
#பூக்களாலும் தமிழ்ப் பாக்களாலும் பரந்தாமனை ஆண்டாள்!
-
பூக்களாலும் தமிழ்ப் பாக்களாலும் பரந்தாமனை ஆண்டாள்! அதனால்தான். 'திருவாடிப் பூரத்து ஜகத்துதித்தாள் வாழியே' என்று வேதப் பிரான் பட்டர் பாடி இருக்கிறார். அவரே, 'கோதை பிறந்த ஊர் #கோவிந்தன் வாழும் ஊர்' என்று #கோதை பிறந்த ஊர்தான் #கோவிந்தன் என்னும் இறைவன் வாழும் ஊர் என்றும் போற்றி இருக்கிறார். இதில் ஒரு மறைபொருளும் உண்டு. #கோவிந்தன் என்னும் இறைவன் எங்கெல்லாம் இருப்பான் என்று கேட்டால், கோதையைப் போன்று #பிரேம #பக்தியில்திளைத்திருக்கும் பக்தர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் #இருப்பான் என்றும் கொள்ளலாம்.
-
பக்தர்களில் #இரண்டு #ரகம் உண்டு. பகவானிடம் தனக்கு, 'அது #வேண்டும், #இது #வேண்டும்' என்று கேட்கும் பக்தர்கள் ஒரு வகை என்றால், #பகவானே#வேண்டும் என்று விரும்பும் பக்தர்கள் ஒரு வகை. பகவானே வேண்டும் என்றால், பகவானின் திருவடிகளில் ஐக்கியமாகிவிட வேண்டும் என்றுதான் பொருள்.
-
ஆனால், ஆண்டாளைப் பொறுத்தவரை, அவள் சாட்சாத் மகாலட்சுமியின் அம்சம் என்பதால், பகவானை தன் மணாளனாக வரித்துக்கொண்டாள்.
-
தமிழக அரசின் சின்னமாகத் திகழும் கோபுரம் அமைந்திருக்கும் ஶ்ரீவில்லிபுத்தூர் திருத்தலம்தான் ஆண்டாள் அவதரித்த திருத்தலம்.
அந்தத் தலத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய வடபத்ரசாயி கோயிலில் பகவானின் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருந்தவர்தான் விஷ்ணுசித்தர் என்னும் பெரியாழ்வார்.
-
தினமும் நறுமணப் பூக்களும் துளசிச் செடிகளும் பூத்துக் குலுங்கும் நந்தவனத்துக்குச் சென்று மலர்களைப் பறித்து, பூமாலையாகக் கட்டி இறைவனுக்குச் அணிவிப்பதை தனது தலையாய கடமையாகக் கொண்டு வாழ்ந்திருந்தார்.
-
ஒரு நாள் நந்தவனச்செடிகளுக்கு நீர் வார்த்துக் கொண்டிருந்த வேளையில், துளசிச் செடிகளுக்கு நடுவே உலகத்து அழகையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து பிறந்தது போல் ஒரு பச்சிளம் குழந்தையைக் கண்டார்.
-
அன்று முதல் அந்தக் குழந்தையை தனது மகளாக பாவித்து, பாராட்டி சீராட்டி பாசத்துடன் வளர்த்து வந்தார். 'கோதை' என்ற பெயரில் அந்தக் குழந்தை குதூகலமாக பெரியாழ்வாரின் மடியிலும் பெருமாளின் பக்தியிலும் திளைத்து வளர்ந்து வந்தது. பெரியாழ்வாரோடு சேர்ந்து கோதையும் பூக்களைப் பறித்து வந்து கொடுப்பாள்.
-
சிறுமியாக இருந்த கோதை மணப் பருவம் வந்தடைந்தபோதும் சதா சர்வ காலமும் பெருமாளின் நினைவுதான். நாளாக நாளாக பெருமாளையே தன் மணாளனாகக் கொண்டு மணம் செய்ய ஆசையும் ஏக்கமும் அடைந்தாள். எம்பெருமானின் மகிமைகளை எண்ணி எண்ணி மகிழ்ந்தாள்.
