Thursday, September 13, 2018

அருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோவில்

🌺🌺 108 திவ்யதேசங்கள் 🌺🌺

அருள்மிகு திருநறையூர் நம்பி  திருக்கோவில் :-
திருநறையூர் (நாச்சியார் கோவில்)

மூலவர்           :     சீனிவாசன், திருநறையூர் நம்பி, சுகந்தவனநாதன்.

தாயார்            :     வஞ்சுளவல்லி, நம்பிக்கை நாச்சியார்

உற்சவர்         :     வாசுதேவன்

கோலம்          :      நின்ற திருக்கோலம்

திசை             :      கிழக்கு

விமானம்      :      சீனிவாச விமானம், ஹேம விமானம்

தீர்த்தம்         :      மணி முத்தா புட்கரணி

மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார்

நாமாவளி      :  ஸ்ரீ நம்பிக்கை நாச்சியார் ஸ்ரீ வஞ்சுளவல்லி ஸமேத ஸ்ரீ நம்பிஸ்வாமிநே நமஹ

ஊர்              :     நாச்சியார் கோவில்

🌺🌺 தலவரலாறு :-

சோழர் பரம்பரையில் வந்துதித்த மிகச் சிறந்த சிவ பக்தனும், 63 நாயன்மார்களில் ஒருவனுமான, எண்டோள் ஈசர்க்கு எழில்மாடம் எழுபது அமைத்த "கோச்செங்கட்சோழன்" கட்டிய வைணவத் திருத்தலம் "திருநறையூர்" என்பது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

கோச்செங்கட்சோழன் இத்தலம் வந்து வழிபட்ட சம்பவங்கள், நாயன்மார்கள் வரலாற்றைக் கூறும் "சேக்கிழார் பெரியபுராணத்தில்" பதிவாகவில்லை.

🌺🌺 பாசுரம் :-

ஆயினும், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் இத்தல இறைவன் மீது பாடிய பாசுரங்களில் தெளிவாகப் பாடியுள்ளார்.  கல்வெட்டுகளும் அதை உறுதி செய்கிறது.

இருக்கிலங்கு திருமொழிவா
யெண்டோ ளீசற்கு
எழில்மாடம் எழுபது செய்(து)
உலகமாண்ட
திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த
கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்
களே.          - திருமங்கையாழ்வார்.

🌺🌺 திருமாலை வணங்கிய நாயன்மார் :-

சிறந்த சிவ பக்தனாகவும், அரசனாகவும் விளங்கிய இம்மாமன்னன் மாற்றாரிடம் தோற்று நாடு இழந்து, மறைந்து வாழும் நிலை வந்தது.  அச்சமயத்தில் ஒரு நாள்  மணி முத்தா நதிக்கரையிலிருந்த முனிவர்களைக் கண்டு வணங்கி தன்னுடைய குறையை எடுத்துக் கூறினான்.

அதற்கு, முனிவர்கள் திருநறையூர் நம்பி திருத்தலத்தில் பெரிய வாள் ஒன்று உள்ளது. பரந்தாமனான நம்பியை வழிபட்டு அவ்வாளினைக் கொண்டு போர் புரிந்தால் வெற்றி காண்பாய் என்று உபதேசம் செய்தனர்.

அவ்வாறே, மணிமுத்தா நதியில் நீராடி இத்தல நம்பியை வணங்கி  தெய்வ வாளினைப்   பெற்று வெற்றி வாகை  சூடி வைணவ பக்தனாகவும் மாறினான்.

இப்பெருமாளின் முக்கிய பூஜைக்கு நிலம் அளித்தான்.  இம்மன்னன் நம்பியின் மீது கொண்ட பக்தியையும், தெய்வ வாள் பெற்றதையும், திருமங்கையாழ்வார் தாம் பாடிய திருமொழியில் அழகாகப் பாடியுள்ளார்.

கோச்செங்கட்சோழன் பிரம்மாண்டமான முறையில் கோவில் அமைத்தான்.  அப்போது இவ்வூர் "நறையூர்" என்று பெயர் பெற்று விளங்கியது. அதனால், இத்தல இறைவனுக்கு "திருநறையூர் நம்பி" என்பதோ திருநாமம். 

பிற்காலத்தில் "சீனிவாசப் பெருமாள்" என்ற திருநாமம் பெற்றார். இறைவனுடன் உறையும் திருமகள் தாயாருக்கு வஞ்சுளவல்லி தாயார் என்பது திருநாமம்.

