமும் ஓதும் ஊர், திருமகள் உறைந்து, மனிதர்களின் சகல பாபமும் தீர்க்கும் ஊர், இப்படி ஸ்ரீ வில்லிபுத்தூர் என்று வில்லிபுத்தூரின் பெருமையை ஒரு பாடல் பேசுகிறது;
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர்-நீதியால்
நல்லபத்தர் வாழும்ஊர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்
இந்த ஊரின் பெயர் வில்லிபுத்தூர் என்று எப்படி
வந்தது என்கின்ற பெயர்க் காரணத்தை ஆராய வேண்டும்.
2) வில்லியால் ஆக்கப்பட்ட புதிய ஊர்
இரண்டு முனிவர்கள் பூர்வ வினையால் சபிக்கப்பட்டார்கள். அவர்கள் மனிதர்களாய்ப் பிறக்கும்படி சாபம் வந்தது. அப்போது மல்லி என்கின்ற பெண் இந்த வனப் பகுதியை ஆண்டு வந்தாள்.
அவளுக்கு குமாரர்களாய் இந்த இரண்டு முனிவர்கள் பிறந்தார்கள். ஒருவர் பெயர் வில்லி. மற்றொருவர் பெயர் கண்டன். இவர்கள் இருவரும் வளர்ந்து, பல கலைகளையும் கற்றார்கள்.
ஒரு நாள் வேட்டையாடச் சென்றனர். இதில் கண்டன் என்பவர் வேட்டையாடும் பொழுது ஒரு புலியால் கொல்லப்படுகிறார். அவருடைய உடலை தேடிச்சென்று கண்ட வில்லி, தன் சகோதரர் கண்டனின் மரணத்தைக் கண்டு கதறுகிறார். மனம் கலங்குகிறது.
இறையருளால் மனதில் ஒரு ஒளி ஏற்பட, வைராக்கியத்துடன் அந்தக் காட்டுப் பகுதியை திருத்தி புதிய ஊராக ஆக்குகின்றார். வில்லியால் ஆக்கப்பட்ட புதிய ஊர் என்பதால் அதற்கு வில்லிபுத்தூர் என்று பெயர் சூட்டப்படுகிறது.
3) வராக க்ஷேத்திரம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒரு, வராக சேத்திரம். தமிழ்நாட்டில் மிகப்பழமையான திருத்தலங்கள் வராக அவதாரத்தை ஒட்டியே ஏற்பட்டுள்ளன.
அதில் ஒரு தலம் ஸ்ரீவில்லிபுத்தூர். ஆண்டாளின் அவதாரத்திற்கு வராகப்பெருமாள் தான் காரணம். வராக புராண கதையில் இருந்துதான் ஆண்டாளின் அவதார ரகசியம் தெரிகிறது.
4) ஆண்டாள் அவதாரம் ஏன்?
இரண்யாட்சன் என்னும் அசுரன் பூமியை கடலுக்குள் ஒளித்து வைக்க, பூமி பிராட்டியும், பூமியில் உள்ளவர்களும் மிகவும் துன்பப்படுகின்றார்கள்.
ஸ்ரீமன் நாராயணன், வராகப் பெருமாளாக, அவதாரம் எடுத்து, பூமியை மீட்டு எடுக்கிறார்.
“நீல வரை இரண்டு
பிறை கவ்வி நிமிர்ந்ததொப்ப,
கோல வராகம் ஒன்றாய்,
நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய்,
நீலகடல் கடைந்தாய்''
என்று இந்த நிகழ்வை நம்மாழ்வார் பாசுரம் தெரிவிக்கிறது.
அப்போது பூமி பிராட்டி, இந்த உலகமக்கள் உய்வு பெற எளிய வழி ஏதாவது இருக்கிறதா என்று வராகப்பெருமாளிடம் கேட்க, வராகப் பெருமாள் மூன்று எளிய வழிகளை உபதேசம் செய்கிறார்.
1. பகவானுடைய திருநாமங்களைப் பாடுவது.
2. எளிய பூக்களால் அவனுக்கு அர்ச்சனை செய்வது.
3. அவனைத் தவிர வேறு வழி இல்லை என்ற தூய்மையான மனதோடு அவனிடம் ஆத்ம சமர்ப்பணம் செய்வது
No comments:
Post a Comment