-
#ஸ்ரீவில்லிபுத்தூர்க் கோயிலுக்கு நித்யப்படி பெருமாளுக்கு மாலை கட்டி சாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படி அவர் கட்டி வைத்திருந்த மாலையை, கோதை ஒரு நாள் தற்செயலாக அணிந்து கண்ணாடி முன் நின்று தன் அழகை தானே ரசித்துப் பார்த்தாள். அப்போது தன்னோடு பெருமாளையும் சேர்த்துப் பார்த்து ரசித்தாள். அதில் அவளுக்கு அளவற்ற ஆனந்தம் ஏற்படவே, தினமும் பெருமாளுக்கு பெரியாழ்வார் தொடுத்து வைக்கும் மாலையை அணிந்துகொள்வதை வழக்கமாகவே கொண்டாள். இந்தச் சம்பவம் எதுவும் பெரியாழ்வாருக்குத் தெரியாது. எத்தனை நாள் இந்தச் சம்பவம் நடந்தது என்பது ஆண்டாளுக்கும் வடபத்ரசாயிக்கும்தான் வெளிச்சம்! ஆனால், ஆண்டாளுக்கு
பகவானிடம் இருக்கும் பிரேம பக்தி உலகத்துக்குத் தெரியவேண்டுமே!
-
ஒருநாள் மாலையைக் கட்டி வைத்துவிட்டு ஒரு வேலையாக வெளியே சென்றவர், சற்று நேரத்தில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் கண்ட காட்சி, அவருடைய மனதை மிகவும் வேதனைப் படுத்தியதுடன், செல்லமாக சீராட்டி பாராட்டி வளர்த்த கோதையிடம் கோபம் கொள்ளவும் வைத்தது.
-
'ஒருவர் அணிந்த மாலையை பெருமாளுக்கு அணிவிக்கக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா?' என்று செல்ல மகளை கோபித்துக்கொள்ளவும் செய்தார். அன்றைக்கு அவரால் பெருமாளுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்ய இயலாமல் போய்விட்டது. கோதையின் செயலால் மனம் தளர்ந்து சோர்ந்த நிலையில் அப்படியே உறங்கியும் விட்டார்.
ஆழ்ந்த நித்திரையில் இருந்தவரின் கனவில் தோன்றிய பெருமாள், 'ஏன் எனக்கு பூமாலை சாத்தவில்லை?' என்று ஏதும் அறியாதவர்போல் கேட்டார்.
-
'சுவாமி, தாங்கள் அறியாததும் உண்டா என்ன? ஒருவர் சூடிய மாலையை தங்களுக்கு எப்படி அணிவிக்க முடியும்? அதனால்தான் கோதை சூடிய மாலையை தங்களுக்கு என்னால் அணிவிக்க முடியாமல் போய்விட்டது. அந்த வருத்தத்தில் அப்படியே உறங்கிவிட்டேன்' என்று கூறினார்.
-
#ஆழ்வாரின் வார்த்தைகளைக் கேட்ட பெருமாள் மெள்ள புன்னகைத்தபடியே, 'விஷ்ணுசித்தரே, நீர் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆண்டாள் என்னிடம் கொண்டிருக்கும் பிரேமை மகத்தானது. அவள் சூடிக்களையும் மாலையில்தான் நறுமணம் அதிகமாகக் கமழ்கிறது. இனி, ஆண்டாள் சூடித் தரும் மாலையையே எனக்கு அணிவிப்பாயாக' என்று கூறி மறைந்தார்.
மெய்சிலிர்த்துப் போன பெரியாழ்வார், உறக்கத்தில் இருந்து எழுந்துகொண்டார்.
-
தம்மிடம் வளரும் பெண் சாதாரண பெண் அல்ல, மகாலட்சுமியின் அம்சம் என்பதைப் புரிந்துகொண்டார். மகாலட்சுமி தேவியைத் தன் மகளாக வளர்க்கும் பாக்கியம் தனக்குக் கிடைத்ததை எண்ணி பூரித்துப் போனார்.
-
துவாபரயுகத்தில் பிரேம பக்தியின் மகிமையை உணர்த்த ராதா தேவி இருந்ததைப் போல், இந்தக் கலியுகத்தில் பிரேம பக்தியின் மகத்துவத்தை நமக்கெல்லாம் உணர்த்த மகாலட்சுமி தேவியே ஆண்டாளாக அவதரித்து, சூடியும் பாடியும் கொடுத்து, பரந்தாமனை ஆண்டதுடன், தூய தமிழ்ப் பாக்களால் நம்மையும் ஆண்டு, நல்ல வழியில் நம்மை நடத்திச் செல்கிறாள்!
No comments:
Post a Comment