Tuesday, November 21, 2023

நான்கு_செயல்களை மனிதன் தினமும் தவறாமல் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்

 #நான்கு_செயல்களை மனிதன் தினமும் தவறாமல் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.


• 1. துயிலெழும்போது ஹரி ஹரி என்று எழுந்திருக்கவேண்டும் ('உத்திஷ்ட சிந்தய ஹரிம்').


• 2. குளிக்கும்போது கேசவனின் நாமம் சொல்லி குளிக்க வேண்டும் ('வ்ரஜன் சிந்தய கேசவம்').


• 3. உண்ணும்போது கோவிந்தனை மனதில் நினைத்து உண்ண வேண்டும் ('புஞ்சன் சிந்தய கோவிந்தம்'). 


• 4. தூங்க போகும் முன் மாதவனை நினைக்க வேண்டும் ('ஸ்வபன் சிந்தய மாதவம்') . 


இந்த நான்கு செயல்களையும் செய்வதால் எவருக்கும் எந்தவிதமான கஷ்டமோ நஷ்டமோ கிடையாது. மாறாக அமைதியான வாழ்க்கை நிச்சயமாக கிட்டும். 


இந்த நான்கு செயல்களையும் மக்கள் முந்தைய காலத்தில் தவறாமல் செய்து வந்தனர் என்பதை விளக்குமாப்போல ஆண்டாள் நாச்சியார் கோதையின் கீதை (திருப்பாவை பாசுரங்கள்) திகழ்கிறது.


1. துயில் எழும்போது ஹரி ஹரி என்பது புள்ளும் சிலம்பின்காண் என்கிற பாசுரத்தில் உள்ளத்துக்கொண்டு ''முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து ஹரி என்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ'' (பாசுரம் - 6) என்கிறார்.


2. பெண்கள் எல்லாம் வந்து நாட்காலே நீராடி வந்து விட்டார்கள். தற்சமயம் தயிர் கடைந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் கேசவனைப் பாடுதல் உன்காதில் விழவில்லையா?

"கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?" (பாசுரம் - 7).


3. பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார கூடியிருந்து உண்பவர்கள் கூடாரை வெல்பவராகிய கோவிந்தனைப் பாடுகிறார்கள் (பாசுரம் - 27).


4. நன்கு தூங்க வேண்டுமானால் மாதவன் பெயரைச் சொல்லி இருப்பாள் போல் இருக்கிறது இந்தப் பெண். ஏமப் பெரும் துயில் மந்திரப் பட்டாளோ, மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோ (பாசுரம் - 9).


 மனிதன் தினசரி தவறாமல் செய்ய வேண்டிய செயல்களை, கோதை நாச்சியார் தனது திருப்பாவை பாசுரங்களில், மேற்கண்டவாறு

சுட்டிக் காட்டியுள்ளதை வைணவப் பெரியோர்கள் நமக்கு உணர்த்துகின்றனர்.


இவ்வாறு 'ஸ்ரீமத் பகவத் கீதை' சாஸ்திரத்திற்கு இணையான பெருமை இந்த பகவதி கீதைக்கும் உண்டென்பதை இக்கட்டுரைத் தொடரின் இறுதியில் நாம் உணரலாம்.


பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்

வேதமனைத்துக்கும் வித்தாகும் – கோதைதமிழ் ஐயைந்தும் மைந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு என்று வேதப்பிரான் பட்டர் ஸ்வாமிகள் என்னும் வைணவ ஆச்சார்யர் அருளுகிறார். 


எவரையேனும் எதற்கும் ப்ரயோஜனம் இல்லாதவர்கள் என்று கருதினால் அவர்களை 'பூமிக்கு பாரம்' என்று திட்டுவார்கள். ஆனால் உண்மையில் பூமிக்கு பாரம் ஆனவர்கள் யார் என்பதை குறிப்பிடும் போது கோதைத் தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரே ஆவார். 


கோதை ஆண்டாள் நாச்சியார் பாடிக்கொடுத்த திருப்பாவை ஐந்தும் ஐந்தும் (5x5+5=30) அதாவது 30 பாடல்களையும் அறியாத மானிடர்களைத்தான் 'பூமிக்கு பாரம்' என்று கணக்கிட்டுள்ளார். 


நாம் எவரும் பூமிக்கு பாரமாக இருக்க விரும்ப மாட்டோம். ஆகவே கோதையின் கீதையை பின்பற்றிச் செல்லுவோம்....


ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் !

No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...