Tuesday, April 10, 2018

திருவோண_விரதம்

🍀#திருவோண_விரதம்🍀
-
🍀#திருவோணம் நோன்பு என்பது, திருவோண நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் நோற்கும் நோன்பாகும். இந்த விரதம் பெருமாளுக்கு உகந்தது. ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்குரிய #திருவோணமும், சிவனுக்குரிய 🍀#திருவாதிரையும் மட்டுமே ‘‘திரு’’ என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது. தசாவதாரங்களில் வாமன அவதாரம் எடுத்த பெருமாள், மாவலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்ட நிகழ்வு, திருவோண நட்சத்திரத்தன்று தான் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.🍀
-
🍀மாவலி சக்கரவர்த்திக்கு முக்திப் பேற்றினை வழங்கிய திருவோணத்தன்று, மக்கள் வாழ்வில் அனைத்து நலனும் பெற வேண்டி பெருமாளை நோக்கி விரதம் இருந்து வழிபடுகின்றனர். சந்தோஷ வாழ்வு அருளும் திருவோண விரதத்தை கேரள மக்கள் ‘ஓணம் பண்டிகையாக" கொண்டாடி மகிழ்கின்றனர்.🍀
-
🍀திருவிண்ணகர் எனப்படும் ஒப்பிலியப்பன் கோவிலில் குடிகொண்டிருக்கும் ஒப்பில்லா அப்பனான ஒப்பிலியப்பன், திருப்பதி பாலாஜியின் அண்ணனாவார். ஒரு முறை மகாலக்ஷ்மியின் ஒரு அம்சமான பூமாதேவி, தானும் பெருமாளின் மார்பில் இடம் பெற வேண்டியபோது, பூமியில் மார்கண்டேய மகரிஷியின் மகளாக பிறக்க அருள் புரிந்தார் விஷ்ணு.🍀
-
🍀மார்கண்டேய மகரிஷியிடம் அவர் மகளாகப் பிறந்துள்ள “துளசி“ யை மணமுடித்து தரச்சொல்லி வேண்டினார் வயதான தோற்றத்தில் வந்த மகாவிஷ்ணு. அந்தக் கிழவருக்கு தன் சிறிய வயது மகளை கொடுக்க விருப்பமில்லாமல், “என் மகளுக்கு சரியாக உப்பு போட்டு கூட சமைக்கத் தெரியாது. அவளைத் திருமணம் செய்தால் உங்களுக்கு சௌகரியப்படாது“ என்று ஏதோ ஒரு காரணத்தை கூறி மறுத்தவரிடம், பெருமாளோ“ அதனால் என்ன, இனிமேல் நான் உப்பே போடாமல் அனைத்தையும் உண்கிறேன்“ என்று வாக்களித்து, விடாமல் பூமாதேவியை மணந்து கொண்டு விட்டார்.🍀
-
🍀அதன் பிறகே, வந்தவர் மகாவிஷ்ணு என்பதை அறிந்த மகரிஷி, மகிழ்ச்சி அடைந்தார். இதனால் அன்றிலிருந்து உப்பிலியப்பன் - உப்பு இல்லாத அப்பன் என்றும் அழைக்கப்பட்டு, அந்தக் கோவிலில் படைக்கப்படும் எந்த ஒரு உணவிலும் உப்பு சேர்க்கப்படுவதில்லை. விஷ்ணு பெண் கேட்டு வந்த நாள், பங்குனி மாத திருவோண நட்சத்திரம். பெருமாளுக்கும் துளசி என்னும் பூமாதேவிக்கும் திருமணம் நடந்தது, ஐப்பசி மாத திருவோணத்தில்.🍀
-
🍀இதனால் ஒவ்வொரு மாத திருவோண (ஸ்ரவண) நட்ச்சதிரத்தன்று, இக்கோவிலில் அகண்ட தீபம், வால் தீபம் ஆகியவை ஏற்றப்படுகின்றன. இதை தரிசிக்கும் மக்களுக்கு குறைவில்லாத செல்வமும், அனைத்துத் துயர்களும் நீங்குமென்றும் நம்பிக்கை உள்ளது. இதனால் ஒவ்வொரு ஸ்ரவண (திருவோண) நட்சத்திரத்திற்கும் விரதம் இருந்து வேண்டியதைப் பெறலாம் .ஏதேனும் வேண்டுதல் வைத்து, குறிப்பிட்ட சில மாதங்களுக்கோ அல்லது வாழ்நாள் முழுவதும், ஒவ்வொரு மாத ஸ்ரவண நட்சதிரத்தன்றோ விரதம் இருக்கலாம்.🍀
-
🍀திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச்செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷ வாழ்வு மலரும். பெண்கள் விரும்பியதை அடைவர். திருமணம் தாமதமாகி வந்தவர்களுக்கு விரைவில் வரன் அமையும். நீண்ட காலம் குழந்தை இல்லாதவர்கள் குறைநீங்கி குழந்தைப்பேறு உண்டாகும். நீங்காத செல்வம் நிலைத்து நிற்கும்.🍀
-
-
|| ----------- 🍀ஓம் நமோ நாராயணாய🍀 ----------- ||

No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...