🌺🌺நாச்சியார் கோவில் :-

இங்கு தாயாரே சிறப்பு பெற்று விளங்குவதால் இத்தலம் "நாச்சியார் கோவில்" எனப் பெயர் பெற்றது.  பெருமாள் கோவில்களில் தாயார் சன்னிதி பெருமாளை விட சற்று பின்னோக்கி அமைந்திருக்கும். 

ஆனால், இத்தலத்தில் சிவாலயங்களில் அம்பாள் சன்னிதி  அமைந்திருப்பதைப் போல தாயார் சற்று முன்நோக்கி நின்ற கோலத்தில் பெருமாளின் சன்னிதியிலேயே காட்சி தந்து அருளுவது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

இதன் காரணமாகவே இத்தலம் நாச்சியார் கோவில் எனப் பெயர் பெற்றோ விளங்குகிறது.

🌺🌺 கல் கருடசேவை :-

பெருமாள் கோவில் திருவிழாக்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது "கல் கருட சேவை". இங்கு பெருமாள் கல் கருட வாகனத்தில் திருவீதியுலா வருவது எந்த திருத்தலத்திலும் காணமுடியாத தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

இங்கு கல் கருடன் மூலவராகவும், உற்சவராகவும் விளங்குகிறார்.  உற்சவராக கருடன் பெருமாளைத் தாங்கி திருவீதி உலா வரும்போது அற்புதம் ஒன்று நிகழ்கிறது.

கல் கருட உற்சவர், சன்னிதியில் இருந்து தூக்கிச் செல்லும் பொழுது கனமானது, பாதம் தாங்கிகளில் நான்கு நபர்களாலேயே தூக்கி விடக்கூடிய அளவிலேயே இருக்கும். 

இம்மூர்த்தி பிரகாரம் ஒவ்வொன்றைக் கடக்கும்பொழுது கல்கருடனனின் கனம் அதிகரித்துக் கொண்டே வருவதால், தான்கு பேர் என்பது 8, 16, 32, 64 மற்றும் 128 என்பதாகப் பாதந்தாங்கிகளின் எண்ணிக்கை உயரும்.

உற்சவம் நிறைவாகி மீண்டும் சன்னதியை அடைய வரும்போது, இதே கல் கருடனின் கனம் குறைந்து கொண்டே வருவதால் 138 பாதந்தாங்கிகள் என்பது 64, 32, 16, 8 என்று குறைந்து சன்னிதியை அடையும் போது 4பாதந்தாங்கிகள் என்ற கணக்கில் முடிவுறும்.

கருட சேவை உற்சவத்தின் போது பெருமாளுடன் வஞ்சுளவல்லி தாயார் அன்ன வாகனத்தில் எழுந்தருளி திருவீதியுலா வருகின்றனர்.

🌺🌺 சிறப்புகள் :-

வைகுண்ட வாசனான கண்ண பரமாத்மா குடும்பத்துடன் காட்சி தந்து அருளும் அற்புதத்தலம்.  63 நாயன்மார்களில் ஒருவரான கோச்செங்கட் சோழன் நாயனாரால் அமைக்கப்பட்ட திவ்யதேசம்.

இறைவன் திருநறையூர் நம்பி கல்கருட வாகனத்தில் உற்சவம் எழுந்தருளும் ஒரே திவ்யதேசம்.   தாயார் திருமகள் வஞ்சுளவல்லி என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம்.

பெருமாள் கல்கருட வாகனத்தில் வீதியுலா வரும் சிறப்பு வாய்ந்த திருத்தலம். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் திருநறையூர் நம்பியின் சக்கரங்களைக் கொண்டு பஞ்ச ஸமஸ்காரங்களைச் செய்து கொண்ட திருத்தலம்.

திருமங்கையாழ்வார் 111 பாசுரங்கள் பாடியருளிய திவ்யதேசம்.

🌺🌺 வழித்தடம் :-

கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் குடந்தையிலிருந்து 10 கி.மீ தொலைவில் நாச்சியார் கோவில் உள்ளது.  ஏராளமான பேருந்துகள் செல்கின்றன.

அருள்மிகு திருநறையூர் நம்பி திருவடிகளே சரணம்.
அருள்மிகு வஞ்சுளவல்லி தாயார் திருவடிகளே சரணம்

"ஓம் நமோ நாராயணாய நமஹ".

No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...