காணும் இடமெல்லாம் வேங்கடம்...
வேங்கடம் சென்றடைந்தேன்;
வேங்குழலோடு அவன் நின்றான்!
எங்கெல்லாம் காணப்புக்கினும்−
அங்கெல்லாம், ஆயனாய், அவன் சிரித்தான்!
பாவைக்கு அவன், கண்ணனாய்
தெரிந்தானே!
பார்வையில் தான், மாறுபாடோ?
பரிதவித்து நான் இருக்க−ஒரு
புரிதலுடன், அவன் சிரித்தான்!
காதலிலே விழுந்தார்க்கு−
காண்பதெல்லாம் ஓர் உருவம்;
கன்னி நான் விழுந்ததுவோ,
கண்ணன் எனும் அதி மதுரம்!
மீண்டு வர ஆசையில்லை;
மோகக் கடல் மூழ்கி விட்டேன்!
மாதவனை என் மனச்சிறையில்−
மயக்கத்தொடு, ஒளித்து விட்டேன்!
என்னை நானும் இழந்ததனால்,
எங்கும் அவனாய், காட்சித் தந்தான்;
கண்ணின் தவறு ஏதும் இல்லை−
கண்ணன் என்னில் கலந்து விட்டான்!
No comments:
Post a Comment