Friday, September 4, 2020

நாராயண நாராயண ... !!!

நாராயண நாராயண ... !!!

உள்ளதற்கெல்லாம் உறைவிடமாகியவர். 'நர:' என்றால் ஆன்மா. அதனிலிருந்து உண்டானவையெல்லாம் 'நாரா:' எனப்படும். அவைகட்கு 'அயனம்', அதாவது இருப்பிடம். அவைகளில் எல்லாவற்றிலும் உள்ளிலும் வெளியும் நிறைந்திருப்பவர் ஆதலால் 'நாராயணன்'.
இன்னும் விளக்கமாகச் சொல்லப் போனால்,ஆன்மாவிலிருந்து வெளி, வெளியிலிருந்து காற்று, காற்றிலிருந்து தீ, தீயிலிருந்து நீர், நீரிலிருந்து நிலம் -- இதுதான் படைப்பு வரிசை.இப்படி விளக்கம் பெற்று வெளியானதே இவ்வுலகம்.இது ஆன்மா எனப் பொருள்படும் 'நர'னிலிருந்து உண்டானதால் 'நாரம்'.நாரத்தை இருப்பிடமாகக் கொண்டவர் 'நாரயணன்'.

வெளி முதலிய ஐந்து பெரும்பூதங்களும் ஒன்றோடொன்று நன்கு கலந்து வெளித் தோற்றம் பெறுமுன்னர், தனித்தனியாக இருந்தன.அவைகளுக்கு 'காரணோதகம்' அல்லது 'அப்பு' என்று பெயர். அம்மூல தத்துவங்களில் உட்புகுந்து அவற்றைத் தன்னிடமாகக் கொண்டு படைப்பைத் தொடங்கியவர் 'நாராயணன்'
வடமொழி இலக்கணத்தில் 'தத்புருஷ-ஸமாஸம்' (வேற்றுமைப்புணர்ச்சி), 'பஹுவ்ரீஹி ஸமாஸம்' (அன்மொழித்தொகை) என்று இருவித சொற்புணர்ச்சிகள் உண்டு. 'நாராயண' என்ற சொல், 'நர' , 'அயன' ஆகிய இரண்டு சொற்களைக் கொண்டு சேர்க்கும்போது, இரண்டுவிதமாகவும் சேரும்.

நாராணாம் அயனம் அதாவது, நாரங்களுக்கு அயனம், என்பது முதல் வகை.

நாரா: அயனம் யஸ்ய ஸ:, அதாவது 'நாரங்களை அயனமாக (நுழையப்படும் பொருளாக) உடையவர்' என்பது இரண்டாவது வகை.

உயிருள்ளவை, உயிரில்லாதவை இரண்டும் இல்லாத இடத்திலும் அவன் உளன் --இது முதல் வகைப் புணர்ச்சியினால் ஏற்படும் பொருள். இதை 'புறப்பரவல்' ('பஹிர்-வ்யாப்தி) என்று வேதாந்தத்தில் கூறுவர்.

உயிருள்ளவையோ, உயிரில்லாதவையோ, உள்ள இடத்தில் தான் இல்லை என எண்ணவொண்ணாதபடி அவன் கலந்து நிற்கிறான் -- இது இரண்டாவது வகைப் புணர்ச்சியினால் ஏற்படும் பொருள். இதை 'உள்ளுறைதல்' ('அந்தர்-வ்யாப்தி) என்று வேதாந்தத்தில் கூறுவர்.

No